பலா பட்டறை: விதிமுறைகள் மீறுவதர்க்குத்தான்

விதிமுறைகள் மீறுவதர்க்குத்தான்



விதிமுறைகள் மீறுவதர்க்குத்தான் (rules are meant to be broken) என்பது (நமக்கே உடன்பாடில்லை என்றாலும் பனை மரம் கீழே நின்று பால் குடித்த கதையாக) பல சமயங்களில் நம்மையும் குற்றவாளியாகுகிறது.

சாலையில் சிவப்பு விளக்கு எரிய போகும்போது வண்டியை நிறுத்த நினைத்தாலும் பின்னால் அசுர வேகத்தில் காதை பிளக்கும் ஹாரன் சத்தத்துடன் வரும் வண்டிகளை ரியர் வியூ கண்ணாடியில் பார்க்கும்போது எங்கே இடித்து விடுவார்களோ என்ற பயத்திலும் நிற்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில், நிற்க வேண்டிய கோட்டை தாண்டி நிற்கும்போதோ அல்லது சரி போய் விடலாம் என்று நினைக்கும்போதோ - இரண்டு விஷயங்கள் கண்டிப்பாக நடக்கும்.

ஒன்று - போக்குவரத்து காவலரிடம் வகையாக மாட்டிக்கொண்டு தண்டம் அழ வேண்டி இருக்கும் அல்லது வேறு வழியிலிருந்து வரும் வண்டி ஒட்டியையோ, சாலையை கடக்கும் நபரையோ இடிக்கவேண்டி இருக்கும் நிச்சயமாக வசவுகள் காதில் விழும்.

இரண்டு - நாம் பயந்த வேகமாய் வந்த வாகன ஒட்டி நல்ல மனிதராய் சிக்னல்லில் நின்றிருக்க நாம் தான் என்னவோ தவறு செய்ய வந்தவன் போல கோட்டை தாண்டி கேட்ட பெயர் வாங்குவோம். என்னதான் ஒருவர் சிக்னல் விழபோகிறது என்று கையை காலை நீட்டி சைகை காமித்து வண்டியை நிறுத்தினாலும், பின்னால் வேகமாய் வரும் கும்பல் திருந்துவதாய் இல்லை. இதில் அதிகம் பாதிக்கப்படுவது ஒழுங்காய் வாகனத்தில் செல்ல நினைப்பவர்கள் தான். அதிலும் புதிய பெரிய புறவழி (bypass) சாலைகளை குறுக்காக கடக்க நேர்ந்தால் கனரக வாகனங்கள் மதிக்காமல் செல்லும் கொடுமை ரொம்பவும் மோசம். ஒருமுறை வெளிநாட்டிலிருந்து வாகன பயிற்சி மற்றும் ஓட்டுனர் செயல்திறன் பற்றி சோதிக்க வந்த வெளிநாட்டு நண்பர் என்னிடம் சொன்னது " உங்கள் ஊரில் வாகனம் ஓட்ட நான் சொல்லிகுடுப்பதை விட எப்படி ஓட்டகூடாது என்று நான் நிறைய கற்றுக்கொண்டேன்" என்றார்.

இப்போது கல்லூரி யுவதிகள் கூட தலைகவசம் அணியாமல், மேலாடை பறக்க அதி வேகத்தில், சிறிய சக்கரமுள்ள இரு சக்கர வாகனத்தில் பறக்கும்போது எனக்குதான் திக் என்று இருக்கும். சிறிய சறுக்கலில் விழுந்தால் கூட, தலையில் அடி பட்டால் அதன் பாதிப்பு மிகவும் கொடுமையானது.

மழையில் வேகமாய் போனபோது, பெட்ரோல் டான்க் கவரில் வைத்திருந்த செல் பேசியின் சார்ஜெர் மெல்ல நழுவி முன்சக்கரத்தில் மாட்டி தலை குப்புற விழுந்து மண்டையில் அடிபட்டு மயங்கி விழுந்த என் நண்பரை சில நல்ல உள்ளங்கள் தக்க நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்ததால் உயிர் பிழைத்தார், அன்று மட்டும் அவர் ஒரு தலை கவசத்துடன் மிதமான வேகத்தில் சென்றிருந்தால் அதே நிகழ்வு அவரை சிறு காயங்களுடன் வீடு சேர்த்திருக்கும்.


0 comments: