பலா பட்டறை: வெண்ணை (0.13 வாழ்வே மாயம்)

வெண்ணை (0.13 வாழ்வே மாயம்)


ஏங்க இதுக்குப் பேரு கொலு, ஆயுத பூஜைன்னெல்லாம் சொல்வாங்களே என்று கேட்டபோது, இல்லைங்க என்று சொன்னவர் விடுமுறை தின சிறப்பு பொம்மைகள் அடுக்குதல் மற்றும் அலங்காரம், அப்புறம் வாகனம் மற்றும் டூல்ஸ் பராமரிப்பு, மஞ்சள் கலர் பொடி, சிவப்பு பொடி மற்றும் பொரி தின்னுதல் அப்படின்னு பொழுது போக்கறோம் என்றார்.

எல்லா விடுமுறையிலுமா என்று கேட்டதற்கு 

இல்லீங்க வருஷத்துக்கு ஒரு முறை சிறப்பு விடுமுறைன்னு வரும் அப்ப மட்டும்.

அப்ப அடுத்த விடுமுறைக்கு என்றேன், 

வெடி மருந்தெல்லாம் பேப்பர்ல அடைச்சி பத்த வெப்போம் என்றார்.

‘அடங்கொன்னியா’ என்று நினைக்கும்போதே விடுமுறை தினச் சிறப்புத் திரைப்படங்கள் டிவியில் வரிசையாய் அணிவகுத்துக்கொண்டிருந்தது. 

மீசையைத் துடைத்துக்கொண்டு நகர்ந்தேன்.

--

மாட்டோட ’சுச்சா’வை (அதாங்க கோமியம்) செடிகளுக்கு விடுவதற்காக கலந்துகொண்டிருக்கும்போது சின்னவன் அருகேவந்து என்னப்பா இது என்று கேட்டான். பதில் சொன்னேன். நான் அன்னிக்கு வெண்டைச் செடிக்கு முன்னாடி ’மூச்சா’ போக போனதுக்கு திட்டினியே என்ற கேள்விக்கு ஞே என்று முழித்தேன். 

வேறொரு நாள் அவனே ஏதோ அண்ணனிடம் வில்லங்கம் செய்து என் அம்மாவிடம் மாட்டிக்கொண்டான். நேரே சாமி படத்திற்கு முன் நிற்க வைத்து சாமி இந்த குழந்தைக்கு நல்ல புத்தி கொடு என்ற என் அம்மாவை தடுத்தவன், ஏன் பாட்டி உனக்கு அறிவிருக்கா என்னிக்காவது இவங்க உன் கூட பேசி இருக்காங்களா இப்ப எதுக்கு அவங்களக் கூப்பிடற என்றவனை என்னிடம் கூட்டிவந்து கம்ப்ளெயிண்ட் செய்த என் அம்மாவிடம் சொன்னேன் “சத்தியமா அவன் ப்ளாக் எல்லாம் படிக்கறதில்லம்மா என்னை நம்பு”

திடீர் திடீர் என்று இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கே பதில் இல்லாத என்னிடம் போய்.....??.! (சொப்பன சுந்தரி காரெல்லாம் இல்லீங்க இது வேற :-)

--

ஹாலிவுட் பாலான்னு ஒரு மானஸ்தர் இருந்தார் திடீர்னு சொல்லாம கொள்ளாம அப்பீட் ஆயிட்டார். நானூத்தி சொச்ச ஃபாலோவர்ஸுக்கு ’நாமத்தையும், கல்லையும்’ போட்டதால செம காண்டுல இருக்கோம். ஒரு பெரிய ஆலமரம் தேடிகிட்டு இருக்கேன் கிடைச்சதும் ‘பஞ்சாயத்துதான்’.:)

--

ஆஃப் தி ரெக்கார்டா வலையுலகம் பற்றி எதுனா சொல்றீங்களா என்று பி.ப நண்பர் ஒருவர் கேட்டார். ரெக்கார்ட ஆஃப் பண்ணிடுங்க என்றேன். 

