பலா பட்டறை: பாலிசி...பாகம்-2.

பாலிசி...பாகம்-2.




பாலிசி - பாகம் ஒன்று (படிக்காதவர்களுக்கு)

நிறைய விஷயங்கள் போன பதிவில் சொல்ல முடியவில்லை, அதுவே மிகவும் பெரிய பதிவாக போய்விட்டது.:( சரி சில முக்கிய விஷயங்கள் இப்போது பார்க்கலாம்.

முதலில் ஒன்று புரிந்து கொள்ளுங்கள். காப்பீடு என்பது வேறு, முதலீடு என்பது வேறு, என்ன சார் எப்படி கணக்கு போட்டாலும் 7% க்கு மேல ரிட்டர்ன்ஸ் இல்லயே என்பவர்களுக்கு இது சரிப்படாது. சிறிய அண்மைக்கால ஒப்பீடு பாருங்கள். 2008 ம் ஆண்டு வங்கி நிரந்தர வைப்புகளுக்கு அளித்த அதிகபட்ச வட்டி கிட்டத்தட்ட 11% க்கும் மேல் ஆனால் இப்போது? ஒரே வருடத்தில் 4 லிருந்து 5 சதவிகிதம் குறைத்துவிட்டார்கள். அதிகபட்சம் 10 ஆண்டுகளுக்கு மேல் நிரந்தரமாக ஒரு வட்டிவிகிதத்தில் பணம் போட வங்கிகளில் இயலாது. ஏன் குறைந்தகாலம்? - நம்மை போலவே எதிர்காலத்தில் பொருளாதாரம் என்ன ஆகும் என்ற கவலை, ரிசர் வங்கி கட்டுப்பாடுகள் இன்னும் பல வங்கிகளுக்கு உள்ளது. ஆனால் இங்கு நிலை வேறு, இன்றைக்கே ஒரு தொகையை பென்சன் திட்டத்தில் முதலீடு செய்து, அடுத்த மாதம் முதல் கடைசி காலம் வரை பென்சன் பெறும் திட்டங்கள் இருக்கின்றன. பென்சன் வாங்குபவர் எவ்வளவு காலம் உயிருடன் இருப்பார்? தெரியாது ஆனாலும் பணம் கண்டிப்பாய் கிடைக்கும், தனக்குப்பின் அந்த பணம் மனைவிக்கு போக வேண்டுமா?, வேண்டாமா? ஒவ்வோரு வருடமும் 3% பென்சன் தொகை கூடிக்கொண்டே போகவேண்டுமா? போடும் தொகை ஒரே மாதிரி இருந்தாலும் எப்படி அது நம்மிடம் திரும்ப வரவேண்டும் என்பதில் நிறைய ஆப்ஷன்ஸ் உள்ளது.

சரி, என்னுடைய உபரியான பணம் எல்லாம் போட்டு நிறைய தொகைக்கு காப்பீடு செய்யலாமா? தேவை இல்லை. முதலில் குடும்பத்திற்கான பாதுகாப்புக்கு ஒரு தொகை நிர்ணயம் செய்யுங்கள். அந்த மதிப்புக்கு காப்பீடு எடுங்கள், முக்கியமாய் வெளியில் சுத்தும் உங்களுக்கு, பிறகு மனைவிக்கு. அவங்க ஹவுஸ் வொய்ஃப் தானே சார் எதுக்கு என்று நினைக்காதீர்கள் நிச்சயம் அவர்களுக்கும் தேவை. குழந்தைகளுக்கு வழங்கப்படும் பாலிசிகள் எடுப்பதற்கு முன்பு உங்களுக்கு எடுத்துவிடுங்கள். ஏன்? பெற்றோர் இல்லை என்றால் குழந்தைக்கு யாரைய்யா பிரீமியம் செலுத்துவார்கள்? அப்படியே குழந்தைக்கு எடுக்கும்போது PWB (Premium Waiver Benifit) என்பதை சேறுங்கள். ஒரு வேளை தந்தை தவறினால் ப்ரிமியம் செலுத்தும் பொறுப்பை இன்சுரன்ஸ் நிறுவனமே எடுத்துக்கொள்ளும், குழந்தை மேஜர் ஆன பின் பணம் கைக்கு
வந்து சேரும். எல்லா ப்ளான்களிலும் இது இல்லை எனினும் சொற்ப அளவிலேயே செலவாகும் இந்த வசதியை அது இருப்பின் பெற்றுக்கொள்வது மிக முக்கியம்.

அதே போல இன்சூரன்ஸ் செய்த அளவை விட இரண்டு மடங்கு அல்லது மூன்று மடங்கு அளவிற்கு விபத்தால் இறப்பின் பணம் தரும் திட்டங்கள், அதிகம் வெளியில் சுற்றும் நபர்களுக்கு நல்லது. இப்போது மாத சீட்டு போல ஒரு திட்டம் வந்துள்ளது. எல்லா வயதினருக்கும் ஒரே அளவு பிரீமியம் குறிப்பிட்ட வருடங்களுக்கு பிறகு சிறிது சிறிதாய் பணம் திரும்ப எடுத்துக்கொள்ளும் வசதி, முதல் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஏதோ சூழ்நிலை பணம் கட்ட முடியவில்லையா, கவலை வேண்டாம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு பணம் செலுத்தாவிட்டாலும் பாலிசி காலாவதி ஆகாது, இறந்தாலும் பணம் கிடைக்கும் (செலுத்த வேண்டிய பிரிமியத்தை கழித்துகொண்டு :)

நிறைய ஆராய்சிகள் நடத்துகிறார்கள் நன்பர்களே, போன காலங்களில் ஏன் நிறைய பாலிசிகள் செயலிழந்தன, திடீர் பணமுடை யாருக்கு வேண்டுமானாலும் வரும். போக சாமானியர்களுக்கும் பாலிசி தருகிறோம் அவர்கள் நிலை கொஞ்சம் கடினம். .அப்படியா சரி ஒரு இரண்டு
வருடங்கள் டைம் கொடுப்போம், பணம் கட்டாவிட்டாலும் காப்பீடு உறுதி செய்வோம். 50 க்கும் மேற்பட்ட திட்டங்கள், ஒவ்வொன்றும் ஒரு விதம், எல்லாமே 100 கோடி மக்களில் யாருக்கும் பொருந்துமாறு வடிவமைக்கப்பட்டவை.

30 வயதில் ஒருவர் 30 ஆண்டுகளுக்கு பாலிசி எடுக்கிறார், நல்லபடியாய் பணம் கட்டி வாழ்ந்து, போனஸுடன் முதிர்வு தொகையும் பெற்று விடுகிறார், சரி பிறகு? மீண்டும் ஒரு பாலிசி எடுக்க நிறைய பிரிமியம் கொடுக்க வேண்டும் 60 வயதோடு வாழ்க்கை முடிந்துவிடுமா என்ன? அப்படியா சரி, முதிர்வில் முழு தொகை தந்துவிடுங்கள் வேறு எந்த பிரிமியமும் அவர் கட்ட வேண்டாம், 100 வயதிற்குள் எப்போது இறந்தாலும் காப்பீடு செய்த தொகையை நாமினிக்கு தந்து விடுங்கள், இறக்கவில்லையா 100வது வயதில் அவர் பெயருக்கே காசோலை அனுப்பி விடுங்கள். இதுதான் வாழும்போதும், வாழ்க்கைக்குப்பிறகும் என்பதின் அர்த்தம்.

எப்படி முடிகிறது? NOTHING IS FREE. உங்களிடம் வசூலிக்கும் பணத்திலேயே இது நிச்சயிக்கப்படுகிறது, உங்களை விட எதிர்காலம் பற்றி ஒரு குழு கவலை கொள்கிறது, இவனுங்க இப்படியெல்லாம் சொன்னா சரிபடமாட்டானுங்க, 60 வயசுக்கப்புறம் நீ போய்ட்டாகூட உன் குடும்பத்துக்கு உன்னால நன்மை கிடைக்க வேண்டாமான்னு கேட்டா தெனாவட்டா பதில் சொல்வான், ரெண்டு ஐஸ் கிரீம் கொடு, ஒண்ணு அவன திங்க சொல்லு, இன்னொண்னு அவன் புள்ளைங்க தின்னட்டும் என்பது ஒரு சின்ன விளம்பரம் மூலம் சுட்டி காட்டப்பட்டது.

எத்துனை பேர் காப்பீடு விண்ணப்பத்தை முழுவதும் படித்து பார்த்திருப்பீர்கள்? அது உங்களுக்கும், காப்பீடு நிறுவனத்திற்குமான ஒரு காண்ட்ராக்ட். ஒரு ஒப்பந்தம். சரியான தகவல்கள் அளிக்க வேண்டியது உங்கள் கடமை. தவறான தகவல்கள் சிக்கல் தரக்கூடும். மனித தவறுகள் எங்கேயும் நடக்கலாம் பிறரை குறை சொல்லி பயனில்லை.

மிக முக்கியம் நீங்கள் எடுத்த காப்பீடின் தகவல்களை உங்கள் குடும்பத்தில் அனைவரிடமும் சொல்லி வையுங்கள். ULIP போன்ற வகை என்றால் அதிலும் GROWTH ஆப்ஷன் செலக்ட் செய்திருந்தீர்கள் என்றால், உங்கள் முதலீடு பங்கு சந்தையின் ஏற்ற இறக்கங்களை பொறுத்தது

மூனு வருஷம் 10000 கட்டினா போதும் சார் அப்பால 30 லட்ச ரூவா கிடைக்கும் என்பதெல்லாம் சும்மா டகால்ட்டி, கிடைக்கும்.., குறைந்தது 15 அல்லது 20 வருடங்கள் நீங்கள் முதலீட்டை தொடர்ந்தால்!.

ஒன் ஆர் டூ இயர்ஸ்ல டபுள் ஆகுறமாதிரி எதுனா திட்டம் இருக்கா?? ஃபாஸ்ட் புட் கலாசாரத்தில் கேட்க்கப்படும் கேள்வி இது. நீங்கள் விதை விதைத்து மரம் வளர்த்து கனி கொடுக்க கொஞ்சம் காலம் ஆகும் உடனே நடக்க இது மந்திர வித்தை அல்ல. அப்படி யாராகிலும் தரேன் என்று சொன்னால் பனகல் பார்க்கில் இப்போதே ஒரு இடம் போட்டுவிடுங்கள். இன்சூரன்ஸ் என்பது வாழும் காலம் முழுமைக்குமானது, 10 வருடம், 15 வருடம், 50000, ஒரு லட்சம் என்று நானும் பாலிசி எடுத்தேன் என்று சொல்லாதீர்கள், உங்கள் உயிருக்கும், வாழ்வுக்கும் நிச்சயம் ஒரு விலை உண்டு. அது எவ்வளவு என்று தீர்மானியுங்கள்.

சொல்றது ஈசி. எப்படி சார் பணம் கட்டறது, யோசியுங்கள், உங்களுக்கு குழந்தை பிறக்க போகிறது மனைவி வலியுடன் அலறுகிறார், குவா குவா ஒன்றுக்கு பதில் மூன்று குழந்தைகள், நீங்கள் எதிர்பார்த்ததோ ஒன்று, மீதமுள்ள இரண்டு முழந்தைகளை கொன்று விடலாமா?? முறைக்க வேண்டாம், பாலிசிகளும் குழந்தை போல நினைத்தால் நிச்சயம் தொடரமுடியும். அந்த குழந்தையாவது உங்களை காப்பாற்ற 20 வருடங்களுக்கு மேல் ஆகும், பாலிசி குழந்தை நீங்கள் பெற்றெடுத்த அந்த நிமிடத்திலிருந்து உங்களை காக்கிறது.

