பலா பட்டறை: ஜெயமோகன்
Showing posts with label ஜெயமோகன். Show all posts
Showing posts with label ஜெயமோகன். Show all posts

காடு - ஜெயமோகன்!




முதலில் ரோமியோ தருவதாகச் சொல்லி அவரை சந்திக்க முடியாமல் சாறு சங்கர் அன்பளிப்பாகத் தந்தவுடன் சமீபத்தில் கோவை சென்றபோது நிதானமாகப் படித்த ஜெயமோகனின் 3வது நாவல். விஷ்ணுபுரம் 200 பக்கங்கள் நகர்த்தி அப்படியே நிற்கிறது.

சரி காடு பற்றி

ஏழாம் உலகத்திற்குப் பிறகு நான் விரைவாகப் படித்த ஒரு நாவல். பொருளீட்டுதலின் முதல் படி வெளியில் சென்று உலகை அறிந்துகொள்வது. நமக்கு எல்லோருக்கும் வாய்த்திருக்கும். அந்த மிரட்சியான பயமில்லாது நடித்த நாட்களை இன்று அசை போடவைத்தது இந்த நாவல். கதைக்கு எடுத்துக்கொண்ட களம் காடு. 


16 வயதில் நான் முதன் முதலில் 400 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்குச் சென்றபோது வெறும் பார்வையாளனாகவே இருந்தேன். என்னைச் சுற்றி என்ன நடக்கிறது. யார்வந்தால் எழுந்து நிற்கவேண்டும்? யாருடன் சிரித்துப் பேசலாம், யாருடன் தோளில் கை போட்டுப் பேசலாம் என்று நிறைய விஷயங்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ சொல்லித்தரப் பட்டது. எதைக் கண்டாலும் ஒரு ஆச்சர்யம். மெல்ல மெல்ல வித்தைகள் புரியும்போது ஒரு ஆளுமை வந்துவிடும். கிடைத்த சுதந்திரத்தை அழகாய் காப்பாற்றி முன்னுக்கும் வரலாம், அழிந்தும் போகலாம். 

வாழ்க்கையில் ஓர் ஆண்மகன் தன் சுய சம்பாத்தியத்திற்காக வெளியில் சென்று சேர்ந்த இடம் ஒரு காடு. முன் பின் அறியாத ஆச்சர்யங்கள் நிறைந்த இடம். ஆச்சர்யங்களை விழுங்கி ஏப்பம் விட்டவர்கள் சூழ இருக்கும்பொழுது அவன் காணப் போகின்ற கண்டவைகளை மிகைப் படுத்தி கேலி பேசி விவரிக்கும் பார்வையில் காடு அவனுக்கு பிரமிப்புகலந்த ஆச்சர்யமாகவே இருக்கிறது, அது அங்கே ஒரு பெண்ணைக் காணும் வரையில்.

தனிமை நிறைய விஷயங்களை கண்களுக்குக் காண்பிக்கும். கதையின் கதா நாயகனுக்கும் அப்படியே! சொல்லத் தவறிய காதல் விருப்பமில்லாத திருமணம், தோல்வியடைந்த வியாபாரம், மதிக்காத மனைவி, ஏமாற்றிய நண்பர்கள், விரும்பியவளின் பிரிவு. கண்ணெதிரே மாறிய அறிந்தவர்களின் வாழ்க்கை என்று வெறுமனே பார்வையாளனாகவே ஒருவனின் வாழ்வு நகர்வதென்பது காட்டில் ஆரம்பித்து அங்கேயே முடிகிறது. 

தான் பெற்ற மகனிடம் கூட தன் அனுபவத்தைப் பகிர முடியாத நிலையில் கதையின் நாயகன் மனதினுள்ளே குமுறுவதே இங்கே பெரும்பாலான தகப்பனின் தலைவிதியாக இருக்கிறது.     

கதையின் ஊடாக பல விஷயங்கள் சொல்லப்படுகிறது. இயற்கையை அழிக்கும் மனித வக்கிரம், ஒரு மிளாவின் கால் தடத்தின் மூலம் மனிதன் வகுக்கும் எல்லைகள் கேலிக்குள்ளாக்கப் படுவது, ஒரு தேவாங்கு ஒருவருக்கு உணவாகவும், மற்றொருவருக்கு குழந்தையாகவும் மாறும் விந்தை, தனிமை சூழ்ந்த அந்தக் காட்டின் மையப் பகுதியில் மேலாடையில்லாத நாகரீகமற்ற காட்டுவாசிப் பெண்ணின் வரம்பு மீறாத காதல், அதே தனிமையை கணவன் இல்லாத நேரத்தில் தன்ன்னுடைய பெருங்காமப் பசிக்கு வருபவரை இரையாகத் துடிக்கும் நாகரீகமான இஞ்சினியர் மனைவி. பயமகற்றி சூழலை விரைவாகக் கற்றுக்கொடுக்கும் காதல், உபத்திரம் செய்யாத கீறக்காதன் யானை,  என நீண்டுகொண்டே போகிறது.

