பலா பட்டறை: அனுபவம்
Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

டேக் இட் ஈஸி!


.


டவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற ஆராய்ச்சிக்கெல்லாம் நான் எப்போதுமே போவதில்லை. அவர் என்னையோ நான் அவரையோ பரஸ்பரம் தொந்தரவு செய்வதில்லை என்ற ஒரு ஜென்டில்மேன் அக்ரிமென்ட் கையெழுத்தாகமலே எங்களுக்குள்ளாக அமலில் இருக்கிறது. எல்லாவற்றையும் கேள்வி கேட்டுவிட்டு பதிலில்லாத தர்க்கச் சுழலில் மாட்டி புழுங்கித் தவிப்பதைவிட 'கடவுள் இருக்கான் கொமாரு' என்பவரையும், 'சப்பான்ல கடவுள் சுனாமி வந்தப்ப ஏன் சும்மிங்கப் போடல?' என்பவரையும் ஆமாமாம் நீங்க சொல்றது சரிதான். என்ற மகாவாக்கியத்தோடேயே கடந்து செல்வதால் வாங்கும் சம்பளத்துக்கு குறைவில்லாமல் வேலை செய்ய முடிந்திருக்கிறது.

சொல்லால் மடக்கி சொறிவதற்கு ஏற்கனவே சொறிந்த இல்லாததையும், பொல்லாததையும் பற்றி நிறைய படித்திருக்கவேண்டும், ஒரு சமோசாவுக்கு ப்ரயோஜனமில்லாத அந்த வியாக்கியானப் படிப்புக்கெல்லாம் எனக்கெங்கே நேரமிருக்கிறது? செய்யும் வேலையையும் சென்றுவரும் வழியையுமே சரியாக இன்னும் புரிந்துகொள்ளவில்லை. 

முதுகு வலி என்றோ, மூச்சுவிட சிரமமாக இருக்கிறதென்றோ மருத்துவரிடம் போனால், நீங்க உட்காரும் விதம் தப்பு சரியா நேரா உட்காரப் பழகனும், ஆஸனங்கள் எதுனாச்சும் செய்யுங்க, மூச்சு விடறதுல கோளாறு இருந்தாக்கூட பிரச்சனை வரும். ப்ராணாயாமான்னு ஒன்னு இருக்கு சரியா மூச்சு எப்படி விடனம்னு ஒரு ப்ராக்டிஸ்தான். வாக்கிங் போங்க, மென்னு சாப்பிடுங்க, கண்டிப்பா ரெண்டு வேளை பல் வெளக்கனும், இது இதெல்லாம் சாப்பிடக்கூடாது, இதெல்லாம் சாப்பிடனும்... எனக்கு அயர்ச்சியாக இருந்தது. 

லக உயிரினங்களிலேயே எல்லாம் தெரிந்த உயிரினத்துக்கு மூச்சு விடுவதற்கும், நேராக உட்கார்வதற்கும் பயிற்சி தேவையானதாக இருக்கிறது. இந்த ஆறாவது அறிவை ரிஜெக்ட் செய்த அல்லது ஆறாவது அறிவு ரிஜெக்ட் செய்த மற்ற உயிரினங்களெல்லாம் நிம்மதியாக இருக்கிறது. சாப்பாடு, கலவி, உறக்கம், சவம். கூடுகட்டி முட்டையிட்டு/குட்டிபோட்டு சொந்தமாய் சாப்பிடும் வரை பொறுப்பு, பின் துறப்பு. அவைகள் சீராக மூச்சு விடுகின்றன உப்புள்ள பேஸ்ட் கொண்டு பல் துலக்குவதில்லை. ஆய் போனால் கூட அலம்புவதில்லை. ஆடிமாசமோ அதிரடித் தள்ளுபடியோ முக்கியமாய் நிர்வாணம் பற்றி கவலையேதுமில்லை.  

பிள்ளைகள் ரெண்டும் பள்ளியிலிருந்து வரும் சமயம். என்ன கற்றுக்கொண்டு வருவார்கள் என்று தெரியாது. என்ன இன்னும் கற்றுக்கொடுக்கவேண்டும் என்றும் தெரியாது. கற்றுக்கொள்ளவேண்டியவை எல்லாமே ஒரு நிகழ்வின் முடிவில் துவங்குவதாகவே இருக்கிறது. நல்லதோ கெட்டதோ நடந்துமுடிந்ததிலிருந்தே கற்றுக்கொள்ளவேண்டி இருக்கிறது. 

டுத்தவர் அனுபவத்திலிருந்து ஏதும் கற்றுக்கொள்ள இயலாது என்பது பல சந்தர்ப்பங்கள் எனக்கு உணர்த்திய சவால். அரையடி உயர பஞ்சு மெத்தையிலிருந்து கீழே விழுந்தவருக்கு கை எலும்பொடிந்து கதறியதும், மூன்றாவது மாடியிலிருந்து விளையாடிக்கொண்டிருந்தபோது கிழே விழுந்த பையன் அம்மா என்று வீறிட்டு ஒரு காயமுமில்லாமல், பின் பக்கம் தட்டி வீட்டில் நுழைந்ததும் கண்டு எலும்புடைவதின் அளவுகோலில் இருந்த நம்பிக்கைகள் சுத்தமாய் விட்டுப்போயிற்று. 

ள்ளியைவிட வெளிஉலகம் பிள்ளைகளுக்கு என்னென்ன பாடங்கள் கற்றுக்கொடுக்கப் போகிறதோ என்ற பயமே என்னுள் இருந்தது. வெறும் எண்களைக்கொண்டு அறிவைக் கணக்கிடும் மதிப்பெண்கள் மேல் என் தந்தைக்கில்லாத நம்பிக்கையையே எனக்கும் இருந்தது. 

அணில். இ இலை. ஊ ஊஞ்சல். இதெல்லாமே வீட்டிலேயே இருக்கிறது. இதைப் பாடமாகப் படிக்கத்தான் செலவு செய்து பள்ளிக்குச் செல்கிறார்கள். இஞ்சினியரிங் படித்து விட்டு மெயின்டனன்ஸில் இருந்த அந்த அதிகாரி என் தோற்றத்தை வைத்துக்கேட்டார் ”நீங்க எந்தக் காலேஜில் பிஈ முடிச்சீங்க?” நான் கரஸ்பாண்டென்சில் பிகாம் முக்கால்வாசி படித்து எக்ஸ்பீரியன்ஸை வைத்து கையில் கழி இல்லாமல் கயிற்றிலாடிக்கொண்டிருப்பதை எப்படிச் சொல்வது? ஆமாம் என்று சொல்லிவிட்டு அடுத்ததாக வரும் எந்தக் காலேஜ் எந்த பேட்ச் என்ற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லவேண்டி இருக்குமே என்ற நினைப்பில் பேச்சை வேறு பக்கம் திருப்ப எத்தனித்தபோதே, ”வொய் திஸ் ஃப்யூல் ஃபில்டர் ஈஸ் ஸோ பிக்” என்று அவர் சுட்டிக்காட்டிய இடத்தை நோக்கினேன். அடப்பாவி அது ஏர் பில்டர்டா என்று சொன்னால் அவன் ஈகோ தமாஷ் மாத்திரை சாப்பிட்ட மாதிரி ஆகிவிடும் என்றெனக்குப் பட்டது. படம் காட்டியே படிப்பு நடத்தி இருப்பார்களோ அல்லது இவன் அந்த நேரத்தில் படம் பார்க்கச் சென்றானோ தெரியவில்லை? ”ஐ திங் திஸ் ஈஸ் டீசல் பில்டர் யூ சீ தி ஹோஸ் ஃப்ரம் தி ஃபியூல் டாங்க் ஈஸ் கமிங் ஹியர். ஐ திங்க் தட் ஈஸ் ஏர் ஃபில்டர். டிஃப்ரெண்ட் இன்ஜின்ஸ் டிஃப்ரெண்ட் டிஸைன்.” திங்க் பண்ணி அவனுக்கான பதிலை நான் கொடுத்ததில் அவன் காயப்படவில்லை. ”யா யா” என்றான். கருத்துச் சொறிதலை இங்கே காண்பித்து ஈகோவைக் கிளறி விவாதத்தில் வெற்றிபெற்றால் வீட்டில் உப்புமா கூடக் கிண்டமுடியாது என்பது பசியும், பணமும், பிஸினஸ் எதிக்ஸும் எனக்குக் கற்றுக்கொடுத்த பாடம். கல்லூரி முடித்து வருபவர்களுக்கு வங்கி டெப்பாஸிட் சலான் கூட ஃபில் பண்னத் தெரிவதில்லை. கிங்ஸில் விக்ஸ் தடவி அடித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும் என்ற தேவ ரகசியங்கள் அவர்களை அதைவிட எளிதாக வந்தடைந்து விடுகிறது. 

நிறைய முடிகள் நரைத்து வெளியே தெரிய ஆரம்பித்துவிட்டது. டை அடிப்பதா? வேண்டாமா? அடுத்த கேள்வி உள்ளே தயாராகிவிட்டது. பையன் வளர்ந்து சம்பாதிக்கும் நாட்களை கணக்குப் போட்டால் குறைந்தபட்சம் 15 வருடங்களாவது பிழைப்புக்காக ஓடவேண்டும். அதன்பிறகும் அவன் சம்பாதித்து நான் காலாட்டிக்கொண்டு டிவி பார்க்க முடியுமா அல்லது ஏன் என் உயிர எடுக்கற? என்று உதாசீனப் படுத்துவானா?  தெரியாது. கண்ணுக்குக் கண்ணா வளர்த்தேன். எவ்ளோ செலவு செஞ்சி படிக்கவெச்சேன். என்ற டயலாக்கெல்லாம் எனக்கே பிடிக்காதபோது என் பிள்ளைகளுக்கு முன்னால் அதைச் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. நானா பெக்கச் சொன்னேன் என்ற பதில் வருமே என்ற கவலையாகவும் இருக்கலாம். 

றிவியல் முன்னேற்றங்களெல்லாம் வாயைப் பிளக்கவைக்கிறதோ இல்லையோ வயிற்றைக் கலக்குகிறது. மருத்துவம் முன்னேறி எண்பது தொண்ணூறு வயசெல்லாம் வாழ வைத்துவிடுமோ என்ற கவலை வேறு அவ்வப்பொழுது அப்பிக்கொள்கிறது. உடலைப்போன்றே ஆசைக்கும் வயசானால் தேவலை. ஆனால் அது மட்டும் பெஞ்சமின் பட்டனைப்போல வயதாக ஆக இளமையாகத் துள்ளித் தள்ளுகிறது. ”போயிடும் ராத்திரி தாங்காதுன்னு டாக்டர் சொல்லி 10 வருஷமாச்சி இன்னும் மாமா ஜம்னுதான் இருக்கார். இப்பல்லாம் டாக்டரக் கூப்பிட்டா வர்றதே இல்லை. சிக்ஸ் அவர்ஸ் பார்த்துட்டுச் சொல்லும்மான்னு சொல்லிட்டார்” என்ற டயலாக்கெல்லாம் அசரீரியாக ஒலிக்கிறது. ”தூங்கினார். எழுந்துக்கல” என்ற பதங்களில் மிகப் பெரிய ஈர்ப்பு வந்துவிட்டது, 

”ஒரிஜினல் ரோஸ்வுட்தானா?” கேட்ட அப்பாவைப் பார்த்தேன். நான்காம் பிறை நிலாவைப்போல அந்த ஈஸி சேரில் நான் கால் நீட்டி உட்கார்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்தேன். இந்தியன் தாத்தா நெடுமுடி வேணுவை அடிக்கும்போது உட்கார்ந்திருந்த சேர் என்று சொன்னால் உங்களுக்கு உடனே புரியும். ”ஆமாப்பா. பழசு விக்கிற கடைதான் அது. இப்பல்லாம் யாரும் இதுமாதிரி செய்யறதில்லை.” நடுவில் ஒயர் பின்னப்பட்டு இரு பக்கமும் கைப் பிடியும் அதே அளவுக்கு கால் வைக்க நீட்ட முடிந்ததுமான அந்த ஈஸி சேர் என்னுடைய நீண்டகால கனவுகளில் ஒன்று. சட்டென்று ஏதோ தோன்றியது ”நீங்க உட்காருங்கப்பா” என்றேன். என் அப்பா உட்காருவதற்குள் சட்டென்று என் ரெண்டாவது பிள்ளை ஓடிவந்து உட்கார்ந்துவிட்டான். எனக்கு கோவம் தலைக்கேறியது. 

“டேய் தாத்தாவுக்கு இடம் கொடுடா நீ சோபால உக்காரு”. 

”போப்பா மாட்டேன் இந்த சேர்லதான் உக்காருவேன்.” நான் அப்பாவைப் பார்த்தேன் 

”விடுடா உன்னைமாதிரிதான் உன் புள்ளையும்”

”என்னப்பா சொல்ற?”

”குழந்தைங்கன்னா அப்படித்தாண்டா நீயும் கொழந்தையா இருக்கும்போது இதே அடம்தான். அவன் உக்கார்ந்துக்கட்டும் விடு. ”

தொண்ணூறோ நுறோ சாய்ந்தால் கனா வரும் இந்த சேரை வைத்து ஒப்பேற்றிவிடலாம் என்று நம்பிக்கை துளிர்விட்டது.      


.

ஒளியும் ஒலியும்!


.



ஆவடி ரயில் நிலையத்தில் இறங்கியபிறகுதான் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உணரமுடிந்தது. தண்டவாளங்களைக் கடப்பதற்காகப் போட்டிருந்த மேம்பாலத்தின் அடியில் கடப்பாக் கல்லாலான நீள இருக்கை இருந்தது. ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். அவரருகில் நானும் அமர்ந்தேன். இடது பக்கத்தில் ரயிலின் கால அட்டவணை ப்ளக்ஸில் அச்சடிக்கப்பட்டு வைத்திருந்தார்கள். வெறும் எண்களாலான அதை என்னால் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. எனக்கு மிகவும் கடுப்பாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும் சில விஷயங்களில் இதுவும் ஒன்று. பூஜ்ஜியம் ஒன்றுலிருந்து இருபத்து நான்குவரை நடுவில் எழுதி இரு பக்கமும் ஆல்பா நீயூமரிக்கலில் எழுதப் பட்டிருந்த அந்த பட்டியலை என்னால் ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை? 