அடுத்தது, மெடிக்ளைம்,

நிறைய இடங்களில் பணிபுரியும் இடத்திலேயே மெடிக்ளைம் வசதி இருந்தாலும் தனியே ஒன்று வைத்துக்கொள்வது நல்லது, நிறுவனம் மாறும்போது நம்மை காப்பாற்றும். கட்டிய பணம் திரும்ப வராது 50000 ம் முதல் மருத்துவ செலவுக்கான காப்பீடு கிடைக்கிறது. குறைந்த பட்சம் எவ்வளவு தேவைப்படும் என்பது உங்கள் தீர்மானத்தை பொறுத்தது. மேலும் வயதாக வயதாக நீங்கள் கேட்கும் காப்பீட்டின் அளவு மறுக்கப்படும் வாய்ப்பு உள்ளது (வேறென்ன பெரிசு எப்ப வேணா செலவு வைக்கும் ரிஸ்க்கு), ஒரு முறை எடுத்து தொடர்வதில் இந்த சிக்கல்கள் இல்லை முதலில் எடுக்கும்போதே எவ்வளவு என்பதை தீர்மானியுங்கள். ஒரு வருடத்திற்கு அல்லது இரண்டு வருடத்திற்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். ஒரு நாள் தவறினாலும் இடைப்பட்ட காலங்களில் ஏதேனும் வியாதியோ, விபத்தோ வந்து மருத்துவமனை செலவு வந்தால் ஒரு க்ளைமும் கிடைக்காது. முன் கூட்டியே புதுப்பித்துவிடுவது நல்லது. கேஷ்லெஸ் என்ற வசதியுடன் உங்கள் அருகாமையில் இருக்கும் மருத்துவமனை, காப்பீடு நிறுவனத்தின் லிஸ்டில் உள்ளதா என்பதை பார்த்து வைத்துக்கொள்வது நல்லது.

சாதாரண நோய்களுக்கு, ஏற்கனவே உள்ளவியாதிகளுக்கு (லிஸ்ட் இருக்கும்-பாருங்கள்) குறிப்பிட்ட வருடங்களுக்கு காப்பீடு (க்ளைம்) தர மாட்டார்கள். அப்ளை செய்யும்போதே சரியான நோய் குறித்த தகவல்கள் தருவது உத்தமம். தனி தனியா வேறு வேறு கம்பெனிகளில் மெடிக்ளைம் எடுப்பதும் தேவைஇல்லாதது. அப்புறம் எதுக்குதான் மெடிக்ளைம் என்றால்.. திடீரென்று வரும் நோய்களால் 24 மணி நேரத்திற்கு மேல் ஒரு மருத்துவமனையில் நீங்கள் அட்மிட் செய்யப்பட்டால், முறையான தகவல் காப்பீடு நிறுவனத்திற்கு நீங்கள் அளிக்கும்பட்சத்தில் மருத்துவ செலவு காப்பீடு நிறுவனம் அளித்துவிடும், கவனம் அந்த உபாதை ஏற்கனவே இருந்தால் காசு தர மாட்டார்கள். ஆனால் விபத்து ஏற்பட்டு மருத்துவ செலவு ஏற்படின் காப்பீடு அளவுக்கு க்ளெய்ம் கிடைக்கும். முக்கியமாய் குழந்தைகள் இருப்பவர்கள் குடும்பத்தோடு மருத்துவ காப்பீடு செய்துகொள்வது நல்லது, அதெல்லாம் வேஸ்ட் என்று நினைப்பவர்கள், அட்மிட் ஆகி வந்தவர்களிடம் எவ்வளவு செலவு ஆச்சு? என்று கேட்டு கொள்வது நலம்.

