பலா பட்டறை: 11/01/2012 - 12/01/2012

ஆண்ட்ராய்ட் போன்கள் - ஒரு அறிமுகம் - 2




முதல் பாகத்துல குறிப்பிட்ட ஆண்ட்ராய்ட் விக்கி பேஜ யாரும் படிச்சிருக்கமாட்டீங்கன்னு தெரியும். இட்ஸ் ஓக்கே. 

மணியம்மாள் டெக்ஸ்டைல்ஸ் மாதிரி எதை எடுப்பது? எதை விடுப்பது? என்று குழப்பும் அப்ளிகேஷன்களால் மண்டை காயத் தேவையில்லை. ஆனால் என்ன மாடல் என்பது கொஞ்சம் குழப்பும்.

முன்பே சொன்னதுபோல நமக்கு என்ன தேவை என்பதைப் பொருத்தே, தேவையான விஷயங்கள் அடங்கிய ஒரு போனை தேர்ந்தெடுப்பது நல்லது. பல ஹை எண்ட் மாடல்களை வைத்துக்கொண்டு வெறுமனே பேசுவதற்குமட்டும் பயன்படுத்துபவர்களைப் பார்த்திருக்கிறேன். 

விலை அதிகமாக இருக்கும் மாடல் நல்ல மாடல். அல்லது விலை அதிகமான மாடல் வைத்துக்கொள்வதே நான் புழங்கும் அலுவலக, மேல்தட்டு வட்டத்திற்கு எனக்கு மதிப்பாக இருக்கும் என்பது. இரண்டாவதை விட்டுவிடுவோம், சூழ்நிலை கருதி அதை அவர்கள் தவிர்க்க முடியாமல் போகலாம். ஆனால் முதல் காரணி கொஞ்சம் சிக்கலானது. காசு இருக்கிறது என்பதற்காக ஒரு ப்ரைவேட் ஜெட் வாங்கி அதை மண்பாடி லாரியில் ஏற்றி ஒரு க்ளீனரைப்போல ட்ரைவர் அருகில் அமர்ந்துகொண்டு ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் போவது போல அபத்தமானது. பந்தாவான பொஸிஷனில் இருப்பவர்கள் மிகச் சாதாரணமான அடிப்படையான விஷயங்களைப் பயன்படுத்துவதைப் பார்த்திருக்கிறேன். கேட்டால் எதுக்கு காச வேஸ்ட் பண்ணனும்? எப்படியும் இதன் மீதான மோகம் ஓரிரு மாதங்கள் கூட இருக்காது, அதன் பிறகு இதுவும் மற்றொரு போனே என்ற தத்துவத்தை உதிர்ப்பார்கள். எனவே எப்பொழுதும் இந்தியத் தாரக மந்திரமான சீப் அண்ட் பெஸ்ட் என்ற சூத்திரத்தினை நினைவில் வைப்போர் மேலே தொடர்க!

ஐசிஎஸ் 4.0.4 ல் இப்படித்தான் தமிழ் தெரிகிறது.

டால்பின் என்ற ப்ரவுசரைத் தரவிறக்கிப் படிக்கும்போது


இந்தியாவில் விற்கப்படும் சில ஆண்ட்ராய்ட் போன்களில் தமிழ் எழுத்துகள் தெரிவதில் சிக்கல் இருக்கிறது. இது பெரும்பாலும் ஜின்ஜெர்ப்ரெட் 2.3.6 வெர்ஷன்களில் இல்லை. அதாவது நீங்கள் பார்க்கும் பேஸ்புக், இணையம், எஸ் எம் எஸ், கூகிள் ப்ளஸ் போன்றவைகளில் தமிழில் பகிரப்படுபவைகளில், தமிழ் எழுத்துகள் அழகாகவே தெரியும். நீங்கள் போன் செட்டிங்ஸில் எந்த மாற்றமும் செய்யத் தேவையில்லை. அதற்கு முன்பாக வந்த வெர்ஷன்களில் இந்தப் பிரச்சனை இருந்தது. அப்படித் தமிழ் தெரியாத பிரச்சனை ஆண்ட்ராய்டில் மட்டுமல்ல ஐபோன் தவிர்த்து மற்ற போன்களிலும் இருந்தது, அதற்கு ஒபெரா மினி எனப்படும் ஒரு ப்ரவுசரை தரவிறக்கி அதில் சில செட்டிங்ஸ் மாற்றங்கள் செய்து தமிழ் படித்து வந்தனர். 


ஜின்ஜெர்ப்ரெட் 2.3.6 (Ginger Bread) வெர்ஷனுக்குப் பிறகான ஐஸ் க்ரீம் சாண்ட்விச் (ICS 4) லும் வெர்ஷன் 4.0.3 வரை தமிழ் பல மாடல்களில் சரியாகத் தெரிகிறது, சில போன்களில் கொக்கி கொமாராக இழுத்துக்கொண்டும் தெரிகிறது.லேட்டஸ்ட் ஜெல்லி பீனில் இந்தக் குறை இல்லை என்றே நினைக்கிறேன். இதைப்படிக்கும் என்னுடைய அமெரிக்க வாசகர்கள் யாராவது ஜெல்லிபீனில் இயங்கும் நெக்ஸஸ் போனை பரிசளித்தால் அதைப்பற்றியும் எழுதத் தயாராக இருக்கிறேன். ஒரு எழுத்தாளனாக என்னால் வேறென்ன கைமாறு செய்ய முடியும்?  :)


தமிழ்விசை பற்றி அறிய படத்தை க்ளிக் செய்யவும்.


சரி, தமிழ் படித்தால் மட்டும் போதுமா? தமிழில் தட்டச்ச ஏதேனும் வழி இருக்கிறதா? என்றால் அதற்கும் ஒரு அப்ளிகேஷன் இருக்கிறது. தமிழ்விசை எனும் அந்த விசைப் பலகையைப் பயன்படுத்தி ஆங்கிலத்தில் தட்டச்சியே தமிழைக் கொண்டுவரமுடியும் (NHM போல).

unmaiyil indha tamilai nammudaiya pOnil padikka mudivadhum ezhudha mudivadhumthaan evvalavu makilchiyaaka irukkiradhu!!