நான் மீண்டும் ரயில் நிலையத்தை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தேன். எதிர் ப்ளாட்பாரத்தில் அழகாக கிளை விரித்துப் பரவிய ஆலமரத்தின் அடியில் அமர்ந்திருந்த பயணிகள் மிகச் சிறியவர்களாக காணப் பட்டார்கள். மரத்தின் பிரம்மாண்டம் மனதில் எதையெதையோ எழுதிப் பார்த்துக்கொண்டிருந்தது. தன்னினும் சிறிய மனிதனால் தான் எப்பொழுதுவேண்டுமானாலும் கூறுகளாக்கப் படுவோமென்று அந்த மரத்திற்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டா? அதனாலேயே அமைதியாய் நிழல் தந்து நிற்கிறதா? அல்லது அழிவென்பது மாயை அது வேறொன்று பிறப்பதற்கான ஒரு சலனம் என்று உணர்ந்திருக்குமா? நான் மரத்திற்கு மேலேயும் பார்த்தேன். இவ்வளவு நீலமாக, மேகங்களற்ற வானம் தொடர்ச்சியாக இப்பொழுது காணக்கிடைக்கிறது. சென்னையில் இது எனக்கு ஆச்சரியம் மற்றும் அதிசயம். இன்றைக்கு வெயில் அதிகம்தான் இல்லையென்றால் இப்படியெல்லாம் நான் யோசிக்க வாய்ப்பில்லை.

உடல் பெருத்த பார்வையற்ற ஒரு வயதான பெண்மணி தனக்கு வழி காட்டும் ஒரு குச்சி கொண்டு ஒரே ரீதியில் எழுப்பிய சத்தத்தால் நான் அவரைப் பார்க்கத் தொடங்கினேன். இவருக்கு ஆலமரமோ, அதன் உணர்வுகளோ, நீல வானமோ, மேகங்களோ ஒரு பொருட்டே அல்ல. சப்தங்களாலும், தொடுகைகாளாலும் ஆன உலகு. அவர் நாங்கள் அமர்ந்திருந்த இருக்கையைத் தாண்டிச் சென்று நின்றுவிட்டார். களைப்பான ஒரு உஸ்ஸ்ஸென்ற வெயிலின் மீதான சாபம் அவர் வாயிலிருந்து வந்தது. மீண்டும் அவர் வந்தவழி திரும்பினார் இரண்டு அடிகள் எடுத்து வைத்து நாங்கள் அமர்ந்திருந்த அந்த இருக்கையை தன் குச்சியால் தொட்டார். அருகிலிருந்த பெரியவர் ”யாருமில்ல உக்காரும்மா” என்றார். ”தாண்டிப் போயிட்டேன்” என்றபோது எனக்குப் புரிந்தது அவர் இந்த இருக்கையை நோக்கித்தான் உட்காருவதற்காக வந்திருக்கிறார். இந்த இடம்தான் ரயிலின் கடைசி பெட்டி நிற்கும் இடம் இங்கிருந்துதான் அவர் முதல் பெட்டிவரை தன் யாசகத்தைத் தொடரவேண்டும். 

ரயில் பெட்டியிலும் இவர்கள் பிரயாணம் செய்யும்போதும் தடுமாறுவதே இல்லை. சரியாக வாசல் எது? எங்கே ஆரம்பிக்கிறது எங்கே முடிகிறது எங்கே திரும்பவேண்டும், எது 10 ரூவாய்த்தாள்? எது 5 ரூபாய் நாணயம் என்பது முதல் பொருட்கள் விற்கும் பார்வையற்றவர்கள் கையில் கொண்டுவரும் 20 வகை ஐட்டங்களின் கேட்பதை சரியாக எடுத்துக்கொடுப்பதும் சுலபமாகவே நடக்கிறது. 

“வெயில் கொஞ்சம் தாழ்ந்திருச்சி போல இருக்கே” என்றபொழுது மீண்டும் மேலே பார்த்தேன் இப்பொழுது வானம் மூட்டத்தோடு இருந்தது. சற்று முன்புவரை நீலமாக தெளிவாக இருந்த வானம் இப்பொழுது மூட்டமாக இருக்கிறது. தெளிவாக இருந்ததைப் பற்றி இப்பொழுதுதானே சிலாகித்தேன்? வெறும் உணர்சிகளால் தன்னைச் சுற்றி நிகழ்வதை தொடர்ச்சியாக கவனிக்கும் அந்தப் பெண்மணியைப் பார்த்து எனக்கு வெட்கம் வந்தது.

பார்வை இருந்தும் குருடராய்? எங்கோ எதற்காகவே படித்த இந்த வாக்கியம் எனக்கு நினைவுக்கு வந்தது. பார்வையுள்ளவன் பயன்படுத்தாத காட்சிப் பொருட்கள் அவனைச் சுற்றி நிறைய இருக்கிறது. வெறும் சாட்சியாக, செய்தியாக, எச்சரிக்கைகளாக, கிளர்ச்சியாக வெறுமே பார்த்துக் கடப்பவைகளில் பார்க்கவேண்டியவைகளும் கடந்து போவதே பார்வைக் குருட்டு. பார்வை இருந்தும் பார்க்கத் தவறிய, சோம்பலுற்ற தருணங்கள் ஒரு நாளில்தான் எத்தனை கடக்கின்றன? நான் மீண்டும் அந்த ரயில் அட்டவணையைப் பார்த்தேன். 

”அடுத்த வண்டி அரக்கோணமா?” அந்தப் பெரியவர் என்னைப் பார்த்துக் கேட்டதற்கு நான் அந்த ரயில் கால அட்டவணையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தது ஒரு காரணமாயிருந்திருக்கலாம். நான் ”தெரியலைங்க” என்று சொல்வதற்குள் அந்த பார்வையற்ற பெண்மணி ”அடுத்தது மெட்ராஸ் திருவள்ளூர் இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்துடும்” என்றார். 

”எல்லாமே மெட்ராஸ்லேர்ந்து வரதுதானேம்மா?”

”இல்லைங்க சார். பீச்லேர்ந்தும் வரும், அம்பத்தூர்லேர்ந்தும் வரும். எங்கேர்ந்து கிளம்பி எங்கே போகுதுன்னு சேர்த்து டைம் டேபிள்ள எழுதி இருக்கறத வெச்சி சொல்றதும் அப்படியே வந்திடுது. ”

சொல்லிவிட்டு அந்த பெண்மணி கடக்கும் ஒவ்வொரு காலடி ஓசைக்கும் தான் கையில் வைத்திருந்த அந்த எவர் சில்வர் தம்ளரில் ஒரே ஒரு காயனைப் போட்டுக் குலுக்கிக் கொண்டிருந்தார்.  கடந்து போனவர்களில் சிலர் மட்டும் அந்தப் பெண்மணியின் தம்ளரில் சில்லறைகளைப் போட்டுவிட்டு சென்றார்கள்.

கண்ணிருந்தும் குருடராய், எல்லா அறிவிப்புகளும், விளம்பரங்களும், எச்சரிக்கைப் பலகைகளும், விதிகளும் இந்த இரண்டு வார்த்தைகளில் அடங்கிவிடுமோ என்னமோ?. 

சம நிலையிலிருந்து வழுக்கி சுய நலமாய் தன் வசதிக்கு இந்த உலகை மாற்றும் மனிதனிடமிருந்து இயற்கை லாவகமாய் தப்பித்துக்கொண்டிருப்பதைப் போல பார்வையுள்ளவர்களால் பார்வையுள்ளவர்களுக்காக கட்டி எழுப்பப்பட்ட வசதிகளை பார்வையில்லாத இந்தப் பெண்மணி எள்ளுவதைப் போல எனக்குத் தெரிந்தது.

நான் மீண்டும் அந்த அட்டவணையை வெறித்துப் பார்க்க ஆரம்பித்தேன். 

.

அல்வா!!


.

சிங்கம் பட்டி கல்லிடையிலிருந்து மணிமுத்தாறு செல்லும் வழியில் உள்ள அழகிய ஊர். 

ஜமீன் அரண்மனையைச் சுற்றி ஊர் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. நுழைந்தவுடன் ஒரு பெரிய தர்பார், 
                                                                         நடை பாதை
அதைத்தாண்டி ஒரு அழகிய நடை பாதை வழியே நேராகச் சென்றால் ஒரு நந்தவனம் இடது பக்கத்தில் விருந்தினருடன் களிக்க ஒரு க்ளப், நேரே செல்லாமல் வலது பக்கம் சென்றால் உள்ளடங்கிய அந்தப் புரம். 

அந்தப் புரத்தின் மெயின் நுழைவாயில் கதவு அழகான வேலைப் பாடுகளுடன் மிகவும் நேர்த்தியாகவும் பாதுகாப்பாகவும் செய்யப்பட்டிருக்கிறது. இரண்டு யானைகளை வைத்து மோதினாலும் அசைந்து கொடுக்காது போல!. 
                                                               அந்தப்புரக் கதவு
                         
பெரும்பாலான பழைய காலத்து வீடுகளில் இம்மாதிரி மிக கனமான கதவுகள், உத்திரங்கள் பார்த்திருக்கிறேன். இன்றளவும் அவை கட்டிடங்களைத் தாங்கி நிற்கின்றன. இன்றைக்குக் கட்டப்படும் வீடுகளில் ஆறு மாதத்தில் 

“இது என்னங்க செவுத்துல க்ராக் விடுது?”

“அது ஒன்னுமில்ல சார் ஏர் க்ராக், பூசினா சரியாயிடும்”

வீடுகட்டுபவன் தான்தான் க்ராக் என்று நாம் விளங்கிக்கொள்வதற்குள் பூசிவிடுவார்கள்! technology so much iproved! எனக்கு வீட்டு மாடியில் மஞ்சம்புல் வேய்ந்த ஒரு கூரை போட ஆசை என்ன வெயில் அடித்தாலும் மிகவும் குளிர்ச்சியாக வைக்கும். நான் வசிக்குமிடத்தில் கேட்டபோது அப்படி என்றால் என்னவென்றே தெரியவில்லை. குடிசைன்னா தென்ன ஓலைதான் அதென்ன மஞ்சம்பில்லு என்றார்கள். இப்பொழுது ஓடு பதிப்பது கூட ஃபேஷனாகிவிட்டது. கிராமங்களில் வீடென்றால் கான்க்ரீட் அல்லது தென்னம் ஓலைதான் :( 

சரி விஷயத்திற்கு வருவோம். சிங்கம் பட்டி ஜமீந்தார் இன்னும் அந்த அரண்மனையில்தான் வாசம். 

                               தற்பொழுதைய ஜமீன்தாரின் இளமைக்காலப் படம்   

நாங்கள் சென்றபொழுது கம்பீரமாக அவர் அமர்ந்து அன்றைய கணக்கு வழக்குகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். டிஸ்டர்ப் செய்யாது சுற்றிப் பார்த்துவிட்டு வந்தோம். சிங்கம்பட்டி செல்லும் வழியெங்கும் பசுமை, பசுமை மேலும் பசுமை, வாய்க்காலிலெல்லாம் கேட்பாரற்று விளைந்துகிடக்கிறது சேம்பு. ஆயிரக்கணக்கான மாடுகளுடன் வசித்த அந்த சிங்கம்பட்டி மக்களுக்கு அன்றைக்கு பெரும் மேய்ச்சல் நிலமாக இருந்தது மணிமுத்தாறு டாம் உள்ள புலிகளின் சரணாலயமான வனப் பகுதிதான். 

                                                ராஜ ராஜன் ஒற்றை நாற்று நடவு
மிகவும் செழிப்பான அந்த மலைப் பகுதி தவிர்த்து மற்ற அனைத்தும் விளை நிலங்களாக உள்ளதால் மக்களுக்கு அந்த மலை சார்ந்த காடே மாடுகளுக்கான இயற்கைத் தீவனம். பல்லுயிர் பெருக்கத்திற்கும், புலிகளுக்கு உணவாகவும் அந்த மாடுகள் இருந்திருக்கின்றன. வனத்துறை, அணை கட்டியதால் உண்டான பாதுகாப்பு போன்றவைகளால் மேய்ச்சலுக்கு அனுமதிக்கப் படாது தற்பொழுது பல்லாயிரமாகப் பெருகி இருக்கவேண்டிய நமது நாட்டு மாடுகள் காலி! பன்றியின் குணங்களையுடைய சீமைப் பசுவின் ஏழரைப் பால் குடித்து ஜூப்பர் என்று கூவிக்கொண்டிருக்கிறோம். அதன் சாணியும், கோமியமும் நில வாழ் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளுக்கு லாயக்கற்றது. நமது பாரம்பரிய திமில் கொண்ட கரவை இனங்கள் வெளி நாட்டில் இன்றும் பத்திரமாகப் பாதுகாக்கப் பட்டுவருகிறது. வெறும் மேய்ச்சலின் மூலம் அதிக பால் தரக்கூடிய பாரம்பரிய ரகங்கள் அழித்து அதிக தீவனம், நோய் தாக்குதலுக்கு ஆளாகும் மருந்து தேவைப்படும் சீமை ரகங்கள் இன்று நம்மை ஆள்கிறது. ராஜாவுடன் பேசிக்கொண்டிருக்கும்போதும் அது வெளிப்பட்டது. மாடுகள் அதிகம் இருந்ததால் வெண்ணையும், மோரும், தயிருமாக விற்றுச் செழித்திருக்கின்றது ஊர். 
                                    துபாய் ராஜாவின் பூர்வீக வீடு மாடியிலிருந்து

சிங்கம்பட்டியில் அழகான ஒரு முருகன் கோவில், பின்புறம் தாமிரபரணி ஆறு என்று அமர்க்களமான லொக்கேஷனுக்குக் கூட்டிச் சென்றார் ராஜா. வெளியூர்களிலிருந்து நண்பர்கள் வந்தால் இங்கேதான் கூட்டிவந்து பேசிக்கொண்டு இருப்போம் நேரம்போவதே தெரியாதென்று அவர் சொல்லியபோது. வெறும் ஆற்றின் சலசலப்பும், பறவைகளின் ஒலியும் மட்டுமே சூழலாயிருந்த அந்த இடம் ஏறக்குறைய சொர்க்கம்!