 தயவுசெய்து எந்த காப்பீடும் இணையதளத்திலோ, போன் பேசும் முகம் தெரியாத டெலிபோன் குயில்களிடமோ எடுக்காதீர்கள். நன்றாக ஆராய்ந்து, ஒப்பீடு செய்து முடிவெடுங்கள், காப்பீடு உங்களை காக்கும். இன்னும் நிறைய இருக்கிறது எல்லாம் சொல்ல முடியாது. தேவையானவைகள் சொல்லியுள்ளேன். அவ்வளவே.


கடைசியாய் ஒரு வார்த்தை,

நண்பர்களே,

நான் ஒரு முகவர், நீங்கள் என்னை போல ஒருவரை சந்தித்திருக்கலாம், அல்லது இனி சந்திக்கலாம் அவரால் ”நீங்க செத்தா..” என்று ஆரம்பிக்க முடியாது ஆனால் இந்த கேள்வியில்தான் எல்லாமே ஆரம்பிக்கிறது, கொஞ்சம் உணர்ச்சிகளை ஒதுக்கி வைத்து யோசியுங்கள், நயா பைசா பிரயோஜனமில்லாத நிகழ்ச்சிகளுக்கு மணி கணக்கில் செலவிடுகிறோம். நம் வாழ்வுக்கு சில மணிகள் செலவிடலாம், குடும்பத்துடன் கலந்து பேசி தீர்மானியுங்கள், சரியாக திட்டமிடுங்கள், சேமியுங்கள், இப்போதல்ல வயதானாலும் வாழ்வை அனுபவிக்க வேண்டும். ஒரு முகவரால் சொல்ல முடியாத ஆனால் பொதிந்துள்ள கருத்தை நான் இங்கு பதிவு செய்ய விரும்பினேன். காப்பீட்டின் மறைபொருள் இதுதான். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். பின்னூட்டமிட்ட அனைத்து தோழமைகளுக்கும் நன்றி. தெரிந்தவர்களுக்கு சொல்லுங்கள். புரியாதவர்களை, அலட்சியப்படுத்துபவர்களை கண்டியுங்கள், வளமான வாழ்வு எல்லோருக்கும் கிடைக்கட்டும். சிறப்பான திட்டங்கள் ஏதேனும் வரும்போது தகவல்கள் சேர்த்து உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். மீண்டும் என் இரு பெரிய பதிவுகளையும் பொறுமையாய் படித்து பின்னூட்டமிட்ட அனைத்து தோழமைகளுக்கும் நன்றி. நன்றி. நன்றி.

17 comments:

அண்ணாமலையான் said...

நல்ல விபரங்கள் இருக்கிறது. எந்த அளவுக்கு நன்பர்கள் உபயோக படுத்தறாங்கன்னு பாப்போம்..

கும்மாச்சி said...

இன்சூரன்ஸ் ஒரு அளவுக்குமேல் வைத்திருப்பது நமக்கு நஷ்டம் தான். எஜண்டுக்குத்தான் லாபம். நல்லாத்தான் அலசி அறிவுரை தரீங்க. தொடர்க உங்கள் பணி.

S.A. நவாஸுதீன் said...

இந்த இரண்டு இடுகைகளுக்காகவும் நிறைய உழைத்திருப்பது தெரிகிறது சங்கர். நல்ல தெளிவான விளக்கங்களுடன், நல்ல ஆலோசனைகளும், சமூக அக்கறையும் நிறைந்த இடுகை.

மெடிக்ளைம் பற்றிய இன்னும் நிறைய விவரம் ஊருக்கு வரும்போது தேவைப்படலாம். உங்கள் மெயில் ஐடி கொடுங்க சங்கர். ஊருக்கு வந்ததும் தேவைப்பட்டால் தொடர்புகொண்டு தொந்தரவு செய்கிறேன். ஹா ஹ ஹா

'பரிவை' சே.குமார் said...

சமூக அக்கறை மட்டுமின்றி இன்சூரன்ஸ் தொடர்பான சந்தேகங்களையும் தீர்க்கும் இடுகை.

Chitra said...

