பலா பட்டறை: ஒரு பரதேசியின் பயணம் - 7 மஹா கும்பமேளா, காசி (பாகம் - 2)

ஒரு பரதேசியின் பயணம் - 7 மஹா கும்பமேளா, காசி (பாகம் - 2)

                                                                 திருச்சிற்றம்பலம்.

முதல் பாகம்.

கங்கையும், யமுனையும் தனித்தனியே வந்து Y போல சங்கமிக்கும் இடமே திரிவேணி சங்கமம், மூன்றாவது நதியாக சரஸ்வதி ஆழத்தில் பாய்வதாக நம்பிக்கை. அது போலவே இருவேறு நிறங்களுடன் வந்து சங்கமிக்கும் இடத்தில் முன்று வெவ்வேறு நீர் ஓட்டங்களை உணர முடியும்.







ஒரு சிறிய படகில் நாங்கள் மூன்று ஆறுகளும் சங்கமிக்கும் இடத்திற்குச் சென்றோம். அங்கே மற்றொரு பெரிய படகு நிலை பெற்றிருந்தது, அதில் தலைமைப் பூஜாரி ( இவரை பாண்டா என்று அழைக்கிறார்கள்) அமர்ந்திருந்தார். நாம் வந்த படகிலிருந்து, இவர் படகினூடாக ஏறி, அடுத்தப் பக்கம் இறங்கி குளிக்க வேண்டும் என்பது ஒரு வருமான ஆன்மிக செட்டப். சில சாமந்திப் பூக்களும் , தேங்காயும், வாழைப்பழமும், தையல் இலையில் வைத்து ஆளுக்குத் தக்க ரேட் வைத்து பாண்டா கூடவே தட்சணையும் கேட்டுப் பெற்றுக்கொண்டிருந்தார். நாங்கள் கண்டுகொள்ளாமல் குளித்துவிட்டு வந்தோம். அந்த இடத்தில் முழங்கால் அளவே ஆழம் என்பதால் தைரியமாகக் குளிக்க முடிந்தது. குளிர் நகர்ந்து, சூரியனின் சூடு உடலில் உணரத்துவங்கிய நேரத்தில் குளிர்ந்த நீரில் முங்கிக் குளித்த அனுபவம் ஒரு பக்கம் என்றால், பல சரித்திரங்களை விழுங்கி அயராது ஓடிக்கொண்டிருக்கும் இந்த மகா நதியில் இன்று நான் உடல் நனைத்துக்கொண்டிருக்கிறேன் என்பதே உடலையும், மனதையும் பூரிக்க வைத்தது. எல்லாவற்றையும் மறந்து சிறிது நேரம் குழந்தை போல முங்கி எழுந்து, கைகளால் தழுவி, சூரியனைப் பார்த்து கை கூப்பித் தொழுது என்று கலவையான நிலையில் இருந்தேன். பின் படகிற்குத் திரும்பி, வாசுவும் சென்று குளித்து வந்தவுடன், கரைக்குத் திரும்பினோம்.  கரையில் இன்னும் மக்கள் கூட்டம் அதிகமாகி இருந்தது.

நாங்கள் வந்த வழியே ஸ்வாமி ஓம்கார் அவர்களின் குடிலை அடைந்தோம். பாஸ்மதி அரிசி சோறு, பயறு இனிப்புக் கூட்டு, காய்கறிக் குழம்பு என்று அட்டகாசமான சமையல் ஸ்வாமிஜியின் நளபாகத்தில் தயாராகி இருந்தது. அழகான சிறிய ப்ராத்தனைக்குப் பிறகு அனைவரும் உண்ணத்தொடங்கினோம்.

நேற்று இரவின் குளிருக்கு சமமாக வெளியே வெயில் வாட்டிக்கொண்டிருந்தது. வெயில் தாழக் கிளம்புங்கள் என்று ஓம்கார் அன்பாகக் கேட்டுக்கொண்டதன் பேரில் குடிலிலேயே தங்கி, ஸ்வாமிஜியின் கும்பமேளா அனுபவங்களைக் கேட்டு மகிழ்ந்தோம். மாலை அங்கிருந்து விடை பெற்று மீண்டும் மக்கள் கடலில் மூழ்கி கடைகளையும், கும்பமேளாவிற்கு வந்துகொண்டே இருக்கும் மக்களையும் வேடிக்கப் பார்த்தவாரே நாங்கல் தங்கி இருந்த நகரத்தார் சத்திரத்திற்கு வந்து சேர்ந்தோம். ஆன்மா குதூகலிக்க, உடல் ஓய்வெடுக்கச் சொல்லி ஒற்றைக்காலில் தவமிருந்தது. ஒரு கையேந்தி பவனில் கச்சோரி சாப்பிட்டுவிட்டு உறங்கப் போனோம்.

