பலா பட்டறை: 08/01/2010 - 09/01/2010

நேசத்தின் பொழுதுகளில்..


ழுத்துக்களாலான நட்புகளின்
முகம் பார்த்தலின் மிச்சமாய்
அவரவர் கழட்டிப் போட்ட சட்டைகளில்
அனைவரின் வாசமும்..

--

நிறைகுடங்கள் தளும்புவதை
நிரூபிக்கின்றன
சற்று முன் நிறைந்திருந்த
காலிக் கோப்பைகள்..

--

ன் விரலிலிருந்து வழியும் 
ரத்தம் பாதிவெட்டுண்ட
ஆப்பிளின் மேலே
உணர்த்தியது
பழத்தின் வலியை

--

யர்த்திய கொள்ளி
வெறுப்பைத் தந்தது
காலடியில் தாழ்த்தியும் 
நிமிர்ந்தேதான் எரிகிறது.

--

து ஆயிற்று குரங்கிலிருந்து நிமிர்ந்து
செவ்வாயில் எல்லைக் கோடு கிழிக்க
அளவெடுப்பது வரைக்கும்..
இப்பொழுதுதான் பாலே குடிக்கின்றன 
கடவுள் சிலைகள்..




.

வெண்ணை 0.12 (ராவணன் கவிதைகள்)



நான் ஒருவரைக் கொலை செய்தேன்
என்று யாரோ தீர்ப்பெழுதிக் கொண்டிருந்தார்கள்
இறைவன் அவரை என்மூலம்
இறக்கச்செய்தார் என்றேன்..
என்னின் உறவுகள்
நான் கொன்றவனின் உறவுகள் என
துக்கங்கள் இரண்டாய் இறைந்துகிடந்தது அந்த
மன்ற வளாகத்தில்..
கொலைசெய்யச் சொன்ன
இறைவனோ இறுதிவரை வரவே இல்லை..
கடைசியாய் ஏதேனும் சொல்ல விருப்பமா
என்று கேட்ட நீதிபதியிடம்
அகம் ப்ரம்மாஸ்மி என்றேன்
அதேதான் எனது தீர்ப்புமென்றார்...!

--

இன்றைக்கு இலையில்தான்
சாப்பாடு என்றதற்கு
பாத்திரத்தில் ஏதுமில்லை
என்றாள்.
பாத்திரம் இருக்கிறதே என்றேன்

--

காமம் களைய
முகிலுரசும்
உச்சி சென்று
ஒற்றைக்காலில் நிற்பினும்
அலைந்து குறு குறுக்கும் என் கேசமே
உன் கேசமானதே என் செய்வேன்..?

--

என்னதான் நக்கினாலும்
எச்சில் இன்னும்
மிச்சமிருக்கிறது
ருசிப்பவன் தட்டினில்

--

சரியாக
வந்துவிடுகிறது
இறந்த நாட்களில்
என்
பிறந்த நாட்கள்..


.

ஆத்தா நான் இடுகை போட்டுட்டேன்..

என் தந்தையின் உடல் நலம் குறித்து விசாரித்த, அன்பைப் பகிர்ந்துகொண்ட நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. இப்பொழுது அவர் பூரண நலம். 

டபுள் செஞ்சுரி அடித்து நாட் அவுட்டாக ஆடிக்கொண்டிருக்கும் அனைத்து ஃபாலோயர்ஸ் நண்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றி! :))

நிறைய எழுத நினைக்கிறேன். ம்ஹும் முடியவில்லை (என்னது ரொம்ப சந்தோஷமா?). நிறைய நண்பர்களைச் சந்தித்ததையும் பகிர முடியவில்லை. ப்ரியமுடன் வசந்த் அன்பளிப்பளித்த கருவாச்சிகாவியம் ஒரு அமைதியான வாசிப்புக்காக அலமாரியில் நின்றுகொண்டிருக்கிறது. செ.சரவணக்குமாருடன் மதிய நேரம் சாப்பிட்ட மொச்சைக்கொட்டை ஐஸ்க்ரீம், அருகிலிருந்தும் ஜமாலுடன் அவ்வப்போது போனில் மட்டுமே பேச முடிகிறது. சிங்கை சிங்கம் பிரபாகரை, வானம்பாடிகள் சார் அலுவலகத்தில் சந்தித்து சிறிது நேரமே பேச முடிந்தது (மனிதர் சிங்கையிலிருந்து என்னிடம் போனில் பேசியதை விட குறைவான நேரம் (என்ன கொடுமை SP இது?:-) அரும்பாடுபட்டு அண்ணன் நைஜீரியா சிங்கம் ராகவன் அவர்களுடன் ஒரு மதியம் கழித்தது மனது நிரம்பிய மகிழ்ச்சியாக இருந்தது. (என்னா யூத்து? என்னா ஸ்பீச்சு? பத்திரமா ஊருக்கு போயிட்டீங்களா தல? ) மேலும் போனில் பேசிய காமிக்ஸ் லவ்வர் கிங் விஸ்வா என பார்த்த கணத்தில் சட்டென நெருக்கம் காட்டும் பதிவுலக நண்பர்கள் எனக்கு’ம் கொடுப்பினை. :-)

’ஹலோ’

’பட்டறை ஓனர் சங்கருங்களா?’

’ஆஅ மாங்க!’

’பட்டறை ஃப்ரீயா? ஒரு திருப்பாச்சி அருவா செய்யோனும், எப்ப வரட்டும்?’

(ஆஹா ப்ளேன் பிடிச்சி வந்து ப்ளான் பண்றாங்களே!!!)

என்று போனில் நேற்று என்னைக் கலாய்த்ததும் ஒரு பிரபல பதிவர்தான் :) அவரைச் சந்தித்ததும் சுவாரஸ்யங்கள் பகிர்கிறேன்.     


---------------

’சார்’

’சொல்லுங்க’

’ஊர்ல திருவிழா. ஒவ்வொரு வீட்டுக்கும் 350 ரூவா கலெக்‌ஷன். டியூப் லைட், சீரியல் லைட்டு அப்புறம் கோவிலுக்கும் ஒரு பங்கு போயிடும்.’

’சரிங்க தர்றேன்...’

இப்படித்தான் ஊரில் ஆடிமாதம் திருவிழா ஆரம்பித்தது. ரொம்ப நாளாச்சு. திருவிழா எல்லாம் பார்த்து. திடீர் கடைவீதிகள். ஊரெங்கும் ஒவ்வொரு வர் வீட்டிலும் உறவினர் கூட்டம். கூழ் ஊற்றி, கிடாவெட்டி, கோழி அறுத்து, 15 அடிக்கு ஒரு ஸ்பீக்கர் கட்டி தெருவுக்கு ஒரு சினிமாப் பாட்டு போட்டு அதகளம் பண்ணிவிட்டார்கள். வேல் குத்தி, உடலில் கொக்கிகள் மாட்டி வித விதமான வாகனங்கள் இழுத்தும் / தொங்கிக் கொண்டும் நேர்த்திக் கடன் செலுத்திய விதம் குத்தாதவர்களுக்கு வலியும் குத்தியவர்களுக்கும்/ குத்திக்கொண்டவர்களுக்கும் ’சக்தி’யையும் தந்தது.

சாமி ஊர்வலம் வரும் தெருக்கள் சுத்தம் செய்யப்பட்டன. கிளை விரித்த மரங்கள் சிறிது கழிக்கப் பட்டன. (குடித்துவிட்டு சாமி ஊர்வலமே வராத தெருவில் நன்றாக வளர்ந்த மரத்தை வெட்டிப்போட்ட பஞ்சாயத்து தனிங்கோவ்!) கொக்கி போட்ட சீரியல் மற்றும் டியூப் லைட்டுகளால் மின் அழுத்தம் 120க்கும் கீழே சென்றது கூடவே எல்லா விளக்குகளும் மினுமினுக்கிக்கொண்டிருந்தன.   

ஆனால் முன்புபோல் மக்களால் இது போன்ற திருவிழாக்கள் குதூகலமாய் கொண்டாடப் படுகிறதா என்ற கேள்வி எழாமல் இல்லை. பல புறக்காரணிகள் இருக்கலாம். மக்களின் ஆர்வம் திசை திரும்பி இருக்கலாம். இள வட்டங்களின் ஆர்வங்கள் திசை திரும்பியிருக்கலாம். நான் பேசியவரையில் பல லட்சங்கள் வெறும் சீரியல் லைட்டிற்காகவும், சவுண்ட் சர்வீஸிர்க்காகவுமே செலவழிக்கப் பட்டிருந்தது. 

ஒரு கவுரவ அடையாளமாக யார் சவுண்ட் அதிகம்? யார் சீரியல் கட்டவுட் அழகு? என்பது ஒரு போட்டியாகவும் அதற்கு முதல், இரண்டாவது, மூன்றாவது பரிசுகளும் இருப்பதாய் அறிந்து கொண்டேன். 

கோவிலும் பொலிவாக்கப் பட்டிருந்தது. ஆனாலும் எனக்கு புரியாத ஒரே விஷயம். இந்த திருவிழா செலவில் ஒரு பகுதி முறையாக செயல் படுத்தப் பட்டு அடிப்படை வசதிகள் கிராமத்திற்காக ஏன் செய்ய யாருமே முன் வரவில்லை என்பதுதான். தெரு மற்றும் சாலை வசதிகள், கழிப்பிடம் , கழிவு நீர் வசதிகள், அடிப்படை மருத்துவ வசதி, பொது சுகாதாரம், போக்குவரத்து வசதி,  இன்ன பிற போன்றவைகள் தேவையில்லை என்பது பழகிவிட்டதா? அல்லது பகுத்தறியும்/பகுத்தறியா சாமிகள் வரம் தரும் என்று காத்துக்கிடக்கிறார்களோ புரியவில்லை!


என்னமோ போடா மாதவா! (நன்றி முகிலன்!) 


கலர் டீவி பார்த்தால்
பொது அறிவு வளரும் என்ற
உச்ச நீதிமன்றத்தின் கருத்தறியாத
அண்டைவீட்டுக் கிழவி ஆடுகளைக்
கொட்டிலிலடைத்துவிட்டு
அவசரமாக பழையசோற்றுச் சட்டியுடன்
கிளம்பினாள்..
நூறு நாள் வேலைக்கு 
தள்ளுபடிச் சம்பளம் வாங்க..!





.

வலைச்சரத்தில் பட்டறை..




02-08-2010 திங்கள் முதல் 08-08-10 ஞாயிறு முடிய வலைச்சரத்தில் எழுதுகிறேன். மக்களே வாருங்கள் அங்கு சந்திப்போம்.

சுட்டி::

வலைச்சரம்







.