பலா பட்டறை: உண்மைத்தமிழனின் உளறல்கள்!! - பாகம் - 2.

உண்மைத்தமிழனின் உளறல்கள்!! - பாகம் - 2.


.


பொது மக்களின் ஒரு சாராரை சாலை ஓரம் காக்கவைத்து ரேஷன் கடையில் ஒரு ரூபாய்க்கு அரிசி இவர்களுக்காகத்தான் வழங்கப் படுகிறது என்று பீற்றிக்கொள்ளுவதற்கு முன்பாக, அவர்கள் ஏன் ஒரு ரூபாய் அரிசிக்காக இந்தியாவில் நம்பர் ஒன் மாநிலத்தில் அப்படித் தவம் கிடக்கிறார்கள் என்ற கோணத்தில் சிந்தித்தால் நமக்கான உணவு உற்பத்தி தேவைக்கு அதிகமாக இருக்கிறதா அல்லது பற்றாக் குறையில் வேறெங்காவதிலிருந்து இறக்குமதி செய்கிறோமா என்ற கேள்வியில் அது முடியும்.

முன்னர் எழுதிய பசுமைப் புரட்சி என்பது என்ன? மாடுகளை சொந்தமாக வைத்து ஏர்பூட்டி அதன் சாணத்தை எருவாக்கி நிம்மதியாய் இயற்கை முறையில் கிடைப்பதைக்கொண்டே யாரையும் எதிர்பார்க்காமல் சிறப்பான விவசாயம் செய்துகொண்டிருந்த விவசாயிகளை நகரத்தில் தொழிற்சாலை வைத்துள்ளவர்கள் மாற்றினார்கள். 

உழவுக்கு ட்ராக்டர் சிறப்பானது என்று லோன் மற்றும் மானியம் மூலம் மூளைச் சலவை செய்ததில் முதலில் காணாமல் போனது மாடுகள் 40 வருடங்களுக்கு முன் ஆயிரக்கணக்கான மாடுகளுக்குச் சொந்தக்காரர்களாயிருந்த துபாய் ராஜாவின் வீட்டில் இன்றைக்கு பாக்கெட் பால் வந்தால்தான் காப்பியே! 

மாடுகளை வைத்து நிலத்தை உழும்போது மண்ணில் வாழும் நுண்ணுயிரிகள் இறப்பதில்லை, ட்ராக்டர் எனும் வஸ்து தேவையில்லாத அள்வுக்கு நிலத்தை புரட்டுவதோடு அதில் இடப்படும் நஞ்சுகளான ராசாயணங்களையும் நிலத்தடி நீர் வரை கொண்டு செல்கிறது. சரி ட்ராக்டரோடு ஆயிற்றா ட்ராக்டர் என்ன சாணியா போடும்? அதை வைத்து உரம் தயார் செய்ய? எனவே உரக்கம்பெனிகள் புகுத்தப் பட்டது, எரு என்ற இயற்கை விஷயத்தை இரசாயண விஷங்கள் மாற்றின. 

இரசாயண உரங்கள் தயாரிக்க தொழிற்சாலைகள் ஆரம்பம். அது இன்னும் தன் பங்கிற்கு சுற்றுச் சூழலை மாசு படுத்துகிறது, ட்ராக்டர் உற்பத்தி செய்ய கம்பெனிகள், ட்ராக்டருக்கு டீசல், அந்த டீசலை நாம் வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்தாகவேண்டும், அந்த உரத்துக்கும் டீசலுக்கும் மானியம். அந்நிய செலாவணி இழப்பு எல்லாவற்றிற்கும் அடுத்தவனைக் கையேந்தும் நிலை. சரி இருப்பதைக் கொண்டு விளைத்துக்கொள்ளலாமென்றால் விதையை மரபணு மாற்றம் என்ற ஒன்று ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த விதையைத்தான் வாங்கவேண்டுமென்று விவசாயி போதிக்க அல்லது நிர்பந்திக்கப் படுகிறான். ஆயிரக்கணக்கான நெல் வகைகள் இருந்தவனிடம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பலவித குட்டை நெல் ரகங்கள் அறிமுகம் செய்யப் பட்டன. 