--

போன வாரம் காலை என் அம்மா படுக்கையிலிருந்து எழுந்து கிச்சனுக்கு நுழையும்போது ஒரு பாம்பு கிச்சனை நோக்கி சென்றிருக்கிறது. ஏற்கனவே நான் சொன்னதுபோல் நான் தற்பொழுது இருக்கும் இடம் பாம்புகள் கண்ணில் தென்படும் ஏரியா என்பதால், எப்பொழுது வீட்டின் எல்லைக்குள் அதைப் பார்த்தாலும் சத்தம் போட்டு கூப்பிடுங்கள் ஆனால் அது எங்கே போகிறது என்பதைப் பார்த்துக்கொள்ளுங்கள் அதிர்வுகள் தவிர அதற்கு காது கேக்காது எவ்வளவு வேண்டுமானாலும் சத்தம் போடலாம். ஆனால் பதட்டப் படாமல் அது எங்கே செல்கிறது என்பது தெரிந்தால்தான் அதைப் பிடிக்க முடியும் என்று ஏற்கனவே வீட்டில் உள்ளவர்களைத் தயார் படுத்தி இருந்ததால், என் அம்மா சத்தம் போட்டு என்னைக் கூப்பிட்டதோடு சரியாக அது சென்ற இடத்தையும் சொன்னபடியால் மெதுவாய் ஒரு கொம்பு வைத்து அலசியதில் எலக்ட்ரிக் ரைஸ்குக்கர் அடியில் சுருண்டு படுத்திருந்தது. மெதுவாய் அழுத்தி தலையைப் பிடித்து (கையாலதாங்க) தெரு தாண்டி உள்ள ஒரு புதரில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தேன். சாரைப் பாம்பு குட்டி அது விஷமில்லாத வகை. பயந்துபோன அதன் இதய துடிப்பினை அதன் வாலைப் பிடிக்கும்போது நன்றாக உணர்ந்தேன். what a beautiful animal. விஷப் பாம்பை என்னால் இப்படிக் கையாள முடியாது அதற்காக அடிக்கவும் முடியாது. அதனைப் பிடிக்கும் அந்த ஸ்டிக் சென்னையில் பல இடங்களில் தேடிவிட்டேன் கிடைக்கவில்லை. :(

சரி இது என்னுடைய வீரசாகசத்திற்காக அல்ல. கிராமத்தில் சிகிச்சை அளிக்கும் டாக்டரிடம் பேசியபோது சிறியா நங்கை அல்லது கருந்துளசி வேலியோரம் வளர்த்தால் பாம்புகள் வராது என்றார் (அதை இனிமேதான் டெஸ்ட் பண்ணனும்). பாம்பு கடித்து வருபவர்களுக்கு நீங்க சிகிச்சை அளிக்கிறீர்களா? என்று கேட்டதற்கு இல்லை என்றவர் அதற்கான வசதிகள் சென்னை அரசு மருத்துவமனையில்தான் உள்ளது (40 கிலோமீட்டர்) அல்லது பக்கத்தில் 10 கிலோமீட்டரில் பச்சிலை மருந்து கொடுக்கிறார்கள் பெரும்பாலும் மக்கள் அங்கேதான் செல்கிறார்கள் என்றார். குணமாகிறார்களா என்று கேட்டேன் சிலர் குணமாகிறார்கள் பலர் இறக்கிறார்கள் என்றார் (அந்தச் சிலர் விஷமற்ற பாம்பு கடித்து மீண்டவர்களாக இருக்கலாம் - விஷமுள்ள பாம்புகளுக்கு ஆங்கில மருத்துவம் தவிர வேறு மாற்று இல்லை - நான் படித்தவரை) இதில் என்னைப் பாதித்தது இது போன்ற கிராமப் புரங்களில் பாம்பு கடிப்பது என்பது மிகச் சாதாரணமாக நடக்கிறது அதற்கான விழிப்புணர்வோ, முதலுதவி சிகிச்சை மையங்களோ 5 அல்லது 10 கிலோமீட்டருக்கு ஒன்று என்று அமைத்தால் மட்டுமே கடிபட்டவர்களைக் காக்க முடியும். அல்லது கிராமப் புரங்களில் சேவை செய்யும் மருத்துவர்களுக்கு அதற்கான சிறப்பு பயிற்சி அளிக்கலாம். மருந்துகள் வழங்கலாம். ஆனாலும் நான் கண்டவரையில் 1 கிலோமீட்டருக்கு ஒன்று என்று மையங்கள் அரசு திறந்திருக்கிறது பெயர் - டாஸ்மாக். 