படிக்கவே கடுப்பாக இருக்கிறதல்லவா? இதற்குப் பதில் அழகு தமிழிலேயே அனைத்தையும் படிக்க முடிவதும், தட்டச்ச முடிவதும் சமூகதளங்களான பேஸ் புக், ட்விட்டர், ப்ளாக், கூகுள் ப்ளஸ் போன்றவற்றை பெரும்பாலும் பயன்படுத்துபவர்களுக்கு மிகப்பெரிய வரமாக அமைந்துவிட்டது. யோசித்துப் பாருங்கள். சிம்பியன் போன்ற ஓப்பன் ஸோர்ஸ் அல்லாத சிஸ்டத்தில் இயங்கும் போன்களில் இது சாத்தியமே இல்லை. அவர்களிடம் என்னுடைய போனில் தமிழ் தெரியவில்லை என்று கேட்டால் அவர்களால் எதுவும் செய்ய முடியாது. ஆனால் ஆண்ட்ராய்ட் தொழில்நுட்பத்தில் நம்மவர் ஒருவரே தமிழில் எழுத ஒரு தட்டச்சு அப்ளிகேஷனை உருவாக்கி அதுவும் இலவசமாகத் தந்திருக்கிறார்கள் என்றால் இது மிகப் பெரிய விஷயம்தானே? இதுதான் ஆண்ட்ராய்டின் வெற்றிக்குக் காரணம்.
பேஸ்புக்கில் தமிழ் படிக்கும்போது


ட்விட்டரில் தமிழ்.

இதுமட்டுமல்ல விதவிதமான கீபோர்ட்கள் இருக்கிறது. ஸ்வைப் என்பது அதில் ஒன்று How are you  என்று தனித்தனியாக ஒவ்வொரு பட்டனாக ஒற்றி எடுக்காமல் அப்படியே ஒவ்வொரு எழுத்தையும் தொட்டு ஒரு கோலம் போட வேண்டியதுதான் வார்த்தை ரெடி! 

கோலம் போட்டு டைப் பண்ணும் ஸ்வைப் கீ போர்ட்


இப்படி அவசியமானவற்றை எங்கே தேடுவது? எப்படித் தரவிறக்கிப் பயன்படுத்துவது? அதற்குத்தான் கூகிள் ப்ளே என்ற மார்க்கெட் உதவுகிறது. https://play.google.com/store இது உங்கள் ஆண்ட்ராய்ட் போனிலேயே இருக்கும். இதன் மூலம் வேண்டிய அப்ளிகேஷன்களை நீங்கள் தரவிறக்கிப் பயன்படுத்தமுடியும். இதில் தரவிறக்க உங்களுக்கு ஒரு ஜிமெயில் அக்கவுண்ட் கண்டிப்பாகத் தேவை. இது கிட்டத்தட்ட கூகுள் சர்ச் போலத்தான். ஏதேனும் ஒரு குறிச்சொல்லை வைத்துக்கொண்டு அதற்கான அப்ளிகேஷனை நீங்கள் தேடிக் கண்டடைய முடியும். ஒவ்வொரு ஆப்ஸிற்கும் ரேட்டிங், அதைப் பயன்படுத்தியவர்களின் விமர்சனங்கள் இருக்கும். உங்கள் கணினியிலிருந்தே உங்களுக்குப் பிடித்த அப்ளிகேஷனை நீங்கள் தரவிறக்க கட்டளை குடுத்தால் அது ஆட்டோமேட்டிக்காக உங்கள் போனில் டவுன்லோடாகி இன்ஸ்டால் செய்ய ஆரம்பித்துவிடும். அஃப்கோர்ஸ் இணையத் தொடர்பு மூலமாகத்தான். இணையத் தொடர்பில்லாத ஸ்மார்ட்போன் இரண்டு கையில்லாத சால்வை போத்திய கெட்டபய காளியைப் போல.

சரி, இனி போன் வாங்குவதிலிருந்து ஆரம்பிப்போம்.

முதலில் என்ன பட்ஜெட் என்பதில் உங்களுக்கான தோசை, சாதாவாகவோ, மசாலா சேர்த்தோ, ஸ்பெஷல் சாதாவாகவோ, ஊத்தப்பமாகவோ கிடைக்கும். 

ஏனென்றால் பட்ஜெட்டை சார்ந்ததுதான் தொடுதிரை / அளவு (அதாங்க டச் ஸ்க்ரீன் ), இன்டர்னல் மெமரி, ப்ராசசர், கேமரா மெகா பிக்ஸல் மற்றும் தரம் போன்றவை அமையும். 10000த்திற்குள்ளான போன்கள், 15000த்திற்குள்ளான போன்கள், 20, 30, நாற்பதாயிரத்தை நெருங்கியும் மாடல்கள் இருக்கின்றன. 

1ஜிகா ஹெர்ட்ஸ் டுயல் கோர் ப்ராசசர், 512>எம்பி ராம், 4> ஜிபி இண்டர்னல் மெமரி, 3.5>இன்ச் ஸ்க்ரீன், 5 மெகா பிக்ஸல் கேமரா, கூடவே ஒரு ஃப்ரண்ட் கேமரா (ஸகைப், கூகுள் ஹேங் அவுட், வீடியோ காலிங்கிற்கு) என்பதை குறைந்த பட்ச அளவாக இருந்தால் ஆண்ட்ராய்ட் ஐஸ்க்ரீம் சாண்ட்விச் மாடலை ஓரளவு நம்மால் அனுபவிக்க முடியும். இதில் முக்கியமானது இண்டர்னல் மெமரி எனப்படும் போனிலேயே இருக்கும் நினைவகத்தின் அளவு. பல மாடல்களில் இது மிகக் குறைவாக இருக்கும் அதனாலேயே விலை கம்மியாக இருக்கும். நீங்கள் பல அப்ளிகேஷனை தரவிறக்கிப் பயன்படுத்தத் துவங்கும்போது இந்த நினைவகம் முழுவதும் நிரம்பி உங்கள் போனின் செயல்பாட்டை மிகவும் மெதுவாக ஆக்கிவிடும், அருகிலிருக்கும் அமெரிக்க நண்பர் இதுக்குத்தாங்க ஆப்பிள் ஐபோன் வாங்குங்கன்னு சொன்னேன் என்று உங்களை வெறுப்பேற்றுவார். (உடனே அதுல பேட்டரியக் காமிங்க, மெமரி கார்ட் ஸ்லாட் இருக்கா? என்றெல்லாம் எதிர்கேள்வி கேட்டு சமாளிப்போம்னு வெச்சிக்கிடுங்க இருந்தாலும்...) 