ஏன்? குட்டை ரகத்தில் வைக்கோல் கம்மியாக இருக்கும் கொஞ்ச நஞ்ச நாட்டு மாடுகளுக்கும் தீவனம் இல்லாமல் போனால்தானே ஹைப்ரிட் சீமை வகைகளை விற்க முடியும்? அதுவும் அவை வாழும் சூழ்நிலை வேறு இங்கே சர்வ சாதாரணமாக அடிக்கும் வெயிலுக்கு அவை தாங்காது, தனியே கொட்டில் வேண்டும். அவற்றிற்கு 27 ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு தயாரிக்க,  வழங்க கம்பெனிகள் இருக்கின்றன. அவன் கொடுத்தால்தான் இவன் மாடு வளர்க்க முடியும். வெறும் மேய்ச்சல் நிலத்தில் மேய்ந்து சர்வ சாதாரணமாக எந்த நோய் நொடியுமில்லாமல் முக்கியமாய் ”செலவில்லாமல்’ பெருகிய நம் பாரம்பரிய இனம் எப்படி கவனமாக அழிக்கப் பட்டு வருகிறது என்று கவனியுங்கள். 

இருப்பதைக்கொண்டே விவசாயம் செய்த விவசாயி எல்லாவற்றிற்கும் வெளி இடுபொருள் சார்ந்தே இருக்கவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப் பட்டான். எல்லாமே நகர உற்பத்தியில். கிராமத்தில் விவசாயம் கையேந்தி நிற்கிறது. நகரத்தில் உரம், டீசல், ட்ராக்டர், இப்பொழுது விதையும் அவர்களே மரபணு மாற்றமாக்கி சப்ளை செய்யப் போகிறார்கள். இதற்குப் பெயர் பசுமைப் புரட்ச்சி.

பசுமைப் புரட்சியை ஊக்குவித்த மகான்கள் நமக்கு அளித்த அன்பளிப்பைப் பாருங்கள்:

கிட்டத்தட்ட இந்தியாவில் 17கோடி ஏக்கர் அதிகப்படியான இரசாயனங்கள் தூவி உவர் நிலங்களாகி விளைச்சல் அதளபாதாளத்திற்குத் தள்ளப் பட்டுவிட்டது.

இந்திய மக்கள் உண்ணும் உணவு அனைத்திலும் தக்காளி முதல் தாய்ப்பால் வரை பூச்சிக்கொல்லி தன் தடயத்தைப் பதித்துள்ளது.

மருத்தும் வணிகமாகி நோய்கள் மலிந்து உழவில் பயன் படுத்தப் படும் நஞ்சுகளால் புற்று நோய் முதல் நரம்பியல் கோளாறுகள், ஆண்மைக் குறைபாடு போன்றவை பெருகி உள்ளன.

நமது பாரம்பரிய நெல் ரகங்கள் இப்பொழுது பன்னாட்டு கம்பெனி வசம்.

குடி நீர் மாசடைந்துள்ளது. தொழிற்சாலைகளும் நிலதடி நீரை மாசடைய வைக்கின்றன. நீர் ஆதாரங்களிலிருந்து ஆழ்குழாய்மூலம் நீர் உறிஞ்சப் பட்டு லாரிகளில் நகரங்களுக்கு வினியோகம் செய்யப் படுகிறது. இதனால் நீர் ஆதாரங்களில் நிலத்தடி நீர் குறைந்து சுவையும் மாறி வருகிறது. 

பசுமைப் புரட்சியை ஆதரித்தவர்களே அரசாங்கத்திற்கு கொடுத்த அறிக்கையைப் இது!:

65 கோடி மக்களுக்கு உழவைத் தவிர வேறு தொழில் இல்லை.

(இதுதான் பன்னாட்டு நிறுவனங்களுக்கு காசு பார்க்க ஒரு வாய்ப்பானது)

இந்த உழவர்கள் வருவாய் குறைந்த வண்ணம் உள்ளது. செலவுகளும் எதிர்பாராத இழப்புகளும் அதிகரித்த வண்னம் உள்ளது.