-@-

மறு நாள் சங்கமத்தின் வழிகள் ஓரளவு பழகி விட்டிருந்தன. இன்றைக்கு இன்னும் அதிக மக்கள் வருகை எதிர்பார்க்கப்பட்டதால், சங்கத்திற்கு வரும் வாகனங்கள் அனைத்தும் அவுட்டரிலேயே தடுக்கப்பட்டு மக்கள் நடந்தே சங்கத்தை அடைய வேண்டிய நிலையில் இருந்தனர். காலை நாங்கள் மீண்டும் ஸ்வாமிஜியை சென்று பார்த்துவிட்டு, கங்கையில் குளித்துவிட்டு, மதியம் காசிக்குக் கிளம்ப ஆயத்தமானோம். ஏற்கனவே வெளியூர்களுக்குச் செல்ல வண்டி முன்பதிவு செய்தவர்கள் எல்லாம் வண்டி ஊருக்குள் வராது என்பதால் நடந்து அல்லது குதிரை வண்டியில் 7கிலோ மீட்டராவது பயணம் செய்ய வேண்டிய அவஸ்தையில் இருந்தனர். குருட்டாம்போக்கில் எங்களுக்கு சத்திரம் அருகிலேயே வண்டி கிடைத்தது. உள்ளூர்வாசி என்பதால் கார் ஓட்டுனர் சாதுர்யமாக சந்து பொந்தெல்லாம் ஓட்டி ஒருவழியாக மெயின் ரோட்டிற்கு வந்து காசிக்குப் பயணப்படலானோம். அலகாபாத்தின் வெளியே 15 கிலோ மீட்டர் அளவிலும் வண்டிகள் தடுக்கப்பட்டு மக்கள் சாரி, சாரியாக சங்கத்யை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் வண்டி வாரனாசி எனப்படும் காசி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது.

ஹைவேசிலிருந்து வாரனாசி ஊருக்குப் பிரியும் இடத்திலேயே வாகனத்தைத் தடுத்து வேறு வழியாகச் செல்ல போலீசார் எச்சரித்தனர். கும்பமேளா முடித்து மக்கள் கூட்டம் காசியை அடுத்துக் காண வந்ததால் காசி திணறிக் கொண்டிருப்பதே இதற்குக் காரணம். மீண்டும் எங்கள் மகிழ்வுந்துச் சாரதியின் மதி கூர்மையால் குறுக்கு வழி சகாயத்தில் காசி நகருக்குள்ளே நுழைந்தோம்.

மொத்தமே பத்து அடி அகலமுள்ள சாலையில் வந்த ஒரு ஐந்து முக்கில் எல்லா பக்கமும், ரிட்ஷாக்களும், காரும், ஸ்கூட்டரும், சைக்கிளும், காளை மாடும், நடப்பவர்களுமாக ஒரு மிகப்பெரிய ட்றாபிக் ஜாம் ஏற்பட்டு, பின்னர் அதுவாகவே சரியாகி எங்கள் வண்டி நகரத் துவங்கியபோது இந்தக் குறுகிய வழிகள்தான் காசியின் ஒரு சிறப்பு அடையாளம் என்று புரிந்துகொண்டேன். ஒரு கட்டத்திற்கு மேல் எங்கள் வண்டிக்கும் அனுமதி மறுக்கப்பட்டு, நாங்கள் ரிக்‌ஷாவில் ஏறி காசி நகரத்தார் சத்திரத்தை நோக்கிப் பயணித்தோம். இங்கே சைக்கிள் ரிக்‌ஷாக்கள் அதிகம், 10 ரூபாயில் சந்து பொந்தெல்லாம் அனாயசமாக ஓட்டி நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு கொண்டு சேர்த்து விடுவார்கள். அதிக பட்சம் 25 ரூபாய்க்கு மேல் கேட்பதில்லை. அதிக மக்கள், தொடர் வருமானம் இருந்தும் பேராசையின்றி கட்டணம் வாங்கும் அந்த எளிய மக்களை நினைத்து ஆச்சரியப்பட்டேன்.