அடுத்த அதிர்ச்சி தகவல் நிறைய வயதான பெண்கள் வாயில் வரும் புற்று நோயால் இறக்கிறார்கள் (வெற்றிலை, புகையிலை) :(

மஞ்சாகலர் மாத்திரைதானா ஊசி இல்லையா என்று கேட்ட பெண்மணியைப் பார்த்துவிட்டு என்னைப் பார்த்தார் டாக்டர். எனக்கு ஏனோ பதினாறு வயதினிலே சிரீதேவியும், அந்த பெரிய பெல்பாட்டம் கண்ணாடி போட்ட டாக்டரும் நினைவுக்கு வந்தார்கள். (கூடவே நம்ம மரு.ப்ரூனோவும்:-) 

--

நான் பல ஆண்டுகளாகவே மைக்ரேன் (ஆமாங்க ஆமாம் அந்த பாழாப் போன ஒத்தத் தலவலிதான்) கிளப் ஆயுட்கால உறுப்பினர். இப்பொழுது பேக் பெயின் மற்றும் மணிக்கட்டு வலி (நம்புங்கப்பா வயசு 38தான்) க்ளப் மெம்பர்ஷிப்புக்கு ரெகுலராக அழைப்பு வரவே அதே கிராமத்து டாக்டர் அக்குபங்சர் ட்ரை பண்ரீங்களா? என்றார். சரி என்று மைக்ரேனுடன் விடிந்த ஒரு நாளில் அக்குபங்சரை சோதிக்கக் கிளம்பினேன். சிறிய தலைமுடியை விட மெல்லிய அளவிலான ஊசிகள் கொண்டு அக்கு பாயிண்ட்ஸ் எனப்படும் அவர்கள் கற்றறிந்த இடங்களில் கை கால் தலை குத்தி ஒரு அரை மணி நேரம் அமர வைத்தார். ரைட் போயிட்டு நாளைக்கு வாங்க என்று அவர் சொல்லும்போதே மைக்ரேன் நின்று விட்டிருந்தது. ஆச்சர்யம். மணிக்கட்டு வலி மற்றும் கழுத்து வலியெல்லாம் போயே போச்ச்..  4000 வருட சிகிச்சை முறையாம் பெயின் கில்லருக்கு பதில் ட்ரை பண்ணிப் பாருங்க நண்பர்களே முக்கியமா மைக்ரேன் மெம்பர்ஸ்.   

--

என்னுடைய காமினி தொடர்கதைகளுக்கும், போன இடுகைக்கும் பின்னூட்டமிட்டு வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் 

நன்றி 

நன்றி

நன்றி. :))  
  
.

25 comments:

எல் கே said...

micrane i have to chk this method

சங்கர் said...

போன பதிவுல இருந்த போட்டோ பாம்பு புடிக்கும்போது எடுத்ததா?

துளசி கோபால் said...

//மெதுவாய் ஒரு கொம்பு வைத்து அலசியதில் எலக்ட்ரிக் ரைஸ்குக்கர் அடியில் சுருண்டு படுத்திருந்தது. //

அப்ப..... பாட்டி சொன்ன பால்பானை சம்பவம் நெசந்தான்போல!

அக்குபஞ்சர் நல்லாதாங்க குணமாக்குது. நானும் போயிருக்கேன் நாலைஞ்சு முறை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மஞ்சாகலர் மாத்திரைதானா ஊசி இல்லையா என்று கேட்ட பெண்மணியைப் பார்த்துவிட்டு என்னைப் பார்த்தார் டாக்டர். எனக்கு ஏனோ பதினாறு வயதினிலே சிரீதேவியும், அந்த பெரிய பெல்பாட்டம் கண்ணாடி போட்ட டாக்டரும் நினைவுக்கு வந்தார்கள். (கூடவே நம்ம மரு.ப்ரூனோவும்:-) //

:)))

தராசு said...

அதான கேட்டேன், எங்க மறத்தமிழ் பண்பாட்டுல அலகு குத்தறத தான அக்கு பஞ்சர், டயர் பஞ்சர்ங்கறீங்க??? இப்ப புரியுதா நாங்க ஏன் காவடி எடுக்கறம்னு....