விற்பவரும் சாமர்த்தியமாக 32ஜிபி வரைக்கும் எக்ஸ்பாண்ட் பண்ணிக்கலாம் சார் என்று உங்களை அசரடிப்பார், ஆனால் இண்டர்னல் மெமரியில் இருக்கும் அனைத்தையும் நீங்கள் எஸ் டி கார்டுக்கு மாற்ற முடியாது என்பதை நினைவில் வையுங்கள். (ரூட்டிங் என்றொரு பைபாஸ் சர்ஜரி இருக்கிறது அதைப் பற்றி இப்பொழுது வேண்டாம்)

சரி, இண்டர்னல் மெமரி ஓக்கே. ஒரு ஜிகா ஹெர்ட்ஸ் டுயல் கோர் ப்ராஸஸர் வேகமான செயல்பாட்டுக்கு உதவும். சரி. அதுவும் இருக்கிறது. பிறகு? கேமரா. மின்னுவதல்லாம் மின்னலல்ல என்பதைப்போல 5 மெகா பிக்ஸல் என்று சொல்லுவதெல்லாமும் அதே தரத்தில் இருக்கும் என்பது நிச்சயமில்லை. எவ்வளவு சாதாரணக் கேமராவும் நல்ல வெளிச்சத்தில் நன்றாகத்தான் படமெடுக்கும் என்றாலும், பயன்படுத்தப் படும் லென்ஸ் வைத்து படத்தின் தெளிவு கூடுகிறது, போலவே அதில் உபயோகப் படுத்தப்படும் எல் இ டி ப்ளாஸ் லைட்டும். ஆக, இது பயன்படுத்தப்படும் கேமரா லென்ஸ் கம்பெனியைப் பொறுத்து வேறுபடுகிறது. நோக்கியாவில் 3 மெகா பிக்ஸலில் அருமையாக விழும் படங்கள் சாம்சங்க் 5 மெகா பிக்ஸலில் சாதாரணமாக இருப்பதை கண்டிருக்கிறேன். எனவே கேமரா உங்களுக்கு முக்கியமென்றால் ஒரு படம் எடுத்து அதன் க்வாலிட்டி எப்படி? என்று சோதித்து வாங்குவதில் தவறில்லை. ஏனெனில் நல்ல கேமரா இருக்கும் போன் உங்கள் பிரயாணத்தில் தனியே ஒரு கேமராவைத் தூக்கிச் செல்வதிலிருந்து உங்களுக்கு விடுதலை அளிப்பதோடு, கண்டதும் உடனே பாக்கெட்டிலிருந்து படமெடுக்க உதவுகிறது. அது மட்டுமில்லை எடுத்த படத்தை நீங்கள் உடனே மெயிலிலோ, ட்விட்டரிலோ, ப்ளூடூத்திலோ, பேஸ்புக்கிலோ பகிர்ந்துகொள்ள முடியும். 

ஒரு சிம், இரண்டு சிம் கார்டுகள் கொண்ட போன்களும் கிடைக்கின்றன. உங்களுக்கு அவசியமானதை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். 

உதாரணத்திற்கு இரண்டு சிம் கொண்ட மூன்று மாடல்களைப் பார்ப்போம்:

நமது பட்ஜெட் 10000/- என்றால்..

சாம்சங் கேலக்ஸி ஏஸ் டுயல்
சோனி டிப்போ டுயல்
மைக்ரோமாக்ஸ் கேன்வாஸ் ஏ110

இந்த மூன்று மாடல்களில் மேலே சொன்ன அளவீடுகளை வைத்துப் பார்த்தால் எது சிறந்தது? நீங்கள் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்? ஏன்? 

முடிந்தால் இங்கே பதில் கூறுங்கள். அல்லது அலுவலகம் சென்று வரும் வழியில் லைவ் டெமோ காண்பிக்கும் ஒரு ஷோரூமில் இந்த மாடல்களை உபயோகித்துப் பாருங்கள். அல்லது அடிப்படையான விசயங்களை உங்களுக்குச் சொல்லும் கீழே உள்ள தளத்தில் சென்று வேறுபாடுகளைத் தெரிந்துகொள்ளுங்கள். அதில் உபயோகித்தவர்களின் கருத்துகளையும் படியுங்கள். 

உதாரணத்திற்கு, மேலே சொன்ன மாடல்களின் ஒரு ஒப்பீடு: 
(இந்தத் தளத்தில் வேறு, வேறு மாடல்களைக்கூட நீங்கள் ஒப்பீடு செய்துகொள்ளலாம். இதெல்லாமே அந்தந்த தயாரிப்பாளர்கள் தளத்திலிருந்து எடுத்துக் கோர்க்கப்பட்டவை, ஒன்றை வாங்கச் செல்வதற்கு முன்பான அதைப்பற்றிய சிற்றறிவுக்கு இவைகள் உதவுமே அன்றி இவையே வேதவாக்கல்ல என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.)


http://www.gsmarena.com/ இந்தத் தளத்தில் உங்களுக்குப் பிடித்த மாடலை செலக்ட் செய்து அதன் டெக்னிக்கல் விவரங்கள், அதை வாங்கியவர்களின் கருத்துகள் (அவை அனைத்தும் உண்மையுமல்ல பொய்யுமல்ல :) )போன்றவற்றையும் படியுங்கள். 

மேலே உள்ளவைகள் உதவிகரமாக இருந்ததா? அல்லது மேலும் குழப்புகிறதா? அல்லது, அய்யா சாமி ஆண்ட்ராய்ட் பொழச்சிப்போகட்டும் அதப்பத்தி எழுதிக் கொலபண்றத நிப்பாட்டுங்க, என்று தோன்றுகிறதா? எதுவா இருந்தாலும் கருத்த சொல்லுங்க பாஸ் 66A எல்லாம் பாயாது. 