ஒரு வழியாக சத்திரத்தை அடைந்து, காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் சென்றோம். சத்திரத்தின் அருகிலேயே கோவில், ஆனால் கூட்டம் அதிகமாக இருந்தது. இரவு 8மணிக்கே கிட்டத்தட்ட 3 கிலோ மீட்டருக்கும் அதிகமாக தரிசன வரிசை நீண்டிருந்தது. சரி என்று நாங்களும் ஜோதியில் ஐக்கியமாகி வரிசையில் நடக்க ஆரம்பித்தோம். மெயின் ரோடிலிருந்து வலது ஓரமாக கட்டைகள் கட்டி, வரிசை முன்னேறிக் கொண்டிருந்தது. கையில் மணி பர்ஸ் தவிர வேறு எதையும் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. வழி நெடுக இரண்டுக்கு இரண்டு கடையில் சிறிய லாக்கர் வைத்து, சிறிய தொகை வாங்கி அனுமதி மறுக்கப்பட்ட பொருட்களைப் பாதுகாக்கும் வசதி செய்து தருகிறார்கள். மெதுவாக நகரும் வரிசையில் வழியில் பல்வேறு பாலில் செய்யப்பட்ட இனிப்புகளை விற்கிறார்கள். இப்படி ஒரு சுவையை பச்ல் பொருட்களில் வாழ்நாளில் சுவைத்திருக்க முடியாது. அப்படி ஒரு சுவை, பெயரெல்லாம் நினைவிலில்லை, பாலின் நுரையில் செய்த ஒரு இனிப்பை உண்டு இதுதான் பெஸ்ட் என்று நினைப்பதற்குள், பால் ஏடில் செய்யப்பட்ட அடுத்த இனிப்பு மயக்கத்தைத் தருமளவிற்கான சுவையுடன் இருக்கிறது. போதாதகுறைக்கு கேக்கைப் போல இருக்கும் தயிர். பால் பொருட்களில் செய்யப்பட்ட தின்பண்டங்களில் காசிக்கு ஒரு தனி இடமுண்டு என்று நினைக்கிறேன். கும்பமேளாவிலும் சரி, இங்கும் சரி எவ்வளவு சாதாரண ப்ளாட்பாரக் கடையில் தின்றாலும் வயிற்றுக்கு ஒரு கேடும் செய்யவில்லை. சைக்கிளில் உணவு விற்பவரும் சுவையான, சுகாதாரமான உணவுகளையே விற்கின்றனர்.

ஒரு வழியாக கோவிலுக்கான நுழைவாயில் சந்தில் நுழைந்தோம். மிகக் குறுகலான ஒரு சந்து அது. சுமார் மூன்றடி அகலம் கூட இருக்காது. மிக அதிகமான பல அடுக்கு பாதுகாப்பு வசதிகள், எங்கு பார்த்தாலும் காவலர்களும், மிலிட்டரி கமாண்டோக்களும் பாதுகாப்புக்கு இருந்தனர். வழியின் இரண்டுபக்கமும் இரண்டுக்கு இரண்டு அளவிலான கடைகள், ஜகஜ்ஜோதியாக மின் விளக்குகளில் ஜொலித்துக்கொண்டிருந்தது. சிறிது சிறிதாக மக்களை அந்த சந்துக்குள் அனுப்பிக் கொண்டிருந்தனர். பல திருப்பங்கள் கடந்து சிறிய வீடுபோல ஒரு வாசலில் நுழைந்தால் அதுதான் காசி விஸ்வநாதர் கோவில். ஆம், மிகச் சிறிய கோவில், காசி பற்றி மிகப்பெரிய அளவில் நீங்கள் கற்பனை செய்து வந்து பார்க்கும்போது இது மிகப்பெரிய ஆச்சரியத்தைத் தரும். வரலாற்று ரீதியான படையெடுப்புகளும், பாதுகாப்புக் காரணங்களே இந்தக் கட்டமைப்புக்குக் காரணம். உள்ளூர்க்காரர்கள் தவிர்த்து மற்றவர்களுக்கு இந்தக் கோவிலைச் சுற்றி உள்ள நூற்றுக்கணக்கான சந்து பொந்துகள், கொடைக்கானல் மதிகெட்டான் சோலையில் தனியே சென்று மாட்டிக்கொண்டதை ஒப்ப தரிசனத்தைத் தரவல்லது.