Radhakrishnan said...

ஆஹா, அதிசய தகவல்கள் பல. பாராட்டுகள்.

Unknown said...

தலைவரே மைக்ரேன் சிகிச்சை எங்க எடுத்துகிட்டீங்க நம்பர் கொடுங்க ...

க.பாலாசி said...

//சொப்பன சுந்தரி காரெல்லாம் இல்லீங்க இது வேற :-)//

வேற என்னவா இருக்கும்...!!!!!

உண்மைங்க... இன்னமும் கிராமப்புறங்கள்ல இருக்கிறவங்க பாம்புக்கடிக்கு மருத்துவ உதவி சரிவர கிடைப்பெறாம இறந்துபோயிடுறாங்க..முதல் உதவிகூட சரியா கிடைக்கறதில்ல...

எஸ்.கே said...

பல தகவல்கள்! தொகுப்பு அருமை!

Chitra said...

நல்ல வெண்ணையாக இருக்கே..... நிறைய விஷயங்கள்!!!!! தொடர்ந்து அசத்துங்க!

vasu balaji said...

அசல் ஊத்துக்குளி ஐட்டம்:)

சாந்தி மாரியப்பன் said...

கலப்படமில்லாத சுத்தமான சரக்கு :-))

Anisha Yunus said...

அக்கு பஞ்சர் நானும் உபயோகித்துள்ளேன்...கிட்னி ஸ்டோன்சுக்காக, முக்கியமா வலி வர்ற சமயங்கள்ல ஃப்லஷ் தெரபி இல்லாமலேயே அதி சீக்கிரம் கல்லை நகர்த்தவும் முடியும், சிறுனீரும் நன்கு பிரியும். தலைவலி, காய்ச்சலுக்கும் நல்ல டெக்னிக் அதுவே. தேன்க்ஸ்னா, பகிருந்து கொண்டமைக்கு :)

நாடோடி said...

ஆஹா பாம்பு எல்லாம் புடிக்க‌ க‌த்துட்டீங்க‌ளா?.. சூப்ப‌ர்.. :)

பிரபாகர் said...

கால் வலிக்கு எல்லா வைத்தியமும் பார்த்து, கடைசியாய் என் அம்மா இப்போது அக்கு பஞ்சர் செய்து கொள்கிறார்கள், வலியும் குறைந்ததாய் சொல்கிறார்கள்...

பிரபாகர்...

பிரபாகர் said...

பரவாயில்லயே, பாம்பு பிடிக்க பழகியிருக்கீங்க!...

நாமெல்லாம் கண்ணுல பட்டா அடிக்கிறது தான் வழக்கம்...

பிரபாகர்...

ஹுஸைனம்மா said...

//விஷப் பாம்பைப் ... பிடிக்கும் அந்த ஸ்டிக் //

இது எப்படி இருக்கும்? எப்படி பயன்படுத்தணும்?

அக்குபஞ்சர் தகவல்- நன்றி.

Paleo God said...

@ LK கண்டிப்பா ட்ரை பண்ணுங்க. :)

@ சங்கர் : பிடிச்ச பிறகு :)

@ துளசி கோபால்: ஆமாங்க டீச்சர் :)

@ T.V.R : நன்றி சார் :)

@ தராசி: நெசம்ணே முதுகுல நிறைய அக்கு பாயிண்ட்ஸ் இருக்காம். நோய் குணமாக்கவும், எதிர்ப்பு சக்தி அதிகப் படுத்தவும், நேரா சொன்னா எவங்கேப்பான்னு சாமிய கலந்துட்டாங்க போல! :)

@ V.R : நன்றிங்க! :)

@ செந்தில் : நேர்ல பார்க்கும்போது தரேன்ங்க! :)

@ எஸ்.கே: நன்றிங்க :)

@ சித்ரா: நன்றிங்க :)

@ வானம்பாடிகள்: நன்றி சார் :)

@ அமைதிச்சாரல்: நன்றிங்க :)

@ அன்னு: உண்மைதான் சகோதரி. பெண்களுக்கான பொதுவான உபாதைகளுக்கு நிறைய நிவாரணங்கள் கிடைக்கிறது. நன்றி!:)

@ நடோடி: ஆமாங்க ஸ்டீபன். (விஷமுள்ளவை அல்ல). :)

@ பிரபாகர்: என் அம்மாவும் சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள் பிரபா. நல்ல குணம் கிடைக்கிறது.