டிஸ்கி: தமிழ்மணம் ரெகுலராகப் போய் மாமாங்கம் ஆகிவிட்டதால், சமீபத்தில் சென்றபோது அண்ட்ராய்டைப் பற்றி நன்றாக எழுதி இருக்கும் பலரின் தளங்களையும் வாசிக்க முடிந்தது. அடுத்த இடுகையிலிருந்து அவற்றின் இணைப்பையும் தர உத்தேசம். உங்களைக் கவர்ந்த இடுகை பற்றியும் கமெண்ட்டில் நீங்கள் தெரிவிக்கலாம். எனக்கும் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும்.

தொடர்வதற்கு நன்றி.


(கொடுமை தொடரும்..)

ஆண்ட்ராய்ட் போன்கள் - ஒரு அறிமுகம் - 1


ஆண்ட்ராய்ட் செல்பேசிகள்.




ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க கடைக்குச் சென்றால் மூன்றுவிதமான குழப்பம் வரும்? அண்ட்ராய்ட் போன், ஆப்பிள் ஐபோன், விண்டோஸ் போன். இதில் எதை வாங்குவது? 

சரி, முதலில் ஸ்மார்ட் போன் என்றால் என்ன? 

இண்டெர்நெட் வசதி பரவலாக்கப்பட்டபிறகு, செல்பேசிகள் வெறுமனே நீ நல்லா இருக்கியா? நாசமாப் போனியா? என்ற குசலம் விசாரிப்புகளுக்கும், குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ் என்ற அதிமுக்கிய தகவல் பறிமாற்ற எஸ் எம் எஸ் குறுஞ்செய்திகளையும் தாண்டி அருமையான எஃப் எம் ரேடியோவாகவும், எம்பி3 ப்ளேயராகவும் மெதுவாக அடைந்த பரிணாம வளர்ச்சியிலிருந்து ஒரேயடியாக, சாட்டிலைட் மேப், அட்டகாசமான ஸ்டில்/வீடியோ கேமரா, ஹை டெபினிஷன் வீடியோ, ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங், நேரடி 3ஜி வீடியோ கான்ப்ரன்ஸ், இண்டெர்நெட் ப்ரவ்ஸிங் என்று உள்ளங்கையளவு கம்ப்யூட்டராகவே ஆகிவிட்டது. இதற்கு ஒரு பெயர் வைக்கவேண்டாமா? அதுதான் ஸ்மார்ட்போன்.

ஆஹா, வந்ததுபார் யுகப்புரட்சி என்று செல்பேசி தயாரிப்பாளர்களும் அடித்து ஆடத்துவங்கினார்கள். ஏற்கனவே கோலோச்சிக்கொண்டிருந்த ஆப்பிள் கம்பெனியின் ஐபோன் சாதாரண மக்களுக்கு எட்டாக் கனியாக இருந்தது, தொடுதிரை வசதி, பல விதமான பயனுள்ள அப்ளிகேஷன்கள், செக்யூரிட்டி, வேகம் என்று சவால்விடமுடியாத உச்சத்தில் இருந்தது.

அன்று இந்தியாவில் இண்டு, இடுக்கெல்லாம் பெரும்பான்மையான மக்களுக்குத் தெரிந்தது நோக்கியா. அதன் ஆப்பரேட்டிங் சிஸ்டமான சிம்பியனில் நோக்கியா என்ன தருகிறதோ அது தரும் விலையில் மக்களும் வாங்கி அதில் என்ன இருக்கிறதோ, அதை சூப்பரோ, சூப்பர் என்று புளகாங்கிதம் அடைந்துகொண்டிருந்த நேரத்தில்தான், ஆண்ட்ராய்ட் என்னும் புதிய ஓப்பன் ஸோர்ஸ் எனப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கூகிளால் அசிர்வதிக்கப்பட்டு  சாம்சங் கம்பெனியால் முன்னெடுக்கப்பட்டு வித விதமான மாடல்களில் ஆப்பிளின் ஐபோன் வசதிகளுக்கிணையாக ஆனால் குறைந்த விலையில் மார்க்கெட்டில் நோக்கியாவையும் அதன் சிம்பியனையும் அடித்து ஆட ஆரம்பித்தது.




ஹெச்டிசி, சோனி, மோட்டரோலா, எல்ஜி போன்ற பிற கம்பெனிகளும் கூடவே சேர்ந்துகொள்ள ஸ்டார்ட் மீஜிக் என்று எங்கு பார்த்தாலும் ஆண்ட்ராய்ட் மாயை. ஒரு ஜிமெயில் அக்கவுண்ட் இருந்தால் ஆண்ட்ராய்ட் மூலம் உலகமே உங்கள் கையில் என்னும் அளவிற்கு சற்றொப்ப 5000 ரூபாயிலிருந்து போன்கள் விற்கப்பட ஆரம்பித்ததும், தகத்தகாய 3ஜி சிம்மைப் போட்டுக்கொண்டு மக்கள் இண்ட்டெர்நெட்டில் சீன் போட ஆரம்பித்து இதோ உங்க போன் ஐசிஎஸ்ஸா? ஜெல்லி பீனா என்று கேட்கும் அளவிற்கும், ஐயோ கொல்றாய்ங்க என்று ஆப்பிள் கேஸ் போட்டு சாம்சங்கை கோர்ட்டுக்கு இழுக்கும் அளவிற்கும் ஆண்ட்ராய்ட் நம்மை முழுமையாக ஆக்கிரமித்துக்கொண்டுவிட்டது என்றால் மிகையில்லை என்று எழுதினால் அது க்ளிஷேவாக இருந்தாலும் இதுவே உண்மை.      