                                                             ஜமீன் லச்சினை

கோவிலின் வாயிலில் ஒரு கைகூப்பிய சிலை. அவர்பெயர் தூக்குதுரை என்றார் ராஜா. அவரும் சிங்கம்பட்டி ஜமீன்தான் ஆங்கிலேயரை எதிர்த்தவர், பல மொழிகள் சரளமாய் பேசக்கூடியவர், ஆங்கிலேயரிடம் பிடிபட்ட தனது சகாவை மீட்கச் சென்று கைகலப்பில் ஒரு ஆங்கிலேயரைக் கொலை செய்தபோது ஆற்றில் தொலைத்த தனது கத்தியைத் தவறவிட்டுஅதன் மூலம் அவர்களால் பிடிபட்டு தூக்கு மேடையில் நிறுத்தப்பட்டு என்ன நடந்தது என்பதைச் சொல்லியதை அப்படியே கேளுங்கள்! 

“உங்களுக்கு சாவதற்குமுன் எதாவது கடைசி ஆசை இருக்கிறதா?”

“ஆம்”

“என்னவென்று சொல் நிறைவேற்றுகிறேன்”

“உன் பொண்டாட்டி கூட ஒர் இரவு”

அது வேலைக்காவாது என்று ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டவர்!!

(ஊர்வலம் தொடரும்..)

டிஸ்கி : ஆனது ஆகிப்போச்சு அடுத்த இடுகைல அல்வா கொடுக்கறேன்!! :))


.

ஒரு பரதேசியின் பயணம் - பார்ட் 2


 சமீபத்தில் பதிவர் நண்பர் எறும்பு ராஜகோபாலின் குழந்தையின் முதல் பிறந்த நாள் முன்னிட்டு அவருடன் அம்பாசமுத்திரம் சென்றிருந்தேன். போன வருடமும் இதே தை மாதத்தில் அங்கு சென்றதால் இந்த முறை சில புதிய இடங்களைப் பார்த்துவிட முடிவு செய்திருந்தேன். எறும்பு குழந்தையின் பிறந்த நாளுக்காக பிஸியாகிவிட்டதால் சுற்றிக்காட்டும் முழுப்பொறுப்பேற்றுக்கொண்டவர் நம்ம துபாய் ராஜா.

 பாசக்கார மனுஷன் அவருடைய பிறந்த நாள் அன்றைக்குக்கூட இந்த ஏழை எழுத்தாளனை வைத்துக்கொண்டு பட்டி தொட்டியெல்லாம் சுற்றிக் காண்பித்தார். 

முதல் நாள் அம்பை சென்று இறங்கியவுடன் ராஜகோபால் பிறந்தநாள் முதல் அவருக்கு பதனி சப்ளை செய்யும் பதனிக் கடை ஓனர் ஸ்பெஷலாக இள நுங்கு வெட்டிப்போட்டு பனை இலையில் பதனி ஊற்றித்தந்தார் பல வருடங்களுக்குப் பிறகு ஜில்லென்று ஒரு பானம் அடித்த கையோடு ஆற்றுக்குச் சென்றோம். 

“ராஜகோபால் இந்த ஆத்துல எதுனா விசேஷம் இருக்கா?”

“இருக்குங்க”

”என்னது?”

“வெளியூர்லேர்ந்து வர்றவங்கள நிறைய காவு வாங்கி இருக்கு.” 

(நல்ல எண்ணம்யா) நல்லவன் வாழ்வான்னு நினைத்துக்கொண்டே ஆற்றங்கரைக்குச் சென்றோம். நான் நினைவு தெரிந்து தமிழக ஆற்றில் கண்ட மலமணக் காட்சிகள் நாசி துளைக்க கரைக்குச் சென்றபோது கொல்லம்/செங்கோட்டை பாசஞ்சர் ரயில் பாதை அகலப் பாதையாக மாற்றும் பணிக்காக மேம்பாலம் கட்டிக்கொண்டிருந்தனர். அதாவது ஆங்கிலேயர் சற்றொப்ப 100 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டிய தூண்களை இடிக்க முடியாது அதன்மேலேயே ஒரு மேக்கப் போட்டு சுமார் 3 வருடங்கள் நெருங்கப்போகும் 'துரித' கதியில் வேலைகள் செம்மையாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 
                                   தாமிரபரணியின் மேலே அந்த மேக்கப் பாலம்

ஆற்றங்கரையில் நான் மனங்குளிரக் கண்ட ஒன்று மருத மரங்கள். ஓங்கி உலகளந்த உத்தம இயற்கையின் ரோமக் கால்களைப்போல சுமார் 30 அடி சுற்றளவும் 180 அடி உயரமும் வளரக்கூடிய நம் நாட்டின் பாரம்பரிய மரங்கள் வரிசையாய் பல நூற்றாண்டு வளர்ச்சியுடன் கம்பீரமாய் நிற்கிறது. மருத மரங்கள் கோவில் தேர் செய்யப் பயன்படுத்தப்படும் மரங்களில் ஒன்று, மேலும் ஆயுர்வேத மருத்துவங்களிலும், விருட்சாயுர்வேதத்திலும் இதன் பயன்பாடுகள் அதிகம் சொல்லப் பட்டிருக்கிறது. விஞ்ஞானப் பெயர் Terminalia arjuna (Combretaceae) எல்லாப் பருவ நிலைகளிலும் வளரும் இதைக் கன்றாகக் கொடுத்து வளர்த்தால் மழை வளம் பெருகும். ஆனால் அரசாங்கம் வளர்ப்பது ஒன்றுக்கும் உதவாத டில்லி மரங்களை :(( 

சுழல், புதைகுழி இருக்கும் பகுதி என்ற போர்டைக் கடந்து 5 அடி ஆழமுள்ள இடத்தில் மீன்கள் கடிக்க ஒரு குளிர் குளியலோடு வீடு வந்தால் துபாய் ராஜா ”வாங்க போலாம்” என்று வண்டியில் என்னை அழைத்துச் சென்ற இடம் மணிமுத்தாறு டாம். காய்ந்து கிடந்த கம்பீரமான டாமை புலிகளின் சரணாலயமான அடர்ந்த காட்டு வழிப் பாதையில் சென்று அடைந்தோம், காட்டு வழிப்பாதையிலேயே இதமான குளிரும் வன வாசமும் மனசை லேசாக்கியது. மணிமுத்தாறு அருவிக்குச் சென்றால் சென்ற வருடத்தில் பாபனாசம் அகஸ்தியர் அருவியில் அடைந்த அதே இன்பம். யாருமற்ற அருவிக் குளியல்! உயரம் அதிகமில்லை என்றாலும் நீரின் வேகத்தை உடல் தாங்க முடியாமல் தள்ளாடியது. அருவியின் எதிரிலேயே ஒர் அழகான அமைதியான எண்பதடி ஆழமான தடாகம் டைவ் அடித்து சொர்க்கத்திற்கு சென்றவர்கள் அதிகமாம். 

ச’னாவும் வராது, ப’னாவும் வராது ஆனா பேரு மட்டும் சுப்ரமணிய பாரதி. என்று சொல்லிவிட்டு தேங்காய் சீனிவாசன் முறைப்பது போல அந்தத் தடாகம் என்னைப் பார்ப்பதுபோல இருந்தது. டைவ் அடிப்போமா என்றார் ராஜா.

எனக்கு கடப்பாறை நீச்சல்தான் தெரியும் என்பதை அவருக்குச் சொல்ல வாய் வந்தும் 

‘சாரி ராஜா பளக்கமில்ல எதுக்கு ரிஸ்கு?” என்று சொல்லிவிட்டு எஸ்கேப் ஆனேன். 

பராமரிப்பின்றி கிடக்கும் அணையின் பூங்காவைச் சுற்றிப்பார்த்தோம். அணையின் அருகிலிருந்த விவசாய நிலங்கள் செழிப்பாக இருந்தது. குறிப்பாக நேந்திரம் மற்றூம் ரோபஸ்ட்டா அதிகம் பயிராகி இருந்த வாழைத் தோப்புகள்.. அவ்வளவு பச்சை.

மணிமுத்தாறு அணை பற்றி சில குறிப்புகள்: நீரியல் திட்டம் 1 - உலகவங்கி நிதியுதவியுடன் 1958 ல் கட்டப்பட்டது. 
மொத்த நீளம்- 9605 அடி
முழு நீர் மட்ட உயரம் - 118 அடி
நீர்ப்பரவல் பரப்பு - 62.481 சதுர மைல்
முழுக்கொள்ளளவு - 5511 மி.க.அடி
மதகுகளின் எண்ணிக்கை - 3
உபரி நீர் போக்கி - 7
மொத்த பாசனப் பரப்பு - 25438 ஏக்கர்.

அடுத்து அவர் கூட்டிச் சென்றது சிங்கம்பட்டி ஜமீன் அரண்மனை. அதைப் பற்றி வேறு ஒரு இடுகையில் பார்ப்போம். (பின்ன எப்படி டபுள் செஞ்சுரி அடிக்கறது?)

--

மறு நாள் குழந்தையின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் முடிந்து குற்றாலம் போலாம் வாங்க என்று ராஜா அழைக்க ஒரு ட்ரிப் அடித்தோம். வழியில் பிரபல பதிவர்களின் ஊர்களைக் கடந்து குற்றாலம் சென்றபோது பழைய குற்றாலத்தில் மட்டும் உடல் நனையும்படிக்கு நீர் விழுந்து கொண்டிருந்தது.

 மற்ற தேனருவி, மெயின் அருவி, ஐந்தருவி எல்லாம் காய்ந்து கிடந்தது. அன்று தை அமாவாசை என்பதால் அதிக கூட்டம். ஷவரை விட சிறியதாக விழுந்த அந்தத்தண்ணீரிலும் தண்ணிபோட்டு  எண்ணெய் தேய்த்து குளிக்க நின்றிருந்த கும்பல் கண்டு நான் ராஜாவைப் பார்த்தேன். குளிக்கலாமா என்றார். பார்த்ததே பரம திருப்தி என்று சொல்லிவிட்டு கும்பலாய் சுற்றிஅலையும் குரங்குக் கூட்டங்களைப் பார்த்து பரவசமடைத்தோம்.

 (எப்பேர்ப்பட்ட வனத்துல மேஞ்சாலும் கடைசில இனத்துலதான் வந்து சேரனும்.:)


கல்லிடைக் குறிச்சியில் அப்பளங்கள் வாங்கி ராஜாவின் வீட்டிற்குச் சென்று அவரின் தந்தையோடு கொஞ்சம் பேசிக்கொண்டிருந்தேன். சிங்கம்பட்டியில் அவர்களின் பூர்வீக வீட்டிற்குச் சென்றதையும் அங்கு மாடியிலிருந்து கண்ட வயல்வெளிக் காட்சிகளையும் பற்றி பேச்சு வந்தபோது ஆயிரம் மாடுகளுக்கு மேல் சொந்தக்காரகளாக இருந்து அந்த மணிமுத்தாறு மலைப் பகுதியில் மேய்ச்சலுக்கு அனுப்பிய நாட்களை நினைவு படுத்திப் பேசினார். சர்வசாதரணமாக சிங்கம் பட்டியிலிருந்து அம்பைக்கு நடந்தே வந்து பள்ளியில் படித்தது, ஜமீன், புலிவேட்டை, புலியின் மாடு வேட்டை, டேம் கட்டப்பட்டதால் பாதிக்கப்பட்ட கிராமம். என்று பேச்சு டைம் மிஷினில் ஏறிச்சென்றது.

அன்றே அம்பையின் அருகில் இருக்கும் பிரம்மதேசம் சென்றோம். சென்ற முறையே அங்கு சென்றுவந்ததைப் பற்றி சொன்னேன். ஒரு கோவில் இருக்கு கண்டிப்பா பார்க்கணும் என்றார் ராஜா.

“சிவன் கோவில்தானே?”

“இல்லைங்க:

”:ஒரு கிருஷ்ணன் கோவில் இருக்கே அதா?”

”இல்லைங்க”

“அந்த நாலாயிரத்தம்மன்?” இல்லையென்று தலையாட்டியவரைப் பார்த்து வேற என்னங்க கோவில் இருக்கு பிரம்மதேசத்தில என்று கேட்டேன். நானும் இப்படித்தாங்க இருந்தேன், ஆனா கவிஞர் விக்கிரமாதித்தியன் சார்தான் எனக்கே இந்தக் கோவிலை அறிமுகப் படுத்தினார் என்று அவர் அழைத்துச் சென்ற கோவில் 

வாலீசுவரர் கோவில் - திருவாலீஸ்வரம் - தொல்லியல்துறைக் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தக் கோவில் தஞ்சை பெரியகோவிலுக்கும் பழைமையானது. மேலதிகத் தகவல்களுக்கு இந்த படத்தைப் பாருங்கள். 
                                கோவிலின் வாசலில் உள்ள அறிவிப்பு பலகை
                                                                             துபாய் ராஜா




மிக அழகான கோவில். தொல்லியல்துறை வசம் இருப்பதால் மாதத்தில் முக்கிய நாட்கள் நீங்க வேறு தினப்படி பூஜைகள் ஏதுமில்லை. நாங்கள் சென்ற நேரத்தில் பராமரிக்கும் அதிகாரி அங்கே இருந்ததால் உள்ளே அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்தார். 

                                                         ராக்கெட் ராஜா!


திருநெல்வேலியின் ஒரிஜினல் அல்வா கிண்டப்படும் வீடியோ காட்சி, பதிவர் உணவு உலகம் திரு.சங்கரலிங்கம் அவர்களுடன் சந்திப்பு, சாத்தூர் மாக்கான் இராமசாமி கண்ணன் ஊரின் அருகில் இருக்கும் இருக்கன்குடி மாரியம்மன் கோவில், சிங்கம்பட்டி ஜமீன் போன்ற விறுவிறுப்பான பதிவுகள்

பின் வரும் நாட்களில்.....


டிஸ்கி:-

(இந்த இடுகைய தமிழ்மணம் டாப் டென்ல கொண்டு வந்துவிடுவீர்கள் என்ற நம்பிக்கையில் வேலையே இல்லாத நேரத்தில் மிகுந்த பணிச்சுமைகளுக்கிடையே பதிவிடுகிறேன் நண்பர்களே!) :))

சில பகிர்வுகள்..!

வணக்கம் நண்பர்களே, நலமா?