வாழ்க நலமுடன் - வளமுடன்........!

balavasakan said...

இப்பத்தான் எனக்கு எல்லாம் புரிஞ்சுது..நான்றி நண்பா...

Ashok D said...

இந்த பதிவுக்கு ஓட்டுபோடுவதே சந்தோஷத்தை தருகிறது ஷங்கர். இது முழுக்க உங்கள் வெற்றியே. Best of Luck

சைவகொத்துப்பரோட்டா said...

உபயோகமான தகவல்கள், நன்றி ஷங்கர்.

Vidhoosh said...

லைப் இன்சூரன்ஸ் பற்றிய கேள்வி:
1. மூன்று வருட லாக் இன் பீரியடோடு துவங்கிய பாலிசியை மூன்றாம் வருடம் முடிந்ததும் க்ளோஸ் செய்வதால் ஏற்படும் லாப நஷ்டங்கள்?
2. ஒரே பாலிசியை தொடர்ந்து முப்பது நாப்பது வருடம் கட்டி வருவதால் என்ன லாபம்

மெடிக்ளேயிம் :

1. பாலிசி செலுத்திய நாளில் இருந்தே க்ளைம்கள் ஏற்கப்படுமா. அல்லது குறைந்தது இத்தனை நாட்களாவது ப்ரீமியம் கட்ட வேண்டும் என்று இருக்கிறதா?

2. என் சகோதரி மாடிப் படியில் இருந்து கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டபோது க்ளயிம் மறுக்கப் பட்டது. அதற்கு அந்த முகவர் "சாலையில் நடக்கும் போது சைக்கிள் மோதி விட்டது என்று சொல்லி இருந்தால் கிடைத்திருக்கும்' என்றார். மெடிக்கல் இன்சூரன்ஸ் பார்வையில் மருத்துவ சிகிச்சைகளில் விபத்து என்றால் என்ன?

Paleo God said...

மிக்க நன்றி அண்ணாமலையான் ::))
மிக்க நன்றி கும்மாச்சி::))

Paleo God said...

நன்றி நவாஸ் என் மெயில் முகவரி ப்ரொஃபைலிலேயே இருக்கிறது.

palaapattarai@gmail.com

:)

Paleo God said...

மிக்க நன்றி குமார்..:))
மிக்க நன்றி சித்ரா ஜி::))
மிக்க நன்றி பாலவாசகன்.:))

Paleo God said...

அசோக் மிக்க நன்றி தலைவரே.:))

சைவ.கொ.ப.::நன்றி நண்பரே..:))

Paleo God said...

Vidhoosh said...
லைப் இன்சூரன்ஸ் பற்றிய கேள்வி:
1. மூன்று வருட லாக் இன் பீரியடோடு துவங்கிய பாலிசியை மூன்றாம் வருடம் முடிந்ததும் க்ளோஸ் செய்வதால் ஏற்படும் லாப நஷ்டங்கள்?

ULIP பற்றி கேட்கிறீர்கள், அது பங்கு சந்தை சார்ந்தது, 4 ஆப்ஷன்ஸ் அதில் உண்டு பெரும்பாலும் குரோத் தான் எல்லாரும் தேர்வு செய்திருப்பார்கள். கிட்ட தட்ட 90% பணம் சந்தைகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கும், அதற்கான செலவுகள் (allocation charges) முதல் வருடம் அதிகமாக உங்கள் பிரிமியத்திலிருந்து கழிக்கப்பட்டு மீதமுள்ளவையே முதலீட்டுக்கு போயிருக்கும், குதிரை வேகத்தில் சந்தை எகிறினால் மூன்று வருடத்தில் லாபம் கிடைக்கும் இல்லை எனில் குறைந்தது 10 அல்லது 15 வர்டங்களுக்கு தொடர்வது நல்லது. சந்தை போக்கு கவனிக்க வேண்டும். நல்ல லாபம் கிட்டியிருப்பின் பாண்ட் ஆப்ஷனுக்கு ஸ்விட்ச் ஓவர் செய்து லாபத்தை காப்பாற்றலாம். நீங்கள் அல்லது உங்கள் முகவர் மெனெக்கெட வேண்டும்.

2. ஒரே பாலிசியை தொடர்ந்து முப்பது நாப்பது வருடம் கட்டி வருவதால் என்ன லாபம்

பங்கு சந்தை என்பது நீண்ட நாட்க்களில் அதிக லாபம் தரக்கூடியது, மொத்த முதலீட்டில் 20% இது சார்ந்த நல்ல திட்டங்களில் நீண்ட காலம் முதலீடு செய்வது எப்போதுமே நல்ல லாபம் தரும்.

மெடிக்ளேயிம் :

1. பாலிசி செலுத்திய நாளில் இருந்தே க்ளைம்கள் ஏற்கப்படுமா. அல்லது குறைந்தது இத்தனை நாட்களாவது ப்ரீமியம் கட்ட வேண்டும் என்று இருக்கிறதா?

பாலிசி ஓகே ஆகி வெளியில் வரும்போதே வண்டியில் அடிபட்டு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனாலும் கிளைம் உண்டு (minimum 24Hours Hospitalization)

2. என் சகோதரி மாடிப் படியில் இருந்து கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டபோது க்ளயிம் மறுக்கப் பட்டது. அதற்கு அந்த முகவர் "சாலையில் நடக்கும் போது சைக்கிள் மோதி விட்டது என்று சொல்லி இருந்தால் கிடைத்திருக்கும்' என்றார். மெடிக்கல் இன்சூரன்ஸ் பார்வையில் மருத்துவ சிகிச்சைகளில் விபத்து என்றால் என்ன

என்ன பாலிசி என்ற விவரமில்லை.. ரோட் ஆக்சிடன்ட் பாலிசி என்றால் சரி. மற்றவை எனில் நிச்சயம் கிளைம் கிடைக்கும்.

Paleo God said...

1. மூன்று வருட லாக் இன் பீரியடோடு துவங்கிய பாலிசியை மூன்றாம் வருடம் முடிந்ததும் க்ளோஸ் செய்வதால் ஏற்படும் லாப நஷ்டங்கள்? //

மூன்றாம் வருடம் க்ளோஸ் செய்தால் உங்களின் பெரும்பாண்மையான பணம் allocation charges க்கே போயிருக்கும், ஸோ.. நஷ்டம்தான். மூன்று வருடங்களுக்கு பிறகு allocation charges கம்மி அதனால் முழு பணமும் முதலீடில் இருக்கும் யூனிட்கள் சேர சேர நீண்ட காலத்தில் ஆவரேஜ் பார்க்கும்போது லாபம் நிச்சயம்.. ஆனால் தேர்ந்தெடுத்த திட்டம் உறுப்படியாய் உள்ளதா என்ற கண்காணிப்பு அவசியம்.

Paleo God said...

மெடிக்கல் இன்சூரன்ஸ் பார்வையில் மருத்துவ சிகிச்சைகளில் விபத்து என்றால் என்ன//

வண்டி மோதியோ, தானாக பார்ரூமில் வழுக்கி விழுவதோ விபத்துதான் ஆனால் பர்ச்னல் ஆக்சிடண்ட் பாலிசி வேறு, ரோட் ஆக்சிடண்ட் பாலிசி வேறு.

எல் ஐ சி யில் ஆயுள் காப்பீட்டில் ஆக்சிடண்டில் இறப்பவருக்கு இரட்டிப்பு பணம் பல திட்டங்களில் வழங்கப்படுகிறது, நாய் கடித்தோ, மனிதன் கடித்தோ இறந்தாலும் அது ஆக்சிடண்ட் என்றே கருதப்படும்..:)

vasu balaji said...

மிக மிக பயனுள்ள தகவல்கள். நன்றி. (நிஜமாகவே புரிதலுக்கு மிக உதவும்.)