சமீபத்தில் பிரபல பதிவர் மயில் ராவணன் அவர்களை சந்தித்தபோது அவரிடமிருந்து சில சுவாரஸ்யமான புத்தகங்கள் படிக்கக் கிடைத்தது. அவற்றிலிருந்து என்னைக் கவர்ந்தவைகள் சில..
கீழே உள்ள கவிதைகளை எழுதிய கிருஷாங்கினி அவர்களுடன் சிறிது நேரம் பேசும் வாய்ப்பும் கிடைத்தது. அவரின் கணவர் சிறந்த ஓவியர் என்பதும் தெரிய வந்தது. பிறிதொரு நாளில் அவரை சந்திக்கும்போது அவரின் ஓவியங்களையும் பகிர்ந்து கொள்கிறேன். கலைக்குடும்பம்! :))
முழு மூங்கில் வெட்டி, பிளாச்சுகளாக்கி
சாமிக்குச் சப்பரமும் சாவுக்குப் பல்லக்கும்
கட்டிடலாம் - பூக்கொண்டு;
பூவற்று கயிறு கொண்டு கட்டி
பாதாளச் சாக்கடை அடைப்பும் எடுக்கலாம்
எதற்கும் வளையும் மூங்கில் - எனவே..
--
மூடிய தோலைத் தவிர சிதறிய
சதையும் ரத்தமும் எல்லாமும்
கூழான எதிரெதிர் மோதல்
கருத்த சாலையில்
சிவப்பைப் பரப்பி,
முழுவதும் மாடுகளை ஏற்றிய லாரியும்
சில மனிதர்களுடன் வேனும்.
சொல்லப்பட்டவை ஆறு உயிர்கள்
வழக்கம்போலத் தன்னினம்.
--
களிமண் பூமியில் சூளையிட்டு
அறுத்தெடுக்கும் செங்கற்கள்
களிமண் விளைபூமியைப் பிரிக்கும்
அடுக்கடுக்காய் சிமென்ட்டுடன்
அழகான சுவராகி - பயிரற்று..
--
கவிதைகள் கையெழுத்தில் - கிருஷாங்கினி
சதுரம் பதிப்பகம்
34, சிட்லப்பாக்கம் 2 வது பிரதான சாலை,
தாம்பரம் சானடோரியம், சென்னை - 600 047.
044-22231879 / nagarajan63@gmail.com
--
அடுத்த புத்தகத்தில்..
ஜென் கவிதைகள்
-யாழன் ஆதி
எல்லோரும் உறங்கும் நேரம்
யாருக்குமே தெரியாமல் வந்தது
மழை
மிதந்து சென்றன குமிழிகள்
எவருமே பார்க்காவிடினும்
--
நடுக்கும் குளிர்
சுடச்சுட நெருப்பு
எரியும் புத்தர் சிலைகள்
குளிர்காய்கிறார் துறவி.
--
புறப்பட்ட இடம் மறக்கும்
புதிய மனம்
பயணம்.
--
எல்லாவற்றையும் விட்டுவிட்டு
நடந்தார் துறவி
விட்டுவிட்டதையும்.
வெய்யில் கவிதைகள் என்ற தலைப்பில்.
கொலை செய்வதற்கான
காரணங்களை
பசியும் காமமும் உருவாக்கித்தரும்
பயிற்சிக்கு வேண்டுமாயின்
நீங்கள் மிகவும் நேசிக்கும்
வளர்ப்புப் பிராணியொன்றை
கொன்று பழகலாம்
குற்ற உணர்ச்சியற்று
வாழ்வதற்கான ஒரே வழி
நம்பிக்கையோடு உங்கள் மடியில்
கண்ணயரும்போது
கடவுளின் கழுத்தை அறுத்துவிடுங்கள்
--
பாகற்கொடியின் சுறுள் பற்றலை
மெல்ல அவிழ்ப்பது போல
ஆறிய காயங்களிலிருந்து
தையலை பிரிப்பதுபோல
திரிவிழாக் கூட்டத்தில்
என் விரல்களை
நானும் அறியாதபடிக்கு
பிரித்தெடுக்க முயலுகையில்
புரிந்தது
இன்று நீ
கணக்கிலடங்கா முத்தங்களைப்
பொழிந்ததின் நிமித்தம்
உன்மீது குற்றமில்லை அம்மா
பொம்மைகளை வெறித்தபடி
உன்னை தொலைத்தது நான்தான்.
- மணல் வீடு
இருமாத இதழ் / இதழ் வடிவமைப்பும், தரமும் அருமை.
இதழ் எண் 12&13
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்,
மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம் - 636 456.
ஆண்டு சந்தா: ரூ.100/-
98946 05371 / manalveedu@gmail.com
----
இது காசு கொடுத்து வாங்கியது. :-)
இயற்கை வேளாண்மையில் மாடியில் மரம் காய்கறிச் சாகுபடி திண்டுக்கல் ஆர்.எஸ்.நாராயணன் அவர்கள் எழுதியுள்ள இந்த புத்தகம் மாடியிலேயே காய்கறி செடிகள் மற்றும் மரம் வளர்ப்பது பற்றியும் அதற்கான வழிமுறைகள்/உரம்/சந்தேகங்களை போக்கும் பதில்களையும் அழகாக தொகுத்திருக்கிறார். விரைவில் முழம் பூ 50 ரூபாம்மா/ வெண்டைக்கா கிலோ 150 ரூவாம்மா என்ற விலைகள் கேட்க்கும்போது இந்தப் புத்தகம் எல்லார் வீட்டிலும் இருக்கும் என்பது என் கருத்து. கண்டிப்பாய் படியுங்கள்.
தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்,
41-B, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை - 600 098.
044- 26251968 / ncbhbook@yahoo.co.in
ச.முகமது அலி என்பவரின்
பாம்பு என்றால்? என்ற புத்தகம் வாசிப்பில் இருக்கிறது. இயற்கை வரலாறு அறக்கட்டளை வெளியீடு. படித்து முடித்தபின் பகிர்கிறேன். கிராமத்திற்கு வந்து 13 நாட்களில் 4 பாம்புகளைப் பார்த்ததும் உடனே தேடி எடுத்துப் படிக்கத் துவங்கிவிட்டேன். :)))
நன்றி!.
.