பல நிகழ்வுகளால் எதையுமே படிக்க இயலவில்லை, மிக முக்கிய காரணமாக, என் 87 வயது பாட்டியின் மறைவு. என் வீட்டிலேயே இருந்து ஐந்தாம் தலைமுறையைக் காண இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில் அமைதியாய் ஒரு அதிகாலையில் அவர் உயிர் பிரிந்ததும் அதன் மறு நாள் காலையில் ஒரு குவியல் சாம்பலாய்க் கண்டதும் சோகம் தாண்டி நிறைய விஷயங்களைப் புரியவைத்தது.

என் தாத்தாவிற்கு சிறு வயதில் இரண்டாம்தரமாய் வாழ்க்கைப்பட்டு  ஐந்து பெண்களைப் பெற்று  இளம் வயதிலேயே விதவையாகி எல்லா குடும்பக் கஷ்டங்களையும் அனுபவித்து எந்தெந்த ஊரிலோ சுற்றிச் சுழன்று வாழ்ந்து தற்பொழுது நான் இருக்கும் கிராமத்தில் என் வீட்டில் இறந்து இயற்கை சூழலுடனான சுத்தமான ஒரு மயானத்தில் எரிந்து உதிர்ந்து போனாள். 

எனக்கு வராது என்றில்லாது எனக்கும் வருமென்று உள்வாங்கிப் பார்க்கையில் ஒரு இறப்பு பல விஷயங்களை உணர்த்துகிறது. துக்கமென்பது ஒரு அளவுகோலோடே அழவைத்ததும் ஒரு ஆச்சர்யம்தான். மரணமென்பதை பயமின்றி எதிர்கொள்ளும் சூட்சுமம் அறிந்தால் அதுவும் ஒரு மகிழ்ச்சியே என்று எண்ணுகிறேன்.  

--







சென்ற மாதத்தில் ஒரே ஒரு நாள் இணைப்பிலிருந்தபொழுது தமிழ் மணத்தில் வாக்களிக்க வேண்டிய இடுகைகளுக்கு வாக்களித்ததோடு அதை மறந்துவிட்டேன். என்னுடைய நான் எடுத்த சில புகைப் படங்கள் இரண்டாம் கட்டத்திற்கு முன்னேறியதற்கு வாழ்த்து தெரிவித்து வந்த பின்னூட்டம் கண்டதும் மகிழ்ச்சி. வெற்றி பெறுவது இரண்டாம் பட்சம். அதிகம் இணையத்தில் இல்லாத நிலையிலும் என்னையும் மதித்து வாக்களித்த நட்புகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.:)) மேலே உள்ளது என் வீட்டுத்தோட்டத்தில் நான் எடுத்தது.


--



உயிர்மை புத்தக வெளியீட்டு விழாவிற்குப் போயிருந்தேன். சமீபகாலத்தில் ஒரே இடத்தில் அதிக பதிவர்களைக் கண்டதும், பேசியதும் மகிழ்ச்சியாய் இருந்தது. அடுத்து புத்தகக் கண்காட்சியில் இது தொடரும் என்று நினைக்கிறேன். நண்பர்களின் புத்தகங்கள் இது போன்று சிறப்பாய் வெளியிடப்பட்டது மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துகள்.



--

பா.ராஜாராம் அண்ணன் சவூதிக்கு திரும்பிச் செல்ல சென்னை வந்திருந்தபொழுது சந்தித்தேன். பல விஷயங்கள் பேசினோம். கூடப் பிறக்கவில்லை என்பது தவிர்த்து அன்பின் ஆளுமை அவர். வலைப்பூக்களின் முதல் மற்றும் சிறந்த பயன் இது போன்ற நட்புகள் மட்டுமே. :)) 

பேசிக்கொண்டிருக்கும்பொழுது சொன்னார் “ எழுத்தில் நாம் நினைத்துக்கொண்டிருக்கும் பிம்பம் நிஜத்தில் உடையும்பொழுது அதுவும் அழகாகத்தானிருக்கிறது.”

நான் சொன்னேன்... ”அந்த நிஜ பிம்பமும் உடையும் பொழுதுதான் மனசு வலிக்குதுண்ணே”


--

வேறென்ன? புத்தாண்டு வரப்போகிறது. இரண்டாயிரத்துப் பதினொன்று அனைவருக்கும் நல்லதாய் அமைய ப்ரார்த்திக்கிறேன். வாழ்த்துகிறேன்.




இரு உள்ளங்கைகள் போதுமென்றாலும்
பற்றவியலாத 
புயல்கால மேகங்களாய் 
வட்டச் சுழன்று
கொட்டமடிக்கிறது
காமம்.




.

நந்தலாலா - ない問題

.


நடிப்பு என்பதென்ன கன்னக்கதுப்புகள் ஆடவேண்டுமா? கண்கள் பேசவேண்டுமா? இரண்டு கைகளையும் எங்கே என்ன மாதிரி வைத்துக்கொள்வதென்று ஹோம் வொர்க் செய்வதா? புருவங்கள்? உதடுகள், குரல்? சிரிப்பின் அளவு, ப்ச்.. உடல்மொழி என்ற ஒன்று போதும் என்று நிரூபிக்கிறது படம். க்ளோசப்பில் நம்மைக் கொன்று குவித்த திரைப்படங்களில் கால்களில் முகம் காட்டும் ஃப்ரேம்கள் ஒரு குழந்தைக்கும் குழந்தையாய் இருப்பவனுக்கும் என்ன அளவில் உலகம் தெரியுமோ அதே அளவில் நகர்கிறது காட்சிகள்.

தாய்ப்பாசத்தை வைத்து பிழியப் பிழிய பொன்மனச்செம்மல் முதல் துவைத்துக்காயப்போட்டவர்கள் அதிகம். அவர்கள் எல்லாமே இலக்கணம் மீறாத அம்மாக்கள். குந்திதேவி மார்பிலடித்து அழும் கர்ணன் வதை காட்சி முதல் பாசத்தினாலும் சோகத்தினாலும் காதைக்கிழியவைத்து கண்களை பதம் பார்க்க வைத்த அதே வெள்ளைத்திரையில் முதுகு மட்டும் காண்பித்து பித்துப்பிடிக்க வைக்கிறார் மிஷ்கின். இத்தனைக்கும் கடைசியில் எந்த சூப்பர் தாய்களையும் காட்டாமலேயே!   

வெறும் சம்பவக் கோர்வைகள்தான். ஒரு பயணத்தில், தின வாழ்வில், தினமும் நாம் காணும் ஆனால் நெகிழத்தவறவிடும் தருணங்கள் ஒவ்வொரு நொடியின் கட்டங்களிலும் நகர்ந்துகொண்டே இருக்கிறது. 

படிமானம் குறியீடு என்றெல்லாம் ஆயிரம் இருக்கலாம். அதெல்லாம் சாமானியனுக்குத் தேவையா? புரியுமா? ஒரு கைப்பிடிச் சோறின் ரிஷிமூலம் நதிமூலம் தெரிந்துதான் உண்பேன் என்றால் வயிறு நிறையுமா? அதெல்லாம் விவாதிப்பவர்களுக்கும், திரைப்படத்தை டெக்னிக்கலாக அணுகுபவர்களுக்கும் தேவையானவை. நமக்கு படத்தில் தூரத்தே தெரியும் மதில் ஏறி குதித்த ஒருவன் உடை மாற்றும் நிர்வாணக் காட்சி ஊர் ஒதுக்கிவிட்டதென்று தனியனாய் இருக்கும் ஒரு மாற்றுத்திறனாளிக்கு சிகிச்சை செய்யும் பெண்டாக்டரும் தன்னைப்போன்றவர் என்று தெரியும் காட்சிகள் பிரமிப்பை ஏற்படுத்தினால் போதாதா? பெற்ற தாயால் புரிந்துகொள்ளாத குழந்தைகளை முகமறியாதவர்கள் அன்பு செய்கிறார்கள். 

ஒரு படத்தில் இசை என்பதின் எல்லை என்ன என்பதை இசைஞானி சரியாகச் செய்திருக்கிறார். மெளனத்தைப் போன்றதொரு சிறந்த இசை இல்லை என்பதை அவர் சொல்லக்கேட்டிருக்கிறேன்.  காமிராவின் கோணங்களும், நிறங்களும் அபரிமிதமான உணர்வுகளைத் தருகிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் நான் என்னை அறியாமல் அழுத படம் இது. தன் முத்தத்தை யாருக்கும் தராமல் சேர்த்து வைத்த அந்த சிறுவன் முதல் முறை முகம் முழுக்க முத்தம் தந்தபோது நான் ஏன் அழுதேன்? சிறுக்கி முண்டை என்று தன் தாயை எட்டி உதைக்க வந்தவன் எங்கம்மா எங்கம்மா என்று அழுதபோது நானும் ஏன் அழுதேன்? எது அழுகையை வரவைத்தது? இசையா? காட்சி அமைப்பா? காமெராவா? முக பாவனையா? எது அழுகையைத் தூண்டியது? தமிழ் படத்தில் பார்க்காத அம்மா சென்டிமென்ட்டா? எது அழத் தூண்டியது? 

எந்தவித எதிர்பார்ப்புகளுமற்று ரசித்துப் பார்க்கவேண்டிய மன்னிக்க உணர வேண்டிய படம் இது. காட்சிகள் தீர்மானிக்கும் கதையில் நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று உட்கார்ந்தபடியே ஒன்றிப்போய் படத்தினூடே ஒரு பயணம்.


குறிப்பு: இந்தப்படம் கிகுஜிரோவின் அட்டக்காப்பி அல்லது தழுவல் என்று சொல்லப்படுகிறது. நிச்சயம் இந்தப் படம் ஒரு ரஜினி படம்போலவோ, கமல் படம் போலவோ அல்லது மற்ற மாஸ் ஹீரோ படங்கள் போலவோ வசூலை அள்ளிக்குவிக்கும் என்று நினைத்து அதற்கான முகாந்திரமாக  எடுக்கப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே? இருப்பினும் ஒரு உன்னதமான படத்தை இப்படி எடுப்பதற்கும் அதில் தானே நடிப்பதற்கும், மெனக்கெடலுக்கும் ஒரு தைரியம் வேண்டும். கரண்ட் ட்ரெண்டில் ஒரு படத்தை எடுத்து காசை அள்ளி இருந்திருக்கலாம். (நான் தியேட்டரில் கண்ட பல இளைஞசர்கள் அந்த எதிர்பார்ப்பிலேயே வந்து என்னய்யா கடுப்பா இருக்கு என கமென்ட் அடித்ததையும் கண்டேன்) அந்த விஷயத்தில் மிஷ்கின் பாராட்டப்படவேண்டியவர். மற்றதெல்லாம் அவரவர் மனசாட்சியின் வேதங்கள்தான் கற்பிக்கவேண்டும். 

ஏனய்யா நூறுகோடி மக்கள் இருக்கும் இந்தியாவில் ஒரே ஒரு முகம் கூடவா காந்திபோலில்லை? அட்டன்பரோவைக் கேட்ட கேள்வி ஏனோ நினைவிற்கு வந்து தொலைக்கிறது!


நன்றி!


.

வெண்ணை (0.13 வாழ்வே மாயம்)


ஏங்க இதுக்குப் பேரு கொலு, ஆயுத பூஜைன்னெல்லாம் சொல்வாங்களே என்று கேட்டபோது, இல்லைங்க என்று சொன்னவர் விடுமுறை தின சிறப்பு பொம்மைகள் அடுக்குதல் மற்றும் அலங்காரம், அப்புறம் வாகனம் மற்றும் டூல்ஸ் பராமரிப்பு, மஞ்சள் கலர் பொடி, சிவப்பு பொடி மற்றும் பொரி தின்னுதல் அப்படின்னு பொழுது போக்கறோம் என்றார்.

எல்லா விடுமுறையிலுமா என்று கேட்டதற்கு 

இல்லீங்க வருஷத்துக்கு ஒரு முறை சிறப்பு விடுமுறைன்னு வரும் அப்ப மட்டும்.

அப்ப அடுத்த விடுமுறைக்கு என்றேன், 

வெடி மருந்தெல்லாம் பேப்பர்ல அடைச்சி பத்த வெப்போம் என்றார்.

‘அடங்கொன்னியா’ என்று நினைக்கும்போதே விடுமுறை தினச் சிறப்புத் திரைப்படங்கள் டிவியில் வரிசையாய் அணிவகுத்துக்கொண்டிருந்தது. 

மீசையைத் துடைத்துக்கொண்டு நகர்ந்தேன்.

--

மாட்டோட ’சுச்சா’வை (அதாங்க கோமியம்) செடிகளுக்கு விடுவதற்காக கலந்துகொண்டிருக்கும்போது சின்னவன் அருகேவந்து என்னப்பா இது என்று கேட்டான். பதில் சொன்னேன். நான் அன்னிக்கு வெண்டைச் செடிக்கு முன்னாடி ’மூச்சா’ போக போனதுக்கு திட்டினியே என்ற கேள்விக்கு ஞே என்று முழித்தேன். 

வேறொரு நாள் அவனே ஏதோ அண்ணனிடம் வில்லங்கம் செய்து என் அம்மாவிடம் மாட்டிக்கொண்டான். நேரே சாமி படத்திற்கு முன் நிற்க வைத்து சாமி இந்த குழந்தைக்கு நல்ல புத்தி கொடு என்ற என் அம்மாவை தடுத்தவன், ஏன் பாட்டி உனக்கு அறிவிருக்கா என்னிக்காவது இவங்க உன் கூட பேசி இருக்காங்களா இப்ப எதுக்கு அவங்களக் கூப்பிடற என்றவனை என்னிடம் கூட்டிவந்து கம்ப்ளெயிண்ட் செய்த என் அம்மாவிடம் சொன்னேன் “சத்தியமா அவன் ப்ளாக் எல்லாம் படிக்கறதில்லம்மா என்னை நம்பு”

திடீர் திடீர் என்று இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கே பதில் இல்லாத என்னிடம் போய்.....??.! (சொப்பன சுந்தரி காரெல்லாம் இல்லீங்க இது வேற :-)

--

ஹாலிவுட் பாலான்னு ஒரு மானஸ்தர் இருந்தார் திடீர்னு சொல்லாம கொள்ளாம அப்பீட் ஆயிட்டார். நானூத்தி சொச்ச ஃபாலோவர்ஸுக்கு ’நாமத்தையும், கல்லையும்’ போட்டதால செம காண்டுல இருக்கோம். ஒரு பெரிய ஆலமரம் தேடிகிட்டு இருக்கேன் கிடைச்சதும் ‘பஞ்சாயத்துதான்’.:)

--

ஆஃப் தி ரெக்கார்டா வலையுலகம் பற்றி எதுனா சொல்றீங்களா என்று பி.ப நண்பர் ஒருவர் கேட்டார். ரெக்கார்ட ஆஃப் பண்ணிடுங்க என்றேன். 