சரி சார், எனக்கு நம்பர் போட்டு பச்சை பட்டனை அமுக்கி மிஸ் கால் குடுக்கத் தெரியும், சிகப்பு பட்டனை அமுக்கி காலை கட் செய்யத் தெரியும். ஒன் நியூ மெஸ்ஸேஜை ஓப்பன் பண்ணி 45கோடியே 50 லட்சம் விழுந்த லாட்டரி எஸ் எம் எஸ்ஸை வைத்துக்கொண்டு எங்கே போய் பணம் வாங்குவது என்று குழம்பி குபேரனுக்கு நன்றி சொல்லி யாருக்கும் தெரியாமல் ஐஎஸ்டி போட்டு அந்த நைஜீரியாக்காரனை நம்பத் தெரியும். ப்ளூ டூத் ஆன் பண்ணி அனுஷ்கா போட்டோவை அடுத்தவரிடமிருந்து வாங்கி ஸ்க்ரீன் சேவராக வைத்துக்கொள்ளத் தெரியும், எவண்டி உன்னப் பெத்தான் என்று ரிங் டோன் வைக்கத் தெரியும். பிறகு எதற்கு எனக்கு ஆண்ட்ராய்டும், ஸ்மார்ட் போனும் என்கிறீர்களா? நல்லது இதோடு எஸ்கேப் ஆகி அந்த நைஜீரியா எஸ் எம் எஸ டிலிட் பண்ணிட்டுப் போய் புள்ள குட்டியப் படிக்க வைங்க. 

--

சூப்பரா இருக்கும் சார் ஆண்ட்ராய்டுன்னு சொன்னானேன்னு வித்தவன நம்பி வாங்கினேன், ஒரு இழவும் புரியல, எங்க தொட்டாலும் சிலுத்துக்குது என்று புலம்பும் ஆண்ட்ராய்ட் போனை அது விற்ற பெண் அழகாக இருந்ததிற்காகவோ, கூடவே நான்ஸ்டிக் கடாய் ப்ரீயாகக் குடுத்தார்கள் என்பதற்காகவோ அறியாமல் வாங்கிய ஞானப்பழமா நீங்கள் ? உங்களுக்காகத்தான் சார் இந்த இடுகை, வாங்க எதோ எனக்குத் தெரிஞ்சத உங்களுக்கும் சொல்றேன்.

ஆண்ட்ராய்ட் என்பது ஒரு ஓப்பன் ஸோர்ஸ் மென்பொருள். விண்டோஸ் மென்பொருளில் எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ்7.  போல இதற்கும் வெர்ஷன்கள் உண்டு. ஆனால் கட்டுப்பாடுகள் இல்லை, அதாவது ஆண்ட்ராய்ட் பற்றிய ஞானம் உங்களுக்கு இருந்தால் உங்களுக்கு அவசியமான ஒரு அப்ளிகேஷனை நீங்களே உருவாக்கி உங்கள் போனில் பயன்படுத்திக்கொள்ள முடியும். 

ஏப்ரல் 30, 2009 ல் கப் கேக் 1.5 என்ற பெயரில் ஆரம்பித்து , டோனட், எக்லேய்ர், ஜிஞ்சர் ப்ரெட், ஹனிகோம்ப், ஐஸ் க்ரீம் சாண்ட்விச், ஜெல்லிபீன்  என்று நாக்கைச் சப்புகொட்டும் பெயர்களை தன்னுடைய ஒவ்வொரு வெர்ஷனுக்கும் கொண்டு பலவிதமான முன்னேற்றங்களுடன் சக்கைப்போடு போட்டுக்கொண்டு இருக்கிறது ஆண்ட்ராய்ட்.


போன்களின் ஹார்ட்வேரை குறுகக் குறள் போன்று குறுக்கிச் செய்து பல ஜால வித்தைகளை ஏற்ற ஏற்ற இந்த ஆண்ட்ராய்ட் மென்பொருளின் பெயரும் வெர்ஷனும் மாறிக்கொண்டே இருக்கிறது.



8 மெகாபிக்ஸல் கேமரா (பின் பக்கம்) 1.2 மெகாபிக்ஸல் கேமரா (முன்புறம் வீடியோ காலிங்கிற்காக) 5இன்ச் அளவிற்கான கண்ணைப் பறிக்கும் தொடுதிரை (டச் ஸ்க்ரீன்), மெமரி கார்ட் பொருத்தும் வசதி, இரண்டு சிம்கார்டுகள் பயன் படுத்தும் வசதி, ஜிபிஎஸ், அருமையான மைக், தெளிவான ஸ்பீக்கர், ஹெச்டி வீடியோ சினிமாவை தங்கு தடையில்லாமல் பார்க்கும் வசதி, நீங்கள் பேசுவதை அப்படியே புரிந்துகொண்டு திரையில் டைப் பண்ணும் வசதி, ஓரிடத்தில் நீங்கள் எடுத்த போட்டோவை வீடியோவை உடனே யு ட்யூபிலோ, உங்கள் ப்ளாக்கிலோ, ஜி மெயில், கூகிள் ப்ளஸ்ஸிலோ, ட்விட்டரிலோ இன்ன பிற சமூக தளத்திலோ உடனே அப்லோட் செய்யும் வசதி, நாசமா நீ போனியா தெருவாக இருந்தாலும் கூகிள் நேவிகேஷனில் டைப் செய்துவிட்டு காந்தக் கண்ணழகா லெப்ட்ல திரும்பு ரைட்ல திரும்பு என்று அழகாக செல்லுமிடத்திற்கு வழிகாட்டும் மேப் வசதி, தட்காலில் சீட் இருக்கிறதா? இப்பொழுது நான் எந்த ரயில் நிலையத்தில் இருக்கிறேன், அல்லது எதிர் பார்க்கும் ரயில் எப்பொழுது வரும், இப்பொழுது எங்கே வந்துகொண்டிருக்கிறது போன்ற தகவல்கள், சச்சின் ரிட்டையர் ஆகிவிட்டாரா என்று உடனே சொல்லும் செய்தித் தளங்கள். அனைத்துக் கிரிக்கெட்டையும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் பார்க்கும் வசதி (ஃப்ரீயாத்தாங்க) தாண்டவம் படம் டிக்கெட்டை ஆண்டவனுக்கு முன்னாடியே ஆன்லைனில் புக் பண்ணி தியேட்டரிலுருந்தே விமர்சனம் எழுதும் வசதி, பேஸ் புக்கில் எத்தனை பேர் நம்மை லைக் போட்டு ஹீரோ ஆக்கி இருக்கிறார்கள் என்று பார்க்கும் வசதி, செந்தமிழில் வணக்கம் நலமா இனிய விடுமுறை நாள் வாழ்த்துகள் என்று விநாயக சதுர்த்திக்கு குறுஞ்செய்தி அனுப்பும் வசதி, இணையம் துணை கொண்டே உலகெங்கும் இருக்கும் நண்பர்களுடன் இலவசமாகப் பேசும் வசதி, உங்கள் ஏரியாவில் இன்றைக்கு எவ்வளவு வெயில் அளவு, நாளைக்கு மழை வருமா, போன்ற வானிலைச் செய்திகள், பலவிதமான வீடியோ பைல்களையும் பார்க்கும் வசதி, பலவிதமான விதங்களில் போட்டோ எடுக்க உதவும் கேமரா அப்ளிகேஷன்கள். 

இந்த நாள் உன் காலண்டர்ல குறிச்சி வெச்சிக்கோ என்று யாராவது சொன்னால் உடனே குறித்து வைத்துக்கொண்டு கரெக்ட்டாக அந்த நாளில் சைலன்ஸராக வந்து என்னா சார் கிழிச்சீங்க? என்று நினைவுபடுத்தும் காலண்டர் வசதி, குறிப்புகள், போன்  வீட்ல சமைக்கும்போது சாம்பார்ல போன் உழுந்துடுச்சி மச்சி நம்பர் குடேன் என்று கதறவைக்காமல் அத்தனையையும் கூகுள் சர்வரில் ஏற்றி பாதுகாக்கும் வசதி, திகட்டத் திகட்ட விளையாட்டுகள், இசைக் கருவிகள், படம் வரைய, பாட்டுப்பாட, ஸ்ஸ்ஸ் ஸப்பா சும்மா இல்லை சார் ஐந்துமில்லியன் அப்ளிகேஷன்கள் வாங்க பழகலாம் என்று கொட்டிக்கிடக்கிறது.     
  

அத்தனையும் வேண்டாம் தேவையானதைப் பார்ப்போம். எனக்குத் தெரிந்ததை நான் உங்களுக்குச் சொல்கிறேன். நெற்றிக்கண்ணைத் திறந்து குற்றமெல்லாம் கண்டுபிடிக்காமல் உங்களுக்குத் தெரிந்ததை நீங்களும் பகிருங்கள்.

அதுவரை ஆண்ட்ராய்ட் என்றால் என்ன? 


டிஸ்கி: ஆஹா ஆண்ட்ராய்ட் பற்றி ஒரு பெரிய சாப்ட்வேர் இன்ஜினியர் எழுதறாரே என்று என்னை நம்பும் உங்களைப் போல நானும் ஒரு அப்பாவி செல்போன் யூஸர்தான், இதில் புலி எல்லாம் கிடையாது, காசு குடுத்து பந்தாவாக வாங்கிவிட்டு பேந்த பேந்த முழித்து, அங்கே இங்கே பீராஞ்சு ஓரளவு கற்றுக்கொண்டு எனக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்லி ஒரு பதிவும் நாலு ஓட்டும், நாப்பது ஹிட்ஸும் தேத்தலாமே என்றுதான் எழுதுகிறேன். ஹி ஹி.

அடுத்து

என்ன மாடல் வாங்கலாம்?
தமிழில் படிப்பது எப்படி?
தமிழ் டைப்புவது எப்படி?
உங்கள் போனையே வைபை மோடமாக மாற்றுவது எப்படி?
ஆண்ட்ராய்ட் போன் பால் குடிக்குமா? 

இன்னும் பல சுவாரஸ்யங்களுடன்..


(தொடரும்..)

ஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை.



ஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை. 


மணிஜி, நான், அகநாழிகை வாசு, கும்க்கி (மாண்புமிகு செல்வம் துபாயில் இருப்பதால் அவர் அங்கிருந்தே ஆசிர்வதிக்க) கொல்லிமலை செல்லலாம் என்று முடிவெடுத்துக் கிளம்பியபொழுது இது மற்றுமொரு சாதாரணப் பிரயாணம் என்றே நினைத்திருந்தோம். 

சென்னையிலிருந்து கிளம்பி பைபாஸில் சென்று கொண்டிருந்தபோது சிறிது சிரமப் பரிகாரத்திற்காக ஓரிடத்தில் கார் நிறுத்தவேண்டி இருந்தது, செல்வது கொல்லிமலை என்பதால் காணும் வித்தியாச மனிதர்களை கூர்ந்து நோக்கும் மனோபாவம் ஏனோ உள்ளே நுழைந்துவிட்ட தருணத்தில் அந்த மனிதரைப் பார்த்தோம். இன்னும் அழுக்கேறமுடியாத அளவிற்கான உடை, உடல், பரட்டைத் தலை முடி, தாடியுடன் ஒருவர் எங்களைப் பார்த்தபடி வந்துகொண்டிருந்தார். சரி ஏதேனும் காசு தருவோம் என்று பணத்தை எடுத்து அவருக்குத் தந்தேன். அதை கொஞ்சம் கூட மதிக்காமல் என்னை ஏதோ ஒரு ஜந்துவைப் பார்ப்பதுபோலப் பார்த்து நகர்ந்து சென்றுவிட்டார். அவர் பார்த்த பார்வையின் உக்கிரத்திலிருந்து வெளிவரும் முன்பாகவே..

இதில் யார் பிச்சைக்காரன் நீயா? அவனா? என்று மணிஜி கேட்டதில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தது. ஆமாம், அவருக்கென்று எந்தக் கவலையுமில்லை, காசும் காகிதமும் அவருக்கு ஒன்றுதான். நாம்தான் பிச்சை எடுக்க அனுதினமும் அலைந்துகொண்டிருக்கிறோம். உனக்கு என்ன பிச்சை வேணும்னு எனக்கு காசு பிச்சை தர்றன்னு அவன் கேட்டா நீ என்ன பதில் சொல்லுவ? என்று சிரித்தபடியே கேட்டார் மணிஜி. உண்மைதான். அப்படித்தரும் காசுக்குப் பின்னே மனிதநேயம் தொடங்கி, தான தர்மம் என்று நீண்டு தலைகாக்கும் கவசமாகி நிற்கின்ற அந்த பிச்சைப் பணம், உண்மையில் நான் எங்கோ யாரிடமோ வேலை என்று செய்து எடுத்த சம்பாத்தியப் பிச்சைதானே? 

மீளமுடியாத இந்த மாய யாசகத்திலிருந்து அவர் சுலபமாக வெளியேறிவிட்டதாகவே தோன்றியது. பிச்சையினின்றும் விலகிய ஒருவருக்கு பிச்சை எடுப்பவன் எங்கிருந்து பிச்சை போடுவது? அவர் மீண்டும் எங்கள் கார் அருகில் வந்தார், ஏதும் சட்டை செய்யாது அங்கிருந்து நகர்ந்து சென்றுகொண்டே இருந்தார். 

நார்மலான மனிதர்களை அப்நார்மலாகப் பார்க்கும் மனோபாவம், அப்நார்மலான நம்மைப் போன்றவர்களுக்கு சுலபத்தில் வந்துவிடுவதோடு, இவரைப் போல சுதந்திரம் இல்லாத கூட்டுப் பறவை ஆனேனே என்ற வெஞ்சினத்தில் இப்படி இருப்பவர்களைப் பைத்தியக்காரன் என்று பெயரிட்டழைத்து சமாதானம் செய்துகொள்கிறது மனது, என்று எண்ணியபடியே பயணத்தைத் தொடர்ந்தோம்.

--

ஆத்தூர் தாண்டி நாமகிரிப்பேட்டையில் திரும்பிச் சென்று  மலை அடிவாரத்திலிருந்து சுமார் 76 வளைவுகளைக் கடந்து கொல்லிமலை உச்சியை மாலை அடைந்தபோது அருமையான உபத்திரவம் செய்யாத குளிர் எங்களைச் சூழ்ந்துகொண்டது. இந்த வளைவுகள் எப்படி இருக்கும் என்று காண விரும்பினால் கூகிள் மேப்ஸில் கொல்லி ஹில்ஸ் என்று தட்டச்சி்ப்பாருங்கள், முதன் முதலில் பேனா எடுக்கும் குழந்தை வெள்ளைத்தாளில் கிறுக்கிய சித்திரத்தை ஒத்து இருக்கும். சாலைகள், தடுப்புச் சுவர்களைக் காட்டும் ரிப்ளெக்டர்கள் போன்றவைகள் சிறப்பாக இருப்பதால், பிரயாணம் ஏதும் பிரச்சனை இன்றி இருந்தது. 

அடியேனும், தோழர் கும்க்கியும், அகநாழிகை வாசுவும்


இரவில் மின்விசிறி தேவையே இல்லாத அளவிற்கு கம்பளியில் நுழைந்து தூங்கி எழுந்து காலையில் பார்த்தால் பனி சூழ்ந்து ரம்மியமாக காட்சி தந்தது கொல்லிமலை. உயர்ந்து வளர்ந்த சில்வர் ஓக் மரங்களும் அதன் அடியூடே பின்னிப் பிணைந்த மிளகு கொடிகளும், பல்வேறு மரங்களுமாய் கேரளாவைப் போன்றே காட்சி அளித்தது. 

சீக்குப் பாறை வ்யூ பாயிண்ட்



இதமான வெயில் வருட நாங்கள் முதலில் சென்றது சீக்குப் பாறை என்றழைக்கப்படும் ஒரு அழகான வ்யூ பாயிண்ட். மிகப் பெரிய பசுமைப் பள்ளத்தாக்கு, இடதுபுறம் அழகான பாறைகளையுடைய மலை சூழ, அந்த இடத்தில் எங்கள் நால்வரைத் தவிர்த்து யாருமே இல்லை. பேரமைதியுடன் பசுமையை ரசித்து கொஞ்சநேரம் பொழுதை அங்கே கழித்தோம். கொடைக்கானல், ஊட்டி போன்ற இடங்களில் மக்கள் கூட்டத்தினிடையே இது போன்ற இடங்களைக் கண்டுவிட்டு தனிமையில் காணும்பொழுது கிடைக்கும் பரவசம் வித்தியாசமான அனுபவம்.

மாசிலா அருவியில் அகநாழிகை வாசு

மாசிலா அருவிக்குச் செல்லும் பாதை


அடுத்து அங்கிருந்து நாங்கள் சென்றது மாசிலா அருவி. புதியதாக பாதை போட்டு சிறப்பாக அமைந்திருந்தது அருவிக்குச் செல்லும் வழி, இங்கும் கூட்டமில்லை, மிகப்பெரிய உயரத்திலிருந்து சமதளத்தில் விழுந்து பிறகு மீண்டும் ஒரு சிறிய குன்றைக் கடந்து நம் மீது விழும் இந்த இயற்கையின் அற்புத அருவியில் திகட்டத் திகட்டக் குளித்தோம்.( ஜட்டி போட்டுக்கொண்டு (!) குளிக்கக்கூடாது என்ற விளம்பரங்கள், மூலிகை எண்ணெய் மசாஜ், மிளகாய் பஜ்ஜி, சோப்பு, எண்ணெய் வழுக்கல் என்ற) எந்த இடையூறும் இல்லாது அருமையான ஒரு இயற்கைக் குளியல் போட்டு வெளியே வந்து அங்கே விளைந்த கொய்யாப்பழத்தைக் கொறிக்க வாங்கிக்கொண்டு நாங்கள் சென்ற இடம் அறப்பளீஸ்வரர் கோவில் மற்றும் அதன் அருகிலிருந்த ஆகாய கங்கை அருவி.