கோவில் அடைக்கப்படும் நேரத்தில் நாங்கள் உள்ளே சென்று கூட்ட நெரிசல், காவலர் கெடுபிடிக்கு இடையில் கிடைத்த கேப்பில் தரிசனத்தைப் பார்த்துவிட்டு ஏதோ ஒரு சந்தில் புகுந்து ஒர் வழியாக மெயின் ரோடு வந்து சேர்ந்தோம். மீண்டும் பொருட்கள் வைத்திருந்த கடைக்குச் சென்று எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு, கோவில் நுழைவாயில் அருகில் பிரிந்த சந்து வழியே மணிகர்ணிகா காட்டிற்குப் (Ghat) பயணப்பட்டோம்.

இது கங்கையின் ஒரு படித்துறை. வருடம் முழுவதும் பிணங்கள் எரியூட்டப்படும் முக்கியமான இடங்களில் இதுவும் ஒன்று. ஒரு சடலத்தை எரிக்கத் தேவையான அனைத்துப் பொருட்களும் கிடைக்கும் கடைகள் வழியெங்கும் இருக்கின்றன. மெல்லப் படியிறங்கி ஆற்றின் கரையிலுள்ள மணிகர்ணிகா படித்துறையை அடைந்தபோது, சுமார் 10 சடலங்கள் எரிந்துகொண்டிருந்தன. நல்ல குளிரில் அந்த வெப்பத்திலேயே குளிர் விரட்டி மெல்ல எரியும் சடலங்களைக் கவனிக்கலானோம். நேரம் நள்ளிரவு பன்னிரெண்டைத் தாண்டியும் அந்த இடத்தில் எரிபவரின் உறவினர்கள் பலர் அமைதியாக சடலம் எரிவதைப் பார்த்துக்கொண்டிருந்தனர். டமால், டமால் என்று கபாலங்கள் வெடித்து தீப்பொறி கிளம்பிக் காற்றில் பறந்தது. மனம் மிக அமைதியாகிவிட்டிருந்தது. எதெல்லாம் தீட்டு, புனிதமில்லை, பயம் என்று வெளியே ஒதுக்கப்பட்டிருந்ததோ அதெல்லாம் இங்கே புனிதம். சர்வமும் சாம்பலாகும் இந்தக் கங்கைக் கரை ஒரு மிகப்பெரிய விடுதலை தரிசனம். இத்தனைப் பிணங்கள் எரிந்தும் எந்த வடையும் இல்லை. விறகு எரியும் புகை வாசமே உடலுள்ளும், உடை மேலும் சுற்றிச் சூழந்துகொண்டது. சரியாக ஒரு வருடம் கழித்து இன்றைக்கும் நினைவிலிருந்து அகலவில்லை.







வெறுமனே சிதைகள் எரிவதைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தேன். பெற்றோர், மனைவி, மக்கள், சம்பாத்தியம், அன்பு, குரோதம், காதல், காமம், ஆசை, விருப்பு, வெறுப்பு, அகங்காரம், செல்வம், கல்வி, அறிவு, கடவுள், பயம், துணிவு எல்லாவற்றையும் ஒருபக்கமாய் மனம் ஒதுக்கி ஒரு மிகப்பெரிய ஆழ்ந்த மவுனத்தில் அது உட்கார்ந்துகொண்டது. இங்கு வந்து தனது ஓயாத ஆட்டங்களிலிருந்து விலகி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவே அது இத்தனை நாளும் என்னை பல வித்தைகள் காட்டி என்னை இங்கே வரவழைத்திருக்கிறது என்று நானும் என்னுள்ளிலிருந்து விலகியே இருந்தேன். சுமார் ஒரு மணி வரைக்கும் நானும் வாசுவும் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தோம், இருவர் கண்ணிலிருந்தும் எங்களை அறியாமல், ஏனென்று அறியாமல் கண்ணீர் வந்துகொண்டிருந்தது. மரணம் பற்றிய ஏதோ ஒரு விடுதலை உள்ளே கிடைத்தது. மெதுவாக அங்கிருந்து கிளம்பி நாங்கள் தங்கி இருந்த அறைக்கு வந்து சேர்ந்தோம். முகத்தின் தோல் அந்த மயானக் கரையின் வெப்பத்தையும், உடை முழுவதும் அந்தப் புகையின் வாசமுமாக இருந்தது, அப்படியே படுத்து உறங்கிப் போனோம்.

(தொடரும்)





0 comments: