பலா பட்டறை: சில பகிர்வுகள்..!

சில பகிர்வுகள்..!

வணக்கம் நண்பர்களே, நலமா?

பல நிகழ்வுகளால் எதையுமே படிக்க இயலவில்லை, மிக முக்கிய காரணமாக, என் 87 வயது பாட்டியின் மறைவு. என் வீட்டிலேயே இருந்து ஐந்தாம் தலைமுறையைக் காண இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில் அமைதியாய் ஒரு அதிகாலையில் அவர் உயிர் பிரிந்ததும் அதன் மறு நாள் காலையில் ஒரு குவியல் சாம்பலாய்க் கண்டதும் சோகம் தாண்டி நிறைய விஷயங்களைப் புரியவைத்தது.

என் தாத்தாவிற்கு சிறு வயதில் இரண்டாம்தரமாய் வாழ்க்கைப்பட்டு  ஐந்து பெண்களைப் பெற்று  இளம் வயதிலேயே விதவையாகி எல்லா குடும்பக் கஷ்டங்களையும் அனுபவித்து எந்தெந்த ஊரிலோ சுற்றிச் சுழன்று வாழ்ந்து தற்பொழுது நான் இருக்கும் கிராமத்தில் என் வீட்டில் இறந்து இயற்கை சூழலுடனான சுத்தமான ஒரு மயானத்தில் எரிந்து உதிர்ந்து போனாள். 

எனக்கு வராது என்றில்லாது எனக்கும் வருமென்று உள்வாங்கிப் பார்க்கையில் ஒரு இறப்பு பல விஷயங்களை உணர்த்துகிறது. துக்கமென்பது ஒரு அளவுகோலோடே அழவைத்ததும் ஒரு ஆச்சர்யம்தான். மரணமென்பதை பயமின்றி எதிர்கொள்ளும் சூட்சுமம் அறிந்தால் அதுவும் ஒரு மகிழ்ச்சியே என்று எண்ணுகிறேன்.  

--







சென்ற மாதத்தில் ஒரே ஒரு நாள் இணைப்பிலிருந்தபொழுது தமிழ் மணத்தில் வாக்களிக்க வேண்டிய இடுகைகளுக்கு வாக்களித்ததோடு அதை மறந்துவிட்டேன். என்னுடைய நான் எடுத்த சில புகைப் படங்கள் இரண்டாம் கட்டத்திற்கு முன்னேறியதற்கு வாழ்த்து தெரிவித்து வந்த பின்னூட்டம் கண்டதும் மகிழ்ச்சி. வெற்றி பெறுவது இரண்டாம் பட்சம். அதிகம் இணையத்தில் இல்லாத நிலையிலும் என்னையும் மதித்து வாக்களித்த நட்புகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.:)) மேலே உள்ளது என் வீட்டுத்தோட்டத்தில் நான் எடுத்தது.


--



உயிர்மை புத்தக வெளியீட்டு விழாவிற்குப் போயிருந்தேன். சமீபகாலத்தில் ஒரே இடத்தில் அதிக பதிவர்களைக் கண்டதும், பேசியதும் மகிழ்ச்சியாய் இருந்தது. அடுத்து புத்தகக் கண்காட்சியில் இது தொடரும் என்று நினைக்கிறேன். நண்பர்களின் புத்தகங்கள் இது போன்று சிறப்பாய் வெளியிடப்பட்டது மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துகள்.



--

பா.ராஜாராம் அண்ணன் சவூதிக்கு திரும்பிச் செல்ல சென்னை வந்திருந்தபொழுது சந்தித்தேன். பல விஷயங்கள் பேசினோம். கூடப் பிறக்கவில்லை என்பது தவிர்த்து அன்பின் ஆளுமை அவர். வலைப்பூக்களின் முதல் மற்றும் சிறந்த பயன் இது போன்ற நட்புகள் மட்டுமே. :)) 

பேசிக்கொண்டிருக்கும்பொழுது சொன்னார் “ எழுத்தில் நாம் நினைத்துக்கொண்டிருக்கும் பிம்பம் நிஜத்தில் உடையும்பொழுது அதுவும் அழகாகத்தானிருக்கிறது.”

நான் சொன்னேன்... ”அந்த நிஜ பிம்பமும் உடையும் பொழுதுதான் மனசு வலிக்குதுண்ணே”


--

வேறென்ன? புத்தாண்டு வரப்போகிறது. இரண்டாயிரத்துப் பதினொன்று அனைவருக்கும் நல்லதாய் அமைய ப்ரார்த்திக்கிறேன். வாழ்த்துகிறேன்.




இரு உள்ளங்கைகள் போதுமென்றாலும்
பற்றவியலாத 
புயல்கால மேகங்களாய் 
வட்டச் சுழன்று
கொட்டமடிக்கிறது
காமம்.




.

22 comments:

Balajisaravana said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா! :)

Unknown said...

பதிவுக்கு நன்றி.

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Ashok D said...

சென்ற மாதம் தந்தையை இழந்ததது தொடர்ந்து ஒரு அறுவை சிகிச்சை..

அன்று எதிர்பாரா மோதல்.. ம்ம்ம்

பாரா கூறியதை உள்வாங்கி எழுதியது நன்று..

கவிதை மிகவும் பிடிச்சுயிருக்கு ஷங்கர்

பா.ராஜாராம் said...

நமக்கென தனிமை கிடைத்த நேரங்களில் எல்லாம், நீங்கள் இந்த பாட்டி குறித்து அதிகம் பேசினீர்கள் ஷங்கர். "எங்கயும் வெளியில் போக முடியல அண்ணே. எப்ப வேணுமானாலும் நிகழலாம். என்றாலும் உங்களை பார்த்துரலாம்ன்னுதான் வந்தேன்" என்றபடி அன்று இரவு மின்சார ரயில் ஏறி, ஆட்டோ ஏறி, அறையில் தங்கி, காலையில் எழுந்ததும், உங்களிடம் கேட்டேன், "வீட்டிற்கு பேசினீர்களா ஷங்கர்?"

"பேசிட்டேன் அண்ணே"

புறப்பட்டு போன பிறகு மிகவும் வெறுமையாக, இழப்பாக உணர்ந்தேன். நாம் தங்கியிருந்த இடத்தில் இருந்து நாற்பது கிலோமீட்டர்கள் உங்கள் வீடு என்று சொன்னீர்கள், புறப்பட்டு போய் ஏன் எனக்கு பாட்டியை பார்க்கணும்ன்னு தோணலை என.

எந்த ஒரு இழப்பையும் தாமதமாகவே உணர்கிறேன். பால்யத்தின் அருமையை நான் தாத்தாவாகப் போகிற, "தற்சமயம்" உணர்வது போல்.

'தற்சமயத்தை' எப்ப உணரப் போகிறேனோ?

பாட்டியின் ஆன்ம சாந்திக்கு என் பிராத்தனைகள்.

நேசமித்ரன் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் said...

பாட்டியின் ஆன்ம சாந்திக்கு என் பிராத்தனைகள்.

செ.சரவணக்குமார் said...

அருமையான புகைப்படங்கள் ஷங்கர்.

சில நாட்களாக உங்களைப் பார்க்க முடியவில்லையே என நினைத்துக்கொண்டிருந்தேன். பாட்டியின் இழப்பின் வலியை உணர முடிகிறது. எனது அஞ்சலிகள் நண்பா.

பா.ரா உடனான சந்திப்பின் உரையாடல்கள் வெகு கச்சிதம்.

என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஷங்கர்.

pudugaithendral said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

பதிவுக்கு நன்றி.

புத்தாண்டு வாழ்த்துக்கள்

சாந்தி மாரியப்பன் said...

இனிமே பாட்டியோட நினைவுகளை அசைபோட்டு, ஆற்றிக்கொள்ள வேண்டியதுதான்..

க ரா said...

பாட்டியின் மறைவுக்கு எனது அஞ்சலிகள்...

புத்தாண்டு வாழ்த்துகள் :)

ஹேமா said...

ஷங்கர்...நீண்ட நாட்களின்பின் உங்கள் பதிவு பாட்டியின் மறைவோடு.ஆனாலும் அவர்களின் வழிநடத்தல் எங்களோடு எப்போதும் இருக்கும்தானே.புத்தாண்டு இனிதாய்ப் பிறக்கட்டும் !

Philosophy Prabhakaran said...

பாட்டியின் மறைவிற்கு அனுதாபங்கள்... 87 வயது ஆனாலும் பாட்டி பாட்டி தானே...

Anonymous said...

பாட்டியின் மறைவிற்கு அனுதாபங்கள். வயதாகி மறைந்தாலும் இழப்பு இழப்பு தானே. என் நண்பனொருவன் சொன்னான், பாட்டியை இழப்பது தாயை இழப்பது போல வலிக்கும் என்று. =((

நிகழ்காலத்தில்... said...

//மரணமென்பதை பயமின்றி எதிர்கொள்ளும் சூட்சுமம் அறிந்தால் அதுவும் ஒரு மகிழ்ச்சியே என்று எண்ணுகிறேன். //

உண்மைதான் நண்பரே..

ஜோதிஜி said...

மற்றவர்கள் சொன்ன மாதிரி என் அனுதாபங்கள் என்று எழுத விருப்பமில்லை. பேசிய போது கூட என்னால் கண்டு கொள்ள முடியாத துடிப்பான வேகம் கண்டு வியந்து நிற்கின்றேன். பழைய நினைவுகள், வாழ்ந்த பெரியவர்களின் தாக்கங்கள், மரணத்தின் வலி மற்றும் அது உணர்த்தும் பாடங்கள், போன்றவற்றை உங்கள் வார்த்தைகளில் படிக்கும் போது அதிகம் எழுதாத உங்கள் மேல் கோபமாக இருக்கிறது.

இராகவன் நைஜிரியா said...

// எனக்கு வராது என்றில்லாது எனக்கும் வருமென்று உள்வாங்கிப் பார்க்கையில் ஒரு இறப்பு பல விஷயங்களை உணர்த்துகிறது. துக்கமென்பது ஒரு அளவுகோலோடே அழவைத்ததும் ஒரு ஆச்சர்யம்தான். மரணமென்பதை பயமின்றி எதிர்கொள்ளும் சூட்சுமம் அறிந்தால் அதுவும் ஒரு மகிழ்ச்சியே என்று எண்ணுகிறேன். //

உண்மையான வார்த்தைகள். உள்வாங்கும் போது கிடைக்கும் அதிர்வுகள் பலமானவையாக இருக்கின்றன.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

ம.தி.சுதா said...

பொங்கல் வாழ்த்துக்கள் சகோதரம்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
ஒழித்தோடும் அசினும் 109 நாள் துரத்தலும்..

உணவு உலகம் said...

//மரணமென்பதை பயமின்றி எதிர்கொள்ளும் சூட்சுமம் அறிந்தால் அதுவும் ஒரு மகிழ்ச்சியே//
சத்தியமான வார்த்தை.

Anisha Yunus said...

ஷங்கரண்ணா... நலம் தானா? உங்க வலையிலும் பதிவைக் க்காணம், என் வலைப்பக்கத்திலும் காணம்? வந்துட்டு போங்க. :)

Pranavam Ravikumar said...

வாழ்த்துக்கள்..!

Paleo God said...

அனைவருக்கும் மிக்க நன்றி! :))