(ஏன் எல்லாவற்றிற்கும் இடுபொருள் வெளியிலிருந்து வாங்க வேண்டும், சுயமாய் அவனால் எதுவும் செய்ய இயலாது விதைமுதல் அறுவடை வரை கார்பொரேட் கம்பெனிகளுக்கு காசு கொடுத்தாலே விவசாயம். அதனால் ஏற்படும் திடீர் செலவுகள் வருவாய்க்கும் மேல் போகிறது.)

கடனைத் திருப்பிக்கட்ட முடியாத உழவர்கள் தற்கொலை செய்வது அதிகரிப்பு.

(எல்லா இடுபொருட்களுக்கும் காசு வேண்டும். கடன் வாங்கி காசைக் கம்பெனிகளிக்கு கொடுத்து விளைச்சலில்லாததால் கடனடைக்க முடியாமல் தற்கொலை செய்துகொள்கிறான் விவசாயி # மானஸ்தன் ஆச்சே!)

உழவை நம்பி உள்ளவர்களில் நாலில் ஒருவருக்குத்தான் வங்கிக் கடன் கிடைக்கிறது.

(கந்து வட்டி மீட்டர் வட்டி கொடுமைகள் நகரத்தவர்களுக்கே நரகமெனுபொழுது கிராமத்தான்??)

பூச்சிகளைக் கொன்று பயிர்களைக்காக்ப்போமென்று நல்ல உயிரினங்களையும் அழித்தார்கள், தேனீக்களும் வண்ணத்துப்பூச்சிகளும் அழிகின்றன, மேய்ச்சல் நிலங்கள் கட்டிடங்கள் கட்டப்பட்டு கால் நடைகள் இறைச்சியாகின்றது. கால்நடைகளின் எரு இல்லாமல் விளை நிலங்கள் வளம் இழக்கின்றது.

உலகத்து இயற்கையில் எல்லாமே ஒரு சுழற்சிப் பாதையில் இயங்குகின்றன, அதில் ஒரு இணைப்பு உடைக்கப்பட்டாலும் அது தன்னைச் சார்ந்து இருக்கும் உயிரினங்களுக்கு பேரழிவை உண்டாக்குகிறது. நாமும் ஒரு உயிரினம்தான் அழியக்கூடிய பட்டியலில் கூடிய சீக்கிறம் மனித இனத்தின் பெயரும் வரும். அனேகமாக அந்த அழிவு நாளே இந்த இயற்கைக்கு மனித இனம் செய்த முதல் நல்ல நிகழ்வாக இருக்கலாம்.

இன்றைய கேள்விகள்:-

மாட்டுக்கு ஊசிபோட்டு பால் கறக்கும் வித்தையை எந்த சங்க காலப் பாடல்களிலோ அல்லது கல்வெட்டுகளிலோ நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? 

23 அத்தியாவசிய ஊட்டப் பொருட்கள் உங்கள் குழந்தைகள் உண்ணும் உணவில் இல்லை மாறாக அது ஒரு டப்பாவில் பவுடராக விற்கப் படுகிறது அதைக் குடித்தால் மட்டுமே உங்கள் குழந்தைகள் உயரமே அடைய முடியும் சரிதானே?

ஒரு ஏக்கர் நிலத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன் கரிகால் சோழன் காலத்தில் 4.2 டன் நெல் விளைந்தது என்று பொறுநர் ஆற்றுப் படையில் வரும் இந்தப் பாடல் சொல்வது பொய்யா?

”சாலி நெல்லின் நிறை கொள்வேலி ஆயிரம் விளை உண்டாக்க காவிரி புறக்கும் நாடு கிழவோனே”

இந்தப் பசுமைப் புரட்சியால் விலை குறைந்து விளைச்சல் அதிகரித்து நாமெல்லாம் சுபிட்சமாக அல்லவா இருந்திருக்கவேண்டும் இருக்கிறோமா?

அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உன்னழிக்கல் ஆகா அரண் - குறள் : 421

குறளின் எண்ணையும் கருத்தையும் பாருங்கள்

கருவிகளில் சிறந்த கருவி அறிவு. மனிதரைத் துன்பங்களிலிருந்து பாதுகாக்கும் கருவி அறிவு. அறிவானது அழிவுகளிலிருந்து காத்து நிற்கும் கோட்டை மதில் சுவர் போன்றது.

செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்! - குறள் : 466.

செய்யக்கூடாததைச் செய்தாலும் கேடு வரும். செய்ய வேண்டியதைச் செய்ய மறுத்தாலும் கேடு வரும்.


படியுங்கள்..



தாய்மண் புத்தகம் .
இயற்கை வேளாண்மைப் பாடநூல்

வெளியீடு வானகம் கல்விக் குழு, 60/3 எல்பி ரோடு, திருவான்மியூர், சென்னை-41. vaanagamoffice@gmail.com


அடுத்து..  

ஆர்கானிக் பார்மிங் அல்லது ஆர்கானிக் லிவிங் எது சரி?


மீண்டும் பேசுவோம்...


நன்றி!

.

13 comments:

Vidhya Chandrasekaran said...

well written

நிறைய இடங்களில் ஆர்கானிக் ஸ்டோர் என ஆரம்பித்திருக்கிறார்கள். விலையும் அதிகமாக இருக்கிறது. அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்.

பொ.முருகன் said...

செயற்கையாக வாழப் பழகிக்கொண்ட மனிதனுக்கு,இயற்கையின் அருமை தெரிய வாய்ப்பில்லை-இப்படிக்கு. குளிர் சாதன அறையில் இருந்து,பொ.முருகன்.

சுரேகா.. said...

//அந்த அழிவு நாளே இந்த இயற்கைக்கு மனித இனம் செய்த முதல் நல்ல நிகழ்வாக இருக்கலாம்//


அதுதான் இயற்கை மனிதனுக்குச் செய்யும் நல்லதாகவும் இருக்கும். உயிரோட இருந்து என்ன பண்ணப்போறானுங்க கிராதகனுங்க!!

bandhu said...

தெளிவாகவும் அருமையாகவும் எழுதியிருக்கிறீர்கள்.

Rajagopal.S.M said...

"ழ" பதிப்பகத்துக்கு இன்னும் ஒரு புத்தகம் ரெடி. கேஆர்பி செந்தில் கவனத்திற்கு.

Rajagopal.S.M said...

// நாமும் ஒரு உயிரினம்தான் அழியக்கூடிய பட்டியலில் கூடிய சீக்கிறம் மனித இனத்தின் பெயரும் வரும். அனேகமாக அந்த அழிவு நாளே இந்த இயற்கைக்கு மனித இனம் செய்த முதல் நல்ல நிகழ்வாக இருக்கலாம்.//

பூமிக்கு தேவை இல்லாத ஒரே உயிரினம் "மனிதன்"

ஜோதிஜி said...

மீண்டும் மகுடம் சூட வாழ்த்துகள்.

Unknown said...

முதல் பாராவே அசத்தல்... இயற்கை விவசாயத்தை மீண்டும் கொண்டுவர பாடுபடுவோம்..

Unknown said...

முதல் பாராவே அசத்தல்... இயற்கை விவசாயத்தை மீண்டும் கொண்டுவர பாடுபடுவோம்..

க‌ரிச‌ல்கார‌ன் said...

ந‌ன்றி

தொட‌ருங்க‌ள்

பின்னோக்கி said...

வேளாண் குறித்த பல விஷயங்கள் அறிந்துகொள்ள முடிந்தது. அருமையான விழிப்புணர்வு தொடர். மான்சாண்டோ கம்பெனி இருக்கும் வரை விவசாயிகள் என்ன செய்யப்போகிறார்களோ தெரியவில்லை

ஹுஸைனம்மா said...

ஒரு சந்தேகம்.

இயற்கை முறையில் வேளாண்மை மிகக் குறைந்த செலவு பிடிக்கும் என்றுதான் எல்லாரும் சொல்கிறீர்கள். ஆனால், ”ஆர்கானிக் ஃபுட்” என்று பெயரிட்டு விற்கப்படுபவை கொள்ளை விலையாக அல்லவா இருக்கிறது? இது பொதுமக்களுக்கு இயறகை வேளாண்மை முறை குறித்த தவறான புரிதலை ஏற்படுத்தாதா?

உணவு உலகம் said...

இயற்கை விவசாயம் குறித்த அற்புதமான பதிவு.