--

போன வாரம் காலை என் அம்மா படுக்கையிலிருந்து எழுந்து கிச்சனுக்கு நுழையும்போது ஒரு பாம்பு கிச்சனை நோக்கி சென்றிருக்கிறது. ஏற்கனவே நான் சொன்னதுபோல் நான் தற்பொழுது இருக்கும் இடம் பாம்புகள் கண்ணில் தென்படும் ஏரியா என்பதால், எப்பொழுது வீட்டின் எல்லைக்குள் அதைப் பார்த்தாலும் சத்தம் போட்டு கூப்பிடுங்கள் ஆனால் அது எங்கே போகிறது என்பதைப் பார்த்துக்கொள்ளுங்கள் அதிர்வுகள் தவிர அதற்கு காது கேக்காது எவ்வளவு வேண்டுமானாலும் சத்தம் போடலாம். ஆனால் பதட்டப் படாமல் அது எங்கே செல்கிறது என்பது தெரிந்தால்தான் அதைப் பிடிக்க முடியும் என்று ஏற்கனவே வீட்டில் உள்ளவர்களைத் தயார் படுத்தி இருந்ததால், என் அம்மா சத்தம் போட்டு என்னைக் கூப்பிட்டதோடு சரியாக அது சென்ற இடத்தையும் சொன்னபடியால் மெதுவாய் ஒரு கொம்பு வைத்து அலசியதில் எலக்ட்ரிக் ரைஸ்குக்கர் அடியில் சுருண்டு படுத்திருந்தது. மெதுவாய் அழுத்தி தலையைப் பிடித்து (கையாலதாங்க) தெரு தாண்டி உள்ள ஒரு புதரில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தேன். சாரைப் பாம்பு குட்டி அது விஷமில்லாத வகை. பயந்துபோன அதன் இதய துடிப்பினை அதன் வாலைப் பிடிக்கும்போது நன்றாக உணர்ந்தேன். what a beautiful animal. விஷப் பாம்பை என்னால் இப்படிக் கையாள முடியாது அதற்காக அடிக்கவும் முடியாது. அதனைப் பிடிக்கும் அந்த ஸ்டிக் சென்னையில் பல இடங்களில் தேடிவிட்டேன் கிடைக்கவில்லை. :(

சரி இது என்னுடைய வீரசாகசத்திற்காக அல்ல. கிராமத்தில் சிகிச்சை அளிக்கும் டாக்டரிடம் பேசியபோது சிறியா நங்கை அல்லது கருந்துளசி வேலியோரம் வளர்த்தால் பாம்புகள் வராது என்றார் (அதை இனிமேதான் டெஸ்ட் பண்ணனும்). பாம்பு கடித்து வருபவர்களுக்கு நீங்க சிகிச்சை அளிக்கிறீர்களா? என்று கேட்டதற்கு இல்லை என்றவர் அதற்கான வசதிகள் சென்னை அரசு மருத்துவமனையில்தான் உள்ளது (40 கிலோமீட்டர்) அல்லது பக்கத்தில் 10 கிலோமீட்டரில் பச்சிலை மருந்து கொடுக்கிறார்கள் பெரும்பாலும் மக்கள் அங்கேதான் செல்கிறார்கள் என்றார். குணமாகிறார்களா என்று கேட்டேன் சிலர் குணமாகிறார்கள் பலர் இறக்கிறார்கள் என்றார் (அந்தச் சிலர் விஷமற்ற பாம்பு கடித்து மீண்டவர்களாக இருக்கலாம் - விஷமுள்ள பாம்புகளுக்கு ஆங்கில மருத்துவம் தவிர வேறு மாற்று இல்லை - நான் படித்தவரை) இதில் என்னைப் பாதித்தது இது போன்ற கிராமப் புரங்களில் பாம்பு கடிப்பது என்பது மிகச் சாதாரணமாக நடக்கிறது அதற்கான விழிப்புணர்வோ, முதலுதவி சிகிச்சை மையங்களோ 5 அல்லது 10 கிலோமீட்டருக்கு ஒன்று என்று அமைத்தால் மட்டுமே கடிபட்டவர்களைக் காக்க முடியும். அல்லது கிராமப் புரங்களில் சேவை செய்யும் மருத்துவர்களுக்கு அதற்கான சிறப்பு பயிற்சி அளிக்கலாம். மருந்துகள் வழங்கலாம். ஆனாலும் நான் கண்டவரையில் 1 கிலோமீட்டருக்கு ஒன்று என்று மையங்கள் அரசு திறந்திருக்கிறது பெயர் - டாஸ்மாக். 

அடுத்த அதிர்ச்சி தகவல் நிறைய வயதான பெண்கள் வாயில் வரும் புற்று நோயால் இறக்கிறார்கள் (வெற்றிலை, புகையிலை) :(

மஞ்சாகலர் மாத்திரைதானா ஊசி இல்லையா என்று கேட்ட பெண்மணியைப் பார்த்துவிட்டு என்னைப் பார்த்தார் டாக்டர். எனக்கு ஏனோ பதினாறு வயதினிலே சிரீதேவியும், அந்த பெரிய பெல்பாட்டம் கண்ணாடி போட்ட டாக்டரும் நினைவுக்கு வந்தார்கள். (கூடவே நம்ம மரு.ப்ரூனோவும்:-) 

--

நான் பல ஆண்டுகளாகவே மைக்ரேன் (ஆமாங்க ஆமாம் அந்த பாழாப் போன ஒத்தத் தலவலிதான்) கிளப் ஆயுட்கால உறுப்பினர். இப்பொழுது பேக் பெயின் மற்றும் மணிக்கட்டு வலி (நம்புங்கப்பா வயசு 38தான்) க்ளப் மெம்பர்ஷிப்புக்கு ரெகுலராக அழைப்பு வரவே அதே கிராமத்து டாக்டர் அக்குபங்சர் ட்ரை பண்ரீங்களா? என்றார். சரி என்று மைக்ரேனுடன் விடிந்த ஒரு நாளில் அக்குபங்சரை சோதிக்கக் கிளம்பினேன். சிறிய தலைமுடியை விட மெல்லிய அளவிலான ஊசிகள் கொண்டு அக்கு பாயிண்ட்ஸ் எனப்படும் அவர்கள் கற்றறிந்த இடங்களில் கை கால் தலை குத்தி ஒரு அரை மணி நேரம் அமர வைத்தார். ரைட் போயிட்டு நாளைக்கு வாங்க என்று அவர் சொல்லும்போதே மைக்ரேன் நின்று விட்டிருந்தது. ஆச்சர்யம். மணிக்கட்டு வலி மற்றும் கழுத்து வலியெல்லாம் போயே போச்ச்..  4000 வருட சிகிச்சை முறையாம் பெயின் கில்லருக்கு பதில் ட்ரை பண்ணிப் பாருங்க நண்பர்களே முக்கியமா மைக்ரேன் மெம்பர்ஸ்.   

--

என்னுடைய காமினி தொடர்கதைகளுக்கும், போன இடுகைக்கும் பின்னூட்டமிட்டு வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் 

நன்றி 

நன்றி

நன்றி. :))  
  
.

ஆத்தா நான் இடுகை போட்டுட்டேன்..

என் தந்தையின் உடல் நலம் குறித்து விசாரித்த, அன்பைப் பகிர்ந்துகொண்ட நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. இப்பொழுது அவர் பூரண நலம். 

டபுள் செஞ்சுரி அடித்து நாட் அவுட்டாக ஆடிக்கொண்டிருக்கும் அனைத்து ஃபாலோயர்ஸ் நண்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றி! :))

நிறைய எழுத நினைக்கிறேன். ம்ஹும் முடியவில்லை (என்னது ரொம்ப சந்தோஷமா?). நிறைய நண்பர்களைச் சந்தித்ததையும் பகிர முடியவில்லை. ப்ரியமுடன் வசந்த் அன்பளிப்பளித்த கருவாச்சிகாவியம் ஒரு அமைதியான வாசிப்புக்காக அலமாரியில் நின்றுகொண்டிருக்கிறது. செ.சரவணக்குமாருடன் மதிய நேரம் சாப்பிட்ட மொச்சைக்கொட்டை ஐஸ்க்ரீம், அருகிலிருந்தும் ஜமாலுடன் அவ்வப்போது போனில் மட்டுமே பேச முடிகிறது. சிங்கை சிங்கம் பிரபாகரை, வானம்பாடிகள் சார் அலுவலகத்தில் சந்தித்து சிறிது நேரமே பேச முடிந்தது (மனிதர் சிங்கையிலிருந்து என்னிடம் போனில் பேசியதை விட குறைவான நேரம் (என்ன கொடுமை SP இது?:-) அரும்பாடுபட்டு அண்ணன் நைஜீரியா சிங்கம் ராகவன் அவர்களுடன் ஒரு மதியம் கழித்தது மனது நிரம்பிய மகிழ்ச்சியாக இருந்தது. (என்னா யூத்து? என்னா ஸ்பீச்சு? பத்திரமா ஊருக்கு போயிட்டீங்களா தல? ) மேலும் போனில் பேசிய காமிக்ஸ் லவ்வர் கிங் விஸ்வா என பார்த்த கணத்தில் சட்டென நெருக்கம் காட்டும் பதிவுலக நண்பர்கள் எனக்கு’ம் கொடுப்பினை. :-)

’ஹலோ’

’பட்டறை ஓனர் சங்கருங்களா?’

’ஆஅ மாங்க!’

’பட்டறை ஃப்ரீயா? ஒரு திருப்பாச்சி அருவா செய்யோனும், எப்ப வரட்டும்?’

(ஆஹா ப்ளேன் பிடிச்சி வந்து ப்ளான் பண்றாங்களே!!!)

என்று போனில் நேற்று என்னைக் கலாய்த்ததும் ஒரு பிரபல பதிவர்தான் :) அவரைச் சந்தித்ததும் சுவாரஸ்யங்கள் பகிர்கிறேன்.     


---------------

’சார்’

’சொல்லுங்க’

’ஊர்ல திருவிழா. ஒவ்வொரு வீட்டுக்கும் 350 ரூவா கலெக்‌ஷன். டியூப் லைட், சீரியல் லைட்டு அப்புறம் கோவிலுக்கும் ஒரு பங்கு போயிடும்.’

’சரிங்க தர்றேன்...’

இப்படித்தான் ஊரில் ஆடிமாதம் திருவிழா ஆரம்பித்தது. ரொம்ப நாளாச்சு. திருவிழா எல்லாம் பார்த்து. திடீர் கடைவீதிகள். ஊரெங்கும் ஒவ்வொரு வர் வீட்டிலும் உறவினர் கூட்டம். கூழ் ஊற்றி, கிடாவெட்டி, கோழி அறுத்து, 15 அடிக்கு ஒரு ஸ்பீக்கர் கட்டி தெருவுக்கு ஒரு சினிமாப் பாட்டு போட்டு அதகளம் பண்ணிவிட்டார்கள். வேல் குத்தி, உடலில் கொக்கிகள் மாட்டி வித விதமான வாகனங்கள் இழுத்தும் / தொங்கிக் கொண்டும் நேர்த்திக் கடன் செலுத்திய விதம் குத்தாதவர்களுக்கு வலியும் குத்தியவர்களுக்கும்/ குத்திக்கொண்டவர்களுக்கும் ’சக்தி’யையும் தந்தது.

சாமி ஊர்வலம் வரும் தெருக்கள் சுத்தம் செய்யப்பட்டன. கிளை விரித்த மரங்கள் சிறிது கழிக்கப் பட்டன. (குடித்துவிட்டு சாமி ஊர்வலமே வராத தெருவில் நன்றாக வளர்ந்த மரத்தை வெட்டிப்போட்ட பஞ்சாயத்து தனிங்கோவ்!) கொக்கி போட்ட சீரியல் மற்றும் டியூப் லைட்டுகளால் மின் அழுத்தம் 120க்கும் கீழே சென்றது கூடவே எல்லா விளக்குகளும் மினுமினுக்கிக்கொண்டிருந்தன.   

ஆனால் முன்புபோல் மக்களால் இது போன்ற திருவிழாக்கள் குதூகலமாய் கொண்டாடப் படுகிறதா என்ற கேள்வி எழாமல் இல்லை. பல புறக்காரணிகள் இருக்கலாம். மக்களின் ஆர்வம் திசை திரும்பி இருக்கலாம். இள வட்டங்களின் ஆர்வங்கள் திசை திரும்பியிருக்கலாம். நான் பேசியவரையில் பல லட்சங்கள் வெறும் சீரியல் லைட்டிற்காகவும், சவுண்ட் சர்வீஸிர்க்காகவுமே செலவழிக்கப் பட்டிருந்தது. 

ஒரு கவுரவ அடையாளமாக யார் சவுண்ட் அதிகம்? யார் சீரியல் கட்டவுட் அழகு? என்பது ஒரு போட்டியாகவும் அதற்கு முதல், இரண்டாவது, மூன்றாவது பரிசுகளும் இருப்பதாய் அறிந்து கொண்டேன். 

கோவிலும் பொலிவாக்கப் பட்டிருந்தது. ஆனாலும் எனக்கு புரியாத ஒரே விஷயம். இந்த திருவிழா செலவில் ஒரு பகுதி முறையாக செயல் படுத்தப் பட்டு அடிப்படை வசதிகள் கிராமத்திற்காக ஏன் செய்ய யாருமே முன் வரவில்லை என்பதுதான். தெரு மற்றும் சாலை வசதிகள், கழிப்பிடம் , கழிவு நீர் வசதிகள், அடிப்படை மருத்துவ வசதி, பொது சுகாதாரம், போக்குவரத்து வசதி,  இன்ன பிற போன்றவைகள் தேவையில்லை என்பது பழகிவிட்டதா? அல்லது பகுத்தறியும்/பகுத்தறியா சாமிகள் வரம் தரும் என்று காத்துக்கிடக்கிறார்களோ புரியவில்லை!


என்னமோ போடா மாதவா! (நன்றி முகிலன்!) 


கலர் டீவி பார்த்தால்
பொது அறிவு வளரும் என்ற
உச்ச நீதிமன்றத்தின் கருத்தறியாத
அண்டைவீட்டுக் கிழவி ஆடுகளைக்
கொட்டிலிலடைத்துவிட்டு
அவசரமாக பழையசோற்றுச் சட்டியுடன்
கிளம்பினாள்..
நூறு நாள் வேலைக்கு 
தள்ளுபடிச் சம்பளம் வாங்க..!





.

வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது???



ஒரு இனத்தை அழிக்க போர் தொடுக்க வேண்டியதில்லை. பதிலாக ஒரு டிவி பொட்டியும் சரக்கு புட்டியும் கிடைக்குமாறு பார்த்துக்கொண்டால் போதும் போல!!

ஆமாம் அப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது. தமிழகத்தின் முதன்மையான ஒரு சானல் காலை முதல் இரவு வரை மக்களுக்கு உபயோகமே இல்லாத குடும்ப வாழ்க்கையை சிதைக்கும், மனித மனங்களில் நஞ்சை விதைக்கும் கேவலமான மெகா தொடர்களை வாரி வழங்கிக் கொண்டே இருக்கிறது. இலவச தொலைக்காட்சி புண்ணியத்தில் இப்பொழுது பட்டி தொட்டி எங்கும் இதனைப் பரப்பும் (தொலைக்காட்சி பார்த்தால் பொது அறிவு வளருமாம்!) பகுத்தறிவு வேலையும் செவ்வனே நடக்கிறது. விளிம்பு நிலை மனிதரிலிருந்து மேல் தட்டு மக்கள் வரை இம்மாதிரி ஊடகங்களால் பரப்பப்படும் அபத்தக்கதைகள் மூலம் மனச்சிதைவு அடையும் மக்கள் ஏராளம்.

இவர்களால் தீண்டாமையையோ, கடவுள் மறுப்பையோ, இயற்கை வேளாண்மையையோ, ஹிந்தி எதிர்ப்பையையோ, தமிழ் மொழியின் சிறப்பையோ, சுய வேலை வாய்ப்புகளுக்கான வழிமுறைகளையோ, நுகர்வோர் உரிமைகளையோ, நகைச்சுவையையோ நிகழ்ச்சியாகக் காண்பிக்க முடியாது. ஏனென்றால் இவற்றிற்கு டிஆர்பி கிடைக்காது. எனில் இதெல்லாம் மக்கள் விரும்பவில்லை என்று அவர்களே ஒத்துக்கொள்கிறார்கள். (கொள்கை வேறு, டிஆர்பி வேறு ஹி ஹி)

கள்ளக்காதல், குடும்ப குழப்பங்கள், திருட்டு, கொலை, சூழ்ச்சி, அடிதடி, குடிக்கும் காட்சிகள், ரவுடியிசம், பழிவாங்கும் படலம், மர்ம மாந்த்ரீகம் மற்றும் இதர புண்ணாக்குகள். சுபம்! இதற்குத்தான் டிஆர்பி ரேட்டிங்குகள் உச்சம். முதன்மையான சானல். உலகெங்கிலுமுள்ள தமிழர்களுக்காக இவர்கள் செய்யும் சேவைக்கான பரிசு டிஆர்பியில் முதலிடம்!! (என்னது நியூஸா? அடப் போங்க பாஸ் :-) )

அடுத்தது டாஸ்மாக். கோவிலில் கூடும் கூட்டம் கண்டு பொங்கி எழுந்தவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. இங்கே அதை விட கூட்டம் பொங்கி வழிந்து வாந்தி எடுத்து வாசனை பரப்பிக்கொண்டு இருக்கிறது. இப்பொழுது நான் வசிக்கும் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் பாழடைந்து கிடக்கிறது. நூலகம் என்ற ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. ஆனால், ஊருக்குள் நுழையும் வாயிலிலேயே ஒன்றுக்கு இரண்டாக கடைகள். இது இங்கு மட்டுமல்ல மிகவும் ஒதுக்குப்புறமான கிராமங்களில் கூட நுழை வாயிலிலேயே சாராயக் கடைகள்தாம் நம்மை வரவேற்கின்றன. என்னே மகேசன் தொண்டு!

புறநகர், கிராமங்களில் கிடைக்கும் குழந்தைகளுக்கான தின்பண்டங்கள் தரம் குறித்து யாரும் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. மிட்டாய்களில் எந்த கம்பெனி பெயரும் இல்லை, எழுத்துக்கள் மாற்றி பிரபலமான நிறுவனங்கள் பெயரில் வரும் பிஸ்கெட்டுகள், கலப்பட பொருட்கள் என்று பரிதாபமாக இருக்கிறது. போதாதகுறைக்கு போலி மருத்துவர்கள். அது சரி போலி பண்டங்கள் தின்னும் மனிதர்களுக்கு போலி மருத்துவர்கள் போதுமென்று விட்டுவிட்டார்கள் போல. முள்ளை முள்ளாலே எடுப்பதுபோல போலியை போலியை விட்டே எடுக்கலாம். ஜெய் ஜக்கம்மா.

இது என்னமாதிரியான கலாச்சாரம் என்பது எனக்குப் புரியவில்லை. தமிழினம் என்று புளங்காங்கிதம் அடைபவர்கள் இம்மாதிரி குடித்து, சீரழிக்கும் கதைகள் கேட்டு இந்த இனம் இன்னும் தழைக்கும் என்று எண்ணுகிறார்களா?

தெரிந்தவர்கள் யாராவது பதில் சொல்லுங்களேன்!


மைக் டெஸ்டிங்:

ஒன்று::

சரி விடுங்க. சோற்றால் அடித்த பிண்டம் என்று இனியும் சொல்ல முடியுமா? சோற்றைத் தாண்டி இப்பொழுது நிறைய விஷயங்களில் அடிக்க ஆரம்பித்தாயிற்று. அழிக்கும் வரை போர் தொடரும்.

இரண்டு::

ஏம்ப்பா உத்தமரே உனக்கு பிடிக்கலைன்னா உன்ன யாரு பாக்கச்சொன்னது? என்று கேட்கும் நண்பர்களுக்கு, நீங்கள் போராடும் எல்லா காரணத்துக்கும் இந்த பதில் பொருந்தும்தானே?.    

மூன்று::

அமெரிக்கா அரிசியை ஐம்பது காசுக்கு ரேஷனில் கொடுத்த தானைத் தலைவரை மீண்டும் முதல்வராக்குங்கள் என்ற கோஷம் விரைவில் கேட்கக்கூடும்.
(வயல்மேல் வீடு கட்ட நாங்கள் ரெடி. அமெரிக்க அரிசி தின்ன ஆர் யூ ரெடி?? )


.

கூடு..



ஒருவழியாய் வீடு கட்டி 2-ம் தேதி குடி வந்தாயிற்று. கிராமம் சார்ந்த வாழ்வு நன்றாகத்தான் இருக்கிறது. இரவில் நிசப்தமாக குழந்தைகளுக்கு நட்சத்திரங்களைக் காண்பித்து.. அங்க போகறதுக்கு எவ்ளோ கிலோமீட்டர்ப்பா? என்று கேட்ட மகனிடம் எனக்குத் தெரிந்த லைட் இயர் கணக்கை சொல்லி புரியவைக்க முயன்றேன்.

வயல்களில் நாற்று நடுவதையும், பக்கத்து வீட்டு ஆட்டுகுட்டிகளையும், கொத்திக் கிளறும் கோழிகளையும் பார்த்து குதூகளிக்கின்றன பிள்ளைகள். நானும் என் சிறு வயதை இப்படி கழித்தவன்தான். பள்ளிப் படிப்போடு வாழ்க்கைக்கான Survival of the Fittest சூத்திரங்களை மெதுவாய் கற்றுக் கொடுத்துவிடலாம் என்ற தைரியமும், என்னை என் தந்தை சுதந்திரமாய் வளர்த்த பரிசை நானும் என் குழந்தைகளுக்குத் தர விரும்புகிறேன். வீடு மாற்றியது, பிள்ளைகளின் பள்ளி மாற்றல், பணிச்சுமை போன்ற காரணங்களும், இணைய இணைப்பு துண்டிப்பு, மாற்றலுக்கான காலதாமதம் ஆகியவை என்னை வலை உலகத்திலிருந்து முற்றாக துண்டித்தது.

கிடைத்த சந்தர்ப்பத்தில் படித்தவை பற்றி எதுவுமே சொல்ல முடியாத அளவுக்கு நொந்துபோனேன். நல்ல மதிப்பான நட்புகளைத் தவிர்த்து வேறொன்றும் பெரியதாக எண்ணமுடியாத இந்த வலை உலகில் எனக்கென கிடைத்த நட்புகளை மதிக்கிறேன். சமீபத்திய பதிவர் சந்திப்பும், அதற்கு முன் சந்தித்த பலரின் அன்பான நட்புகளைத் தாண்டி வேறெதுவும் கண்களுக்கு தெரியவில்லை. வலை உலகம் தவிர்த்து வேறெதிலும் இது சாத்தியமும் இல்லை.

எல்லா நண்பர்களுக்கும் என் நன்றியும், வந்தனமும்.

--

மீண்டும் முதல் வரிக்கு வருகிறேன். வீடு கட்டுவது என்பது அத்தனை எளிதாக இல்லை. பட்ஜெட்டை விட செலவு திமிறிக்கொண்டு போகிறது. ஆனாலும் சொந்த வீடு என்பது விவரிக்க முடியாத மகிழ்ச்சியைத் தருகிறது. ஏற்கனவே பகிர்ந்தபடி முன் பக்கம் தோட்டம் அமைக்க வேண்டும். நல்ல மரங்கள் நடவேண்டும், பறவைகளுக்கான வசிப்பிடமும்/குடிக்க நீரும் அதில் இருக்கவேண்டும். வேலைகள் இருக்கிறது நிறைய. போகப்போகும் தூரமும் அதிகம். நேரமோ குறைவு. பார்க்கலாம் பிறிதொரு நாளில் இதனைப் படிக்கும்போது என்ன கிழித்தேன் என்பது தெரியவரும். சிரிப்பேனா? சிந்திப்பேனா? அழுவேனா? தெரியாது. ஆனால் இப்பொழுது மவுனமாய் இருக்கிறேன். எனக்கென்று சொந்த முகவரி தாங்கிய என் வீட்டில் அடுத்தமாதம் வாடகை தரவேண்டுமே என்ற கவலை மட்டுமே தற்பொழுதைக்கு இல்லை:-)

--

நிழல் வளர்த்து நீண்டு
அடுத்த வீட்டின் மதில் தாண்டிய
வேப்பமரம் என்றேனும் எங்களுக்குள்
வரும் பகையில்
முதல் பலியாகக்கூடும்!




.

கூடு..



ஒருவழியாய் வீடு கட்டி 2-ம் தேதி குடி வந்தாயிற்று. கிராமம் சார்ந்த வாழ்வு நன்றாகத்தான் இருக்கிறது. இரவில் நிசப்தமாக குழந்தைகளுக்கு நட்சத்திரங்களைக் காண்பித்து.. அங்க போகறதுக்கு எவ்ளோ கிலோமீட்டர்ப்பா? என்று கேட்ட மகனிடம் எனக்குத் தெரிந்த லைட் இயர் கணக்கை சொல்லி புரியவைக்க முயன்றேன்.

வயல்களில் நாற்று நடுவதையும், பக்கத்து வீட்டு ஆட்டுகுட்டிகளையும், கொத்திக் கிளறும் கோழிகளையும் பார்த்து குதூகளிக்கின்றன பிள்ளைகள். நானும் என் சிறு வயதை இப்படி கழித்தவன்தான். பள்ளிப் படிப்போடு வாழ்க்கைக்கான Survival of the Fittest சூத்திரங்களை மெதுவாய் கற்றுக் கொடுத்துவிடலாம் என்ற தைரியமும், என்னை என் தந்தை சுதந்திரமாய் வளர்த்த பரிசை நானும் என் குழந்தைகளுக்குத் தர விரும்புகிறேன். வீடு மாற்றியது, பிள்ளைகளின் பள்ளி மாற்றல், பணிச்சுமை போன்ற காரணங்களும், இணைய இணைப்பு துண்டிப்பு, மாற்றலுக்கான காலதாமதம் ஆகியவை என்னை வலை உலகத்திலிருந்து முற்றாக துண்டித்தது.

கிடைத்த சந்தர்ப்பத்தில் படித்தவை பற்றி எதுவுமே சொல்ல முடியாத அளவுக்கு நொந்துபோனேன். நல்ல மதிப்பான நட்புகளைத் தவிர்த்து வேறொன்றும் பெரியதாக எண்ணமுடியாத இந்த வலை உலகில் எனக்கென கிடைத்த நட்புகளை மதிக்கிறேன். சமீபத்திய பதிவர் சந்திப்பும், அதற்கு முன் சந்தித்த பலரின் அன்பான நட்புகளைத் தாண்டி வேறெதுவும் கண்களுக்கு தெரியவில்லை. வலை உலகம் தவிர்த்து வேறெதிலும் இது சாத்தியமும் இல்லை.

எல்லா நண்பர்களுக்கும் என் நன்றியும், வந்தனமும்.

--

மீண்டும் முதல் வரிக்கு வருகிறேன். வீடு கட்டுவது என்பது அத்தனை எளிதாக இல்லை. பட்ஜெட்டை விட செலவு திமிறிக்கொண்டு போகிறது. ஆனாலும் சொந்த வீடு என்பது விவரிக்க முடியாத மகிழ்ச்சியைத் தருகிறது. ஏற்கனவே பகிர்ந்தபடி முன் பக்கம் தோட்டம் அமைக்க வேண்டும். நல்ல மரங்கள் நடவேண்டும், பறவைகளுக்கான வசிப்பிடமும்/குடிக்க நீரும் அதில் இருக்கவேண்டும். வேலைகள் இருக்கிறது நிறைய. போகப்போகும் தூரமும் அதிகம். நேரமோ குறைவு. பார்க்கலாம் பிறிதொரு நாளில் இதனைப் படிக்கும்போது என்ன கிழித்தேன் என்பது தெரியவரும். சிரிப்பேனா? சிந்திப்பேனா? அழுவேனா? தெரியாது. ஆனால் இப்பொழுது மவுனமாய் இருக்கிறேன். எனக்கென்று சொந்த முகவரி தாங்கிய என் வீட்டில் அடுத்தமாதம் வாடகை தரவேண்டுமே என்ற கவலை மட்டுமே தற்பொழுதைக்கு இல்லை:-)

--

நிழல் வளர்த்து நீண்டு
அடுத்த வீட்டின் மதில் தாண்டிய
வேப்பமரம் என்றேனும் எங்களுக்குள்
வரும் பகையில்
முதல் பலியாகக்கூடும்!