@ ஹுஸைனம்மா: http://www.snakecatcherstick.com/ இந்த லிங்க் பாருங்க அந்த ஸ்டிக் பற்றிய தகவல்களுக்கு. நன்றிங்க:)

@ தியாவின்பேனா: நன்றிங்க.:)

'பரிவை' சே.குமார் said...

ஆஹா...
அதிசய தகவல்கள்.

SUPER...

சரவணன்-சாரதி said...

//சிறியா நங்கை அல்லது கருந்துளசி வேலியோரம் வளர்த்தால் பாம்புகள் வராது என்றார்//

எங்க வீட்டில் ரெண்டுமே (சிறியா நங்கை அல்லது கருந்துளசி) பெருமளவில் இருக்கிறது கூடவே சில பல - விஷமுள்ள விஷமற்ற பாம்புகளும்........ :)
2 வருடமாய் ஒரு கருநாகமும்....... சிறப்பு விருந்தாளியாய் வந்து போகிறது......

சிரியாநங்கை ஒரு விஷமுறிவு மருந்தே ஒழிய வேறொன்றும் இல்லை. பால் பிடித்த வேப்பங்காயை போல 10 மடங்கு கசப்பாய் இருக்கும். பாம்பிடம் இருந்து தப்பிக்க ஒரு வழி இருக்கிறது ....... வெல்டிங் பட்டறைகளில் வெள்ளை நிறத்தில் சாம்பல் போன்ற ஒரு பொருளைக்கொட்டுவார்கள். அதை அள்ளிவந்து வீட்டை சுற்றிப் போட்டால் பாம்பு வராது. அந்த கெமிகல் பாம்பிற்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஆனால் காற்றிலோ மழையிலோ கரைந்துவிட்டால் மறுபடி பாம்பு வரும்......மற்றபடி மக்கள் அதிகமாக நடமாட ஆரம்பித்தால் அவை அந்த பகுதியைவிட்டு காணாமல் போகும்......

Paleo God said...

@ சே.குமார் : நன்றிங்க குமார்.:)

@ சரவணன்-சாரதி : தகவலுக்கு மிக்க நன்றிங்க. :)

//வெள்ளை நிறத்தில் சாம்பல் போன்ற ஒரு பொருளைக்கொட்டுவார்கள். //

//காற்றிலோ மழையிலோ கரைந்துவிட்டால் மறுபடி பாம்பு வரும்.//


இந்த கழிவு நிலத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுத்தலாம். நீங்கள் சொல்வது போல நடமாட்டம் அதிகமாகும்போது அவை வேறு இடத்திற்கு நகர்ந்துவிடும் அதுவே போதுமென்று நினைக்கிறேன். :))

அன்புடன் மலிக்கா said...

அதிசய தகவல்களும் அருமையான தகவல்களும் அறியப்பெற்றேன்..

இளங்கோ said...

//நான் கண்டவரையில் 1 கிலோமீட்டருக்கு ஒன்று என்று மையங்கள் அரசு திறந்திருக்கிறது பெயர் - டாஸ்மாக்.//
:)

நிறைய தகவல்கள், நன்றிங்க.

சாமக்கோடங்கி said...

//மெதுவாய் அழுத்தி தலையைப் பிடித்து (கையாலதாங்க) தெரு தாண்டி உள்ள ஒரு புதரில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தேன். //

உங்கள் மனிதாபிமானத்திற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ஷங்கர் அண்ணே...

டாஸ்மாக்கினால் அரசுக்கு லாபம். மக்கள் செத்தால் என்ன பிழைத்தால் என்ன...

என்றென்றும் நன்றியுடன்..
சாமக்கோடங்கி..

Paleo God said...

@ அன்புடன் மலிக்கா: நன்றிங்க சகோதரி :)

@ இளங்கோ : மிக்க நன்றிங்க :)

@ பிரகாஷ்: நன்றி பிரகாஷ் :)