--

ஆகாய கங்கைக்குச் செல்லும் படிக்கட்டுகள்


அறப்பளீஸ்வரர் கோவில் அருகில மதிய உணவை முடித்துக்கொண்டு, எதிரே உள்ள அருவிக்கான நுழைவாயிலில் டிக்கெட் வாங்கிக்கொண்டு பெயர், முகவரி, அலைபேசி எண் போன்ற தகவல்களை அங்கிருந்த புத்தகத்தில் எழுதிவிட்டு படிக்கட்டுகளில் இறங்கத் துவங்கினோம், சுமார் 1100 படிக்கட்டுகள் கீழிறங்க வேண்டும். வழியிலேயே ஒரு வ்யூ பாயிண்ட்டும், பல குகைகளும் வருகிறது. எதிரில் குளித்துவிட்டு வந்த ஓரிருவர் தவிர்த்து அங்கே இயற்கையும் நாங்களும் மட்டுமே இருந்தோம். இவ்வளவு படிக்கட்டுகள் இறங்கி குளித்துவிட்டு மீண்டும் ஏறி வரவேண்டுமா? என்ற தயக்கம் இருந்தது. மேலும் சற்றுமுன்னர்தான் மாசிலா அருவியில் ஆனந்தக் குளியல் போட்டிருந்ததால் உடனே இன்னொரு அருவிக்கான் ஆர்வம் வரவில்லை. ஆனாலும் மெதுவே இறங்கிச் செல்லலானோம். பாதி இறங்கும்போதே ’ஹோ’ வென்று அருவி விழும் ஓசை கேட்டுக்கொண்டே இருந்ததே தவிர்த்து அருவி கண்ணுக்கே தெரியவில்லை. முழுவதும் கீழிறங்கிய உடன் படிக்கட்டுகள் முடிந்து பாறைகள் தென்பட்ட இடுக்கு வழியே நாங்கள் கண்ட காட்சி மெய்சிலிர்க்கவைத்தது. 

அதோ ஆகாய கங்கை அருவி..

பரிசுத்தமான இயற்கை.

காற்றும், சாரலும் விசிறி அடித்த இடம்.


யோசித்துப்பாருங்கள், யாருமற்ற வனாந்திரம். மிகப்பெரிய உயரத்திலிருந்து ஆக்ரோஷமாக விழும் அருவி, அங்கே குளிக்க அமைக்கப்பட்டிருந்த கம்பிகளைத் தாண்டி விழுந்துகொண்டிருந்தது. விழுந்த வேகத்தில் பலமான காற்றோடு சாரலைக் கொண்டுவந்து உடல் மீது பொழிந்தது. நாங்கள் அருவிக்குச் சமீபம் செல்வதைப் பற்றி யோசிக்கவே இல்லை, அருவிக்கு சுமார் 50 அடி தொலைவிலேயே நின்றுவிட்டோம். அதுவே, நிற்க முடியாத அளவிற்கு எங்களைத் தாக்கி பின்னே தள்ளிக்கொண்டிருந்தது. எந்த யோசனையுமற்று அதனையே பார்த்துக்கொண்டு என்னென்னவோ கத்திக் கூப்பாடு போட்டோம். அப்படி ஒரு அனுபவித்திராத பரவச நிலையை அந்த அருவியின் வேகத்தில் அடித்த சாரலும் காற்றும் எங்களுக்கு அள்ளி வழங்கிக்கொண்டிருந்தது. 

தாண்டவம் :)


நின்றோம், முதுகு காட்டினோம், படுத்தோம், கத்தினோம், கையைக் காலை நீட்டி நடனமாடினோம். அங்கே எங்களையும் அந்த மலைகளையும் காடையும் தவிர்த்து யாருமே இல்லை. எப்படி யாருமே இல்லாத இந்த இடத்தில் எந்த உதவியும் கிடைக்காத ஓரிடத்தில் இப்படி ஒரு பயமுமில்லாமல் இருக்கிறோம் என்று எதுவும் நினைக்கமுடியாத அளவிற்கு அருவி முழுவதும் எங்களை ஆட்கொண்டது. மாலை 3.30 மணி சுமாருக்கு இருட்டத்துவங்கிவிடும் என்ற எண்ணத்தில் அவ்விடத்தை பிரிய மனமில்லாது மெதுவாக மேலேறி வந்தோம். எதிரில் உள்ள கடையில் மூலிகை சூப் குடித்ததும் உடல் அசதி எல்லாம் சட்டென்று மறைந்தது மனப்பிரமையா, மனப் பிராந்தியா என்று தெரியவில்லை. 

வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பேரானந்த அனுபவத்தை முடிந்தால் நீங்களும் ஒருமுறை கொல்லிமலை சென்று ஆகாச கங்கையைப் பார்த்துவிடுங்கள். ஆயிரத்திச் சொச்ச படிக்கட்டுகளில் இயற்கை ஒரு பெரிய பொக்கிஷத்தை வருடம் முழுவதும் நமக்காக அங்கே ஜீவனுடன் வைத்திருக்கிறது. இப்படி ஒரு பிரம்மாண்ட அனுபவத்தை உங்கள் வாழ்நாளில் மறக்கமுடியாத அளவிற்கு ஆகாச கங்கை எனும் கொல்லிமலை அருவி உங்களுக்கு வழங்கிடும்.

விவசாய மலைவாழ் இளைஞர்களுடன் மணிஜியும், வாசுவும்


பெரிய அளவில் சுற்றுலா பகுதிகள் எதையும் வைத்திருக்காததாலேயே கொல்லிமலை ஊட்டி கொடைக்கானல் அளவிற்கு கும்பலை ஈர்க்கவில்லை என்று தெரிகிறது. அங்கே சுற்றிய வழி எங்கும் வாழையும், மிளகும் அமோகமாகப் பயிரிட்டிருக்கிறார்கள். வழியில் ஒரு தோட்டத்தில் அப்படி வேலை செய்துகொண்டிருந்த இளைஞர்களிடம் பேசிவிட்டு 5 வாழைக்கன்றுகளும் வாங்கி வந்தோம். இன்னும் பார்க்கவேண்டிய சில இடங்களை நேரமின்மை கருதி செல்லமுடியவில்லை. 

மலை உச்சியில் அதிரம்பள்ளி அருவி ஒரு தரிசனமென்றால், அதனை ஒத்த அடிவாரப் பிரம்மாண்டம் இந்த ஆகாச கங்கை. 

இன்னும் இந்த இடுகையை சிறப்பாக எழுதி இருந்திருக்க முடியும். ஆனாலும் அனுபவித்த அந்த அருவியின் தாக்கத்திலிருந்து மீள வழியின்றி கிடைத்த வார்த்தைகளைக் கோர்த்து கொல்லிமலைப் பிரயாணத்தை இங்கே பதிவு செய்கிறேன். 

கொல்லிமலைப் பற்றி மேலும் சில தகவல்கள் :  விக்கி




நன்றி! :)