.

வலை வனம் (150 ஆவது பதிவு)





முகங்களால், எழுத்துக்களால், குரல்களால் இந்த வனம் முழுவதும் என் மேல் பூச்சொறிந்த அனைவரையும் நினைத்துப்பார்க்கிறேன். இதென்ன கணக்கு?? என்று என்னையே நான் கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு புள்ளியிலிருந்து மறு புள்ளி என்றுதான் நம்மால் யோசனை செய்ய முடிகிறது. ஒன்றுமில்லாததிலிருந்து ஒன்று என்று ஆரம்பித்து நூற்று ஐம்பதாக இது நிற்கிறது. இது போன்ற கணக்குகள் எல்லாமே வேடிக்கையாகவும் தோன்றுகிறது. மனித இனமென்ற ஒன்று இல்லையென்றால் இங்கு நிகழ் காலம், இறந்த காலம், எதிர்காலமென்றெல்லாம் எதுவுமில்லாது அது அது அதனதன் வாழ்வில் சிறப்பாய் வாழ்ந்துகொண்டிருந்திருக்கும். நாம் தான் பெயர், ஒலிக்குறிப்பு, எண்ணிக்கை., வகைப்படுத்துதல் துவங்கி அவைகளின் அனுமதி இன்றி காப்புரிமை வரை சென்றுவிட்டோம்.:)

போகட்டும். இன்னதுதான் என்றில்லாது எழுதத் துவங்கியதின் விளைவு, வெயிலிலாலா, வெண்ணையிலாலா என்றறியாது எங்கெங்கோ பயணப்படுகிறது. இதுவரை சகித்துக்கொண்டு இனியும் சகிக்கப்போகும் நட்புகளுக்கு மிக்க நன்றி.:)

எத்தனையோ கவனமாயிருந்தும், உரிமையின்பால் கொண்ட அன்(ம்)பு பாய்ந்து என்னாலும் சில கீறல்கள் விழுந்தது, மீண்டும் புரிந்து கொண்டு அரவணைத்த நட்புகளுக்கு என் நன்றி! (மேலுள்ள படம் என்னைக்குறிப்பதேயன்றி வேறல்ல.:)


---

தெள த ஜிங் - ஞானமும் நல் வாழ்க்கையும் என்ற புத்தகத்திலிருந்து::

முப்பது ஆரங்கள் ஒரு கும்பம்
இவையே ஒரு சக்கரம்
என்றாலும்
எதுவுமற்ற கும்பத்தின் துளைப்பற்றியதே
சக்கரத்தின் பயன்பாடு
மண்ணில் வனைந்த பானையில்
ஏதுமில்லாத வெற்றிடம் பற்றியதே
பானையின் பயன்பாடு
சுவரில் சுவரில்லாததே சன்னலும் கதவும்.
சுவர்கள் கரையிட்ட வெற்றிடம் பற்றியதே
அறையில் பயன்பாடு.

எனவே
இருப்பது உளதாக்குகிறதெனில்
இல்லாதது பயன்பாடாகிறது.


- கண்ணதாசன் பதிப்பகம். விலை.ரூ.30/-


நன்றி!

அன்புடன் - ஷங்கர்.

---



.

வெண்ணை (0.07) (கூடு தாவல்)




ன்ன செய்யப்போகிறேன்? என்ற கேள்வி எழும்போதெல்லாம் அன்றைய தேவைக்கான இரை என் கண்முன்னே விழும் அல்லது நானே அதனை தேர்ந்தெடுத்துக் கொள்வேன். இதுதான் செய்ய வேண்டும் என்ற ஏற்பாடுகளின்றி, வருவதை வரவில்வைக்கும் வித்தை குரூரமாயினும் எனக்கு ஏற்புடையதாயிருப்பதற்கு காரணம், எனக்கும் துணை உண்டு,  நினைவுகளின் தாக்கத்தில் அனுபவித்து சுகித்தலில் பிறந்த குழந்தையும், குடித்து புத்தியின் தெளிவுகளற்ற மோன மிதப்பின் கூடலில் பிறந்ததும், சிறந்த வேட்டையின் இரை கண்ட களிப்பில் அவளே வந்து சுகித்ததில் பிறந்ததுமாய் என் வேட்டைகளுக்கு முடிவே இல்லாத பசி கொண்ட குஞ்சுகள் கொண்ட கூடு தினமும் இரை தேட வைக்கும். தவறு, சரி என்பது தாண்டி தின வாழ்வும் வெறுமையான எதிர்காலமும் நல்லவை, கடவுள், அடுத்தவன் துயரம் என்பதை நான் யோசிப்பதே இல்லை. என் வாழ்வு எனக்கு முக்கியம். அதில் அடுத்தவன் வாழ்வு நாசமாய்ப் போவதை நான் நினைப்பதில்லை, அல்லது கண்டும் காணாமல் போகிறேன்.

---

துதான் செய்யவேண்டும் என்ற முன்னேற்பாடுகளில் எப்போதுமே எனக்கு நம்பிக்கை உண்டு. அடுத்த நொடிகள் நம்மால் நிச்சயிக்கப் படுவதில்லை என்பது உண்மையே எனினும் அடுத்த நொடி முன்னே கால் வைக்கவேண்டும் என்ற தீர்மானமே உடல் தூக்கி நடப்பதற்கு சாத்தியப்படுத்துகிறது. திருமண பந்தமும், என்னை நம்பி வந்த துணைக்காய் வேண்டிய சம்பாத்தியங்கள், நானும் அவளும் சந்தோஷித்த கூட்டில் எங்களுக்குப் பின் எங்கள் பிள்ளைகள் இன்புற்று இருக்க வேண்டிய செல்வ தேடலில் எப்போதும் என் வம்ச வழியில் கற்றுணர்த்தப்பட்ட அளவுகளிலேயே நான் பயணப்படுகிறேன். ஒரு போதும் அடுத்தவருக்கு தீங்கு நேராவண்ணமே என்னுடைய பாதைகளில் என்னுடைய கனிகளை நான் சேகரிக்கிறேன். சோற்றுக்கு வழி இல்லை என்றாலும் ஒரு வாய் தண்ணீர் கொண்டு வயிறு நிறைக்க மனம் விழைகிறதே அன்றி, களவும், சூதும், சூழ்ச்சிகளும் எப்போதும் என்னை அடிமைப்படுத்த நான் விடுவதே இல்லை. வாய்ப்புகள் வரும்போதும் தவறு செய்யும் சந்தர்ப்பங்களை நான் கடந்தே போகிறேன் அல்லது காணவில்லை என்றே போகிறேன்.

---

துதான் செய்யவேண்டும் என்ற போதனைகள் என்னை ஈர்த்ததின் காரணமே, இப்படித்தான் வாழ்ந்தேன் என்ற என் முன்னோர்களின் வாழ்கை, குரு என்றழைக்கப்படும் இந்த கூட்டின் முன்னாள் பறவைகள் என்ன உண்டனர்? என்ன ஜீரணித்தது? என்ன வெளிவந்தது? என்ற பதிவுகள் விலங்குகள் போல் சுகித்து இரை தேடி மாளும் இப்பிறப்பின் பால் என்னை அன்னப்பறவையாக்கி நல்லவை அல்லவை பிரிக்கக்கற்றுக் கொடுத்தது. மனமும், மூளையும், உயிரின் இருப்பும் உள்ளே எங்கே? வெளியே எங்கே என்ற தேடலில் உடலில் புறத்தீண்டல் தேவையற்று அகத்தீண்டல் முக்கியமாய்ப் பட்டது. ஒருமுகத்தில் அமிழ்ந்து ஒரு முகத்தில் காண்பது பல முகம் என்ற தெளிவில், குடும்பம், கூடு, கூடி, தேடி, களைத்து நாடி வரும் பிறவிகளைக் காணும்போது, எண்ணங்கள் சலவை செய்து அழுக்குகள் நுரைத்துப்போன போதும் கண்டும் காணாமலே பிறவி கடத்துகிறேன்.

---

துதான் செய்யவேண்டும் என்பதற்கு இதுதான் செய்யப்போகிறோம் என்ற தெளிவின் பால் நம்மீதே நம்பிக்கை கொண்டு வாழ்தல் அவசியம். பிறப்பும், இறப்பும் ஒன்றாய் பயணம் செய்யும் இந்த ஒன்பது ஓட்டை உடல் படகில், பகுத்து அறிந்து செய்யும் செயல் பாவ நட்டக்கணக்கினை கிழித்துப்போட்டு சக மனிதன், எனது உயிர்ச் சமூகம், அதன் முன்னேற்றம், அதற்கான வழிமுறைகள் என்ற அளவிலேயே எண்ணங்கள் விதைத்து, எல்லோருக்குமான இன்பங்களின் பொது விதி வகுத்து, அடிமைத்தனமகற்றி, என் குடும்பம், அதன் முன்னேற்றம் சமூகம் சார்ந்ததாயும், சுதந்திர எண்ணங்களின் வித்தில் தின வாழ்வு, ஏற்றத்தாழ்வின்மை, சக மனிதருக்குதவி என்ற வகையில் என் வாழ்வின் ஒவ்வொரு நாளிலும், இதன் பிரக்ஞையற்ற மக்கள், வழிபாடுகளிலும், கள்ளத்தனங்களிலும் நேரம் கடத்தி புத்திக்கழுவிலேற்றிய எண்ணங்களின் எச்சங்கள் பாதை எங்கும் கிடைப்பினும், மாறும் என்ற நினைப்பில் நானும் நகர்கிறேன்.                

---

உனக்குச்சரியெனப்பட்டதும்
அடுத்தவனுக்குத்தவறெனப்பட்டதும்
எவனோ ஒருவனின் ஞான போதனைகளும்
மார்பிலடித்த அழுகைகளும்
வயிறு பிடித்த சிரிப்புகளும்
தலை நிமிர்ந்த வெற்றிகளும்
தரை பார்த்த தோல்விகளும்
இன்னும்.. இன்னும்.. எல்லாமே
காணும்போதே..


இறக்கும் காலமே.




.

வெண்ணை.. (0.04) மனித விலங்கின் சூத்திரங்கள்..



வ்வொரு மிருகத்துக்கும், பறவைக்கும் அதன் ஒலிகளே தொடர்புகொள்ளும் கருவியாக இருக்கிறது. கிடைக்கும் சுள்ளிகளைக்கொண்டு கூடு கட்டியோ, குகைகளில் பதுங்கியோ, தண்ணீரிலோ அவையும் வாழ்க்கை நகர்த்துகிறது.

என்ன பெரிய தேவை? உணவு, தண்ணீர், அச்சமில்லாது உறங்க ஓரிடம். நிம்மதியாய் கலவி, பின் சந்ததி வளர்க்க வந்த வாரிசுகளுக்கு சூழலின் அபாயங்கள் புரியவைக்கவும், உணவுக்கான போராட்ட முறைகள் தெரிய வைக்கவும் சில பயிற்சிகள். குட்டிகள் வளரும் வரை காபந்து. அதன் பின் அதனதன் வழி, அதனதன் வாழ்வு, அதனதன் போராட்டம்.

இதன் நடுவில்தான் ஆறறிவு கிளை பிரிந்து, அபத்தங்களைக் கட்டி அழத்தொடங்கியதோ?

குழந்தை பெற்று, பாலூட்டி சீராட்டி, வித்தைகள் கற்றுத்தந்து, அன்பினாலே விலங்கிட்டு, அதனூடே வாழ்வு நகர்த்தி, சாமர்த்தியங்கள் முதலீட்டில் ஒரு தனி உயிரின் பரிபூரண வாழ்வு சிதைக்கப்படுகிறதோ?

ஒரு விலங்கிற்கான வாழ்வு முறை சுதந்திரம் மனிதனுகில்லாமல் சார்புடையவனாக, எதையாவது பின்பற்றுபவனாக, பின்பற்றச்சொல்லுபவனாக ஏன் மாறிப்போனான்?

அதிகாரங்கள் யார் தந்தது? எல்லா தர்க்கங்களிலும் தன்னையே முன்னிருத்தி தனக்கானதே இவ்வுலகென்றும், மற்றெல்லா உயிரினமும் தன்னாலே பிழைக்கிறதென்றுமான தத்துவம் உயிர்பெற்றதெப்போது? வெறும் ஒலிகளை ஒழுங்கு படுத்தி வடிவங்கள் தந்த ஆணவமா?

ஒரு பறவைக்கோ, விலங்கினத்திற்கோ தெரிந்த குழந்தை வளர்ப்பும், அவை கற்றுத்தரும் வாழ்வு எதிர்நோக்கும் பாடங்கள் அளவுக்கு நாம் அறிந்து வைத்திருக்கிறோமா? அவைகள் அளவுக்கு சுய புத்தி உண்டா?

கூடலின் சுகம் மென்று, வலியுடன் குழந்தை ஈன்று, அன்புடன் அரவணைத்து, தனியே வாழ்வு சுவைத்துக்கொள் என்ற மற்ற உயிரினிங்களின் சுதந்திரத்தை மட்டும் எப்படி ஆறறிவு தவற விட்டது? எங்கே பிசகு? அதி மிகுந்த அன்பின் போதையா? சுயநலத்தின் சூழ்ச்சியா? வாழ்வுமுறை பயமா? பயமே அழிவிற்கான மூலதனமா? ஆளத்துடிக்கும் தூண்டுதலா?

சரி, தவறு என்ற நிகழ்வுகளின் தீர்ப்புகளில் உண்மையிலேயே அது சரிதான் அல்லது தவறுதான் என்று எதை முன் வைத்து முடிவுக்கு வருகிறோம்?      

எதுவரை போகும்? மனிதனைத்தவிர இறப்பினைப்பற்றி பயங்களும், யோசனைகளுமில்லாத உயிரினத்தில் மனித இனம் போகும் பயணம் எவ்வளவு தூரம் இன்னும் மிச்சமிருக்கிறது? மரணம் பற்றி பயம் கொள்ள வைப்பது எது?

--

பெயரில்லா கவிதை..


நிலவில்லாத இரவொன்றில்
காற்றினிலாடும்
மெழுகுவர்த்திச்சுடர்

மின் வெளிச்சம்
ஜடமாய்க் காட்டிய
பொருட்களுக்கும்
உயிர் தந்துவிடுகிறது...






.

வெண்ணை..(0.03) (டிங் டிங் டி டிங்)




லிஸன். இது முக்கியமான ஒரு ப்ரொஜக்ட். நம்ம கம்பெனிக்கு மிகப் பெரிய ப்ரெஸ்டீஜ் இஷ்யூன்னு, எம்.டி பர்சனல் கேர் எடுத்து, அதிக கவனம் வெச்சி செய்ய சொல்லி இருக்கார். ஏன்னு உங்களில் யாருக்காவது தெரியுமா??

பிகாஸ், நாம் எழுப்பும் இந்த கட்டிடம் 60 மாடிகளைக் கொண்டதாலா?

இல்லை நண்பர்களே. அதல்ல இங்கே பிரச்சனை, இது ஒரு கூட்டு முயற்சி என்பது உங்களுக்கு தெரியுமல்லவா?

யெஸ் சார். நமக்கு வரவேண்டிய ஆர்டர் இது. தனியே கட்டி பெயர் வாங்கி இருக்கவேண்டியது, கடைசியில் அந்த ஜப்பான் கம்பெனியும் போட்டிக்கு வந்துவிட்டது.

எக்ஸாட்லி மை பாய். எனி வே.. நாம் யார் என்பதை காண்பிப்போம்.

யெஸ் ஸார்..

--

வாட் தெ ஹெல்? என் மானத்த வாங்கறதுக்குன்னே எல்லாரும் அந்த ஜப்பான் கம்பெனிக்கு விலை போயிட்டீங்களா?

நோ பாஸ்.

பின்ன எப்படிய்யா கட்டிடம் சரிஞ்சிது? பெரிசா பேசினோமே? கட்டிடகலையில நாங்க 3000 வருஷ அனுபவசாலிங்கன்னு, இப்ப அந்த ஜப்பான்காரன் கட்டறான். கட்டி நிக்க வெச்சிட்டான்னு வைச்சிக்க. மானம் போய்டும்.

எனக்கென்னமோ நம்பிக்கை இல்லை சார். கீழ மொத்தம் லைம் ஸ்டோன், சாலிட் சாயில் இல்ல, நிறைய ஏர் பாக்கெட்ஸ். நாமளே மொதல்ல ஏமாந்துட்டோம், இப்ப விஷயம் தெரிஞ்சி அவன் கை வெக்கிறான், ஜப்பான் என்ஜினியர்களால முடியாது சார். ஐ பெட்.

அடப்போய்யா.. அவங்களப்பத்தி உனக்கு தெரியாது..

--

சார்.. குட் நியூஸ்.

வாட்.?

ஜப்பான் காரன் கட்டினதும் பணால்.

ஓ காட். அப்பறம். ?

ஹை லெவல் மீட்டிங் இன்னிக்கு ஈவினிங் நாலு மணிக்கு..

--

ஜெண்டில்மேன்.. இது ஒரு டிபிகல் சாயில். ஐ அக்ரீ. கொஞ்சம் கஷ்டமான வேலைதான். நம்மூருகாரங்களாச்சே முடிச்சிடுவீங்கன்னு நெனெச்சேன். பட். இது அவங்களுக்கும் ஒரு சவால்தான். நவ் இத கட்டி முடிக்க ஒரே சொல்யூஷன்தான் இருக்கு..அவங்க ஐ மீன் ஜப்பனீஸ் அதுக்கு ஒத்துக்கிட்டாங்க, இனி ஈகோ இல்லாம நீங்க ஓக்கே சொன்னா வி வில் வின் டுகெதர். என்ன சொல்றீங்க.?

நோ ப்ராப்ளம் சார். ஆனா என்ன அந்த வழி.?

சிம்பிள். ஸ்ட்ரக்ச்சர் டிசைன்ல ரெண்டு பேருக்குமே வேற வேற எடத்துலதான் ஃபெய்லியர். உங்களுக்கு ஆன இடத்துல அவங்களுக்கு ஆகல, அதே மாதிரிதான் அவங்களுக்கும், ஸோ ரெண்டு பேருமே ஒண்ணா இணைஞ்சி இந்த ப்ரோஜக்ட் முடிச்சா நல்லது.

ம்ம்.. ஓகே சார், டீல். ப்ரோஜெக்ட் முடியனும், அது முக்கியம் ஆனா??

வாட்ஸ் யுவர் ப்ராப்ளம்? தட் நேம் ஆஃப் த பில்டிங்? ரைட்?

ஆமாம் சார் அதுல யார் பங்களிப்பு அதிகம் இருக்கோ அவங்க பரிந்துரைக்கிற பேர் கட்டிடத்துக்கு வைக்கறதாதானே அக்ரிமெண்ட்.

யா, பட் இப்ப மொதல்ல வேலை முடிப்போம், பங்களிப்பைப் பொறுத்து அதை தீர்மானிப்போம்.

--

ப்ளீஸ்.. சைலெண்ட். இது ஒரு நல்ல நேரம், மிகுந்த வேதனைகளுக்குப் பிறகு வேலை முடிந்த நேரம். ஒரு கட்டிடம் முழுமை பெற்ற நேரம், கொண்டாடுங்கள், ஏன் சர்ச்சை நண்பர்களே?

சார். நமது கொண்டாட்டங்களுக்கு முன் முக்கியமாய் செய்யவேண்டிய ஒன்று இந்த கட்டிடத்திற்கு பெயர் வைப்பது. அதனை முடிவு செய்துவிட்டு மற்றவைகள் பற்றி பேசலாம்..

ஓ யெஸ். நான் அதை மறந்து விட்டேன்.  நீங்கள் இரு நாட்டினரும் சேர்ந்து இந்த கட்டிடத்தை கட்டி முடித்ததாலும் இருவருமே ஒத்துப்போகிற ஒரு பெயரையே நான் பரிந்துரை செய்யலாமென்று இருக்கிறேன்.

வாட், தமிழும், ஜப்பானீஸும் கலந்தா? அதுவும் இப்படிப்பட்ட ஒரு கட்டிடத்திற்கா? எப்படி சார்??

முடியும். அதுவும் இந்த கட்டிடக் கதையைக் கேட்ட என் 5 வயது குழந்தை வைத்த பெயர் அது.

வாவ் என்ன பெயர் சார்..




































’நிக்கிமோ நிக்காதோ’

--

இது ஜேப்னீஸா?, ட்டாமிளா?    


டிங் டிங் டி டிங்..:)



முட்டாள்.. (The Idiot) - Akira Kurosawa..


எல்லோருக்கும் மரணம் வருமென்று அறிந்தும், அடுத்தவருக்கு நிகழும்போது மட்டும், துக்கம் கொண்டு, அழுகையுடன், நமக்கும் வருமென்ற யோசனைகளின்றி, கூடி நின்று அழும் மக்களுடன் ஒருவராய், இறந்தவரின் சந்தோஷ நினைவுகளை, துக்கத்துடன் அசை போட்டு, மீண்டும் ’வாழ்வு’ என்றழைக்கும் சூழ்ச்சிகளில் ’பின்னப்பட்ட’ இன்ப, துன்ப போதைகளில் மூழ்கிப்போவது பொதுவில் எல்லோருக்கும் வாய்ப்பதுதான்.

வெட்ட வெளியில், சூரிய வெளிச்சத்தில் வரிசையாய் மரண தண்டனைக்காய் அமர வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொருவருக்காய் துப்பாக்கிக் குண்டில் வாழ்வு முடித்து வைக்கப்படுகிறது. மரணம் கண்ணெதிரே காணக்கிடைக்கிறது வரிசையில் வந்துகொண்டிருக்கிறது.

இதுவரை வாழ்வில், துக்கம், சந்தோஷம், துரோகம், அன்பு, காமம், காதல், கருணை என எல்லாம் கண்ட அவனுக்கு, இதோ இன்னும் சில நிமிடத்தில், வரிசையில் மரணம் நிச்சயம் என்ற நிகழ்வுகளின் நிஜத்தில் மரணம் சம்பவிக்கப்போவதற்கு முன்பான மன நிலை என்ன சொல்லும்?

அது வாழ்வின் முழுமையை புரியவைக்கிறது. இது வரை வாழ்ந்த வாழ்வின் நீள அகலங்கள் கண்களுக்குள் வருகிறது. இறக்கப்போவது நிச்சயம் எனும்போது வாழ்ந்தது நிறைவுதானா? என்ற கேள்வி வருகிறது. தவறுகளுக்கான மன்னிப்புகள் எழுகிறது. இதுவரை வரிசையில் அவனுக்கு முன்பாக இருந்தவர்கள் சுடப்பட்டு பிரேதமாய் கிடக்க, அவன் முறை வரும்போது, வாழ்வுக்கும் சாவுக்குமான சங்கிலி பிணைக்கும் நேரத்தில், உத்தரவு வருகிறது. மரண தண்டனை ரத்து செய்யப்படுகிறது. ஆஹா தப்பித்தோம், சாவினின்று கடைசி நொடியில் விடுதலை, இனி என்ன? கொண்டாட்டமா? குடியா? போகமா? மரணம் நிறுத்தச்சொன்ன உத்தரவு சில நொடிகள் தாமதமாகி இருந்தாலும், மண்டை பிளந்து சரிந்து கிடக்கும் அந்த சவங்களில் அவனும் ஒருவனாகி இருக்கக்கூடும். இப்போது சாவினின்று விடுதலை என்ற எண்ணம் அவனுக்கு வாழ்வின் மீதான மதிப்பை அதிகமாக்குகிறது. நினைவுகளின்றி போதனைகளின்றி குழந்தையாய் பிறந்து மரணத்தை கண்டவன் இப்போது, விவரம் தெரிந்து மீண்டும் பிறந்ததாய் உணர்கிறான், இன்னொரு வாழ்வு இப்போது கிடைத்தது. ஒவ்வொரு நொடியும் அதனை ரசிக்க, அர்த்தமுள்ள அதை மதிக்க இயல்பாகவே அவன் மனம் மாறுதலடைகிறது.

விடுதலையாகி வெளி உலகிற்கு வரும் அவனை, மரணம் கண்ணெதிரே தினம்தோறும் நிகழ்ந்தும் தனக்கு வராது என்ற நம்பிக்கையில், சூழ்ச்சிகளை, துரோகங்களை, பகட்டுகளை, நடிப்புகளை, தேனாய் குடித்து அதன் இனிப்புகளின் மயக்கத்தில் வாழ்வு நடத்தும் மக்கள் என்னவாய் எதிர்கொள்வார்கள்?

அவன் வந்து சேரும் அந்த நகரின் பேரழகியின் படத்தைப் பார்க்கிறான். அருகிலுள்ளவனுக்கு அவளின் அழகு முகம் கிளர்ச்சியை உண்டாக்குகிறது, அவனுக்கோ அவள் கண்கள் மரணத்தை நோக்கியவையாக அல்லது அனுபவிப்பதாய் சொல்கிறது.

வாழ்வது என்பது உயிரோடிருத்தல் மட்டும்தானா? வெறுமனே உயிரோடிருத்தல் மட்டுமே வாழ்வு என்பதாய் கொள்ள முடியுமா? உணர்வுகள் இறந்து வாழும் ஒருவரை எப்படி வாழ்வதாய்க் கொள்ள முடியும்? தன் தேவைகளுக்காய், ஆசைகளுக்காய், இரவுகளின், தனிமையின், காமத்தின் வேட்டைகளுக்கு, வேட்க்கைகளுக்கு இரையாக்கப்பட்டு தினம் கொல்லப்படும் ஒருவரின் கண்கள் இறப்பின் வலிகளை தாங்கி இருப்பதில் வியப்பென்ன? அதனை நேரில் கண்ட நம் நாயகனால் அவ்வாறு வாழும் ஒரு அழகியின் முக அழகும் கவர்ச்சியும் எப்படி கவர முடியும்?

இப்படி வாழ்வினை அர்த்தமுள்ளதாய் வாழ நினைக்கும் ஒருவன், அவைகள் மறந்த கூட்டத்தில் என்னவாய் காணப்படுகிறான்? அவனை விரும்பும் பெண்கள், வெறுக்கும் மனிதர்கள், கேலி பேசும் கூட்டம், ஒரு கொலை என பயணம் செய்யும் படத்தில் மேலே சொன்னதுதான் கதையின் சாராம்சமா? வேறு என்ன அந்தப் படம் சொல்ல வருகிறது?

கடினமாய் சிதைந்து போன ஒரு பாறையை செதுக்கும் பணியே வாழ்வென்றால், அது சிலையாய் முழுமை பெற்று, பூரணத்துவம் அடைவதுதான் மரணமா? எனில் அதனை துக்கமாய்ப் பார்ப்பது ஏன்? செதுக்கப்படும் ஒவ்வொரு நொடியும் கொண்டாடப்பட வேண்டாமா?

அகிரா குரசாவாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிழக்கு பதிப்பக அலுவலகத்தின் மாடியில் நேற்று திரையிடப்பட்ட 'THE IDIOT' படத்தினை கண்டதும் வந்த எண்ணங்களே மேலுள்ளது. ஆனால் படம் இதைத்தான் சொல்கிறதா? இதன் உண்மையான களம் என்ன? திரு. சிவராமனின் சிதைவுகள் பக்கத்தில் வெளிவரும் என்று நம்புகிறேன். 1951 ல் எடுக்கப்பட்ட இந்த கருப்பு வெள்ளைப் படத்தின் காட்சி அமைப்புகள், படத்தொகுப்பு, இசை, பிரமிக்க வைக்கிறது. தஸ்தாவெஸ்கியின் உணர்ச்சிகள் கொப்பளிக்கும் எழுத்துக்களை அப்படியே திரை வடிவமாக்கி உணரச்செய்யும் விதம், ஏன் இன்னும் அகிரா குரசாவாவை கொண்டாடுகிறார்கள்? என்று புரிந்தது.    

படம் முடிந்த பின் திரு.ராஜசுந்தரராஜன் அவர்களின் விவரிப்பு அற்புதம். அதனைக் கேட்ட பிறகு இந்தப் படத்தைப் பற்றி நான் எழுத முடியுமா? என்ற எண்ணம் தோன்றியது உண்மை. ஆனாலும் படம் தந்த பாதிப்பை பதிவு செய்து, இறக்கி வைக்கவே இதனை எழுதினேன்.

நன்றி!