மலையாள ஜாதிகளை, மதம் மாறிய கிறிஸ்தவரை கண்டமேனிக்கு விமர்சனம் செய்யும் வரிகள், காட்டில் வேலைக்கு வரும் பெண்கள் யாரோடும் படுக்கத் தயாராக இருப்பது போன்ற விஷயங்கள் ஏற்கனவே இந்தக் கதையின் விமர்சனங்களில் விவாதிக்கப் பட்டவைதான். குறிப்பாக நண்பர் கருந்தேள் ராஜேஷும், கார்த்திகேயனும் ஒவ்வொரு முறையும் இதனை மையப் படுத்தி தங்களுடைய கடுமையான ஆட்சேபனையைத் தெரிவித்து உள்ளார்கள். கதையும் அப்படியேதான் நகர்கிறது. ஆனால் பெரும்பாலான மலையாளிகளின் கேலிகள் இவ்வாறே இருக்கும். குத்தலான நகைச்சுவை என்பது அங்கே சர்வ சாதாரணம். இதே கதை அந்த வட்டார மொழி வழக்கிலில்லாது சாதாரணமாக எழுதப் பட்டிருப்பின் இது மிகப் பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் என்பது நிச்சயம். அதே சமயம் காட்டிலே மருத்துவ தொண்டு செய்யும் ஃபாதர், கிறிஸ்துவத்தை கேலிபேசுபவரே காண்ட்ராக்டர்களால் சீரழிக்கப் பட்ட பெண்ணை மிஷனரி பாதரிடம் சேர்த்து பிழைக்க வைப்பது. ராவணன் சீதையை புஷ்பகவிமானத்தில் கொண்டு சென்ற காலத்தில் பேப்பர் மட்டும் ஏன் கண்டுபிடிக்கவில்லை என்ற கேள்வி? காட்டைப் பற்றிய அசாதாரணமான கதைகள்.. 

மீண்டும்,

என்னுடைய சம்பாத்திய வேட்டைக்காக நான் களத்திற்கு வந்தபோது நான் கண்ணால் கண்ட கேலிகளும், புறங்கூறுதலும், துரோகமும், கற்றுக் கொடுக்கப்பட்டவைகளும், கற்றுக்கொண்டு நான் செய்த கேலிகளும், துரோகமும், கற்றுக் கொடுத்தவைகளும், கற்றுக் கொண்டவைகளும் இந்தக் கதையின் நாயகனோடு பெரும்பாலும் ஒத்துப்போகிறது. களம்தான் வேறு. மனித மிருகம் தன் இனத்தைக் காப்பாற்ற தனக்கென ஏற்படுத்திய காடு என்பது பல ஒழுங்கான வடிவங்களைக் கொண்டது ஒழுங்கு என்பது இயற்கையின் விதியல்ல அதனாலேயே காட்டை நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை. 

தனி மரம் தோப்பாவதில்லைதான், ஆனால் தோப்பிலுள்ள ஒவ்வொரு மரமும் தனிமரம்தான். காடு அதைப்பற்றிச் சொல்வதாகவே எனக்குப் படுகிறது.

காடு - வாசிக்கவேண்டிய புத்தகம்.    

ஏழாம் உலகம்..





ஏழாம் உலகம்..


நல்லவை தீயவை என இவ்விரண்டுமே ஒரே ஓட்டைப் படகில் பிரயாணம் செய்பவைதான். ஆறறிவே அதற்கு வண்ணம் தீட்டுகிறது. இனிப்பு தடவுகிறது. விளம்பரம் செய்கிறது, விற்பனை செய்கிறது. தானே அந்த ஓட்டைப் படகென்று அறியாமல் பிரயாணம் செய்கிறது. மூழ்கிப் போகிறது.

எல்லா உயிர்க்கும் வாழ்தல் என்பது அடிப்படை ஆசைதான். உணவுக்கான சண்டைகளும், கொலைகளும் எல்லா உயிர்களுக்கும் பொது.  ஆனால் பிச்சை எடுத்தல் என்பது மனித இனத்துக்கே சொந்தம். அது தனித்துவமானது. ஆத்திகம், நாத்திகம், மேலும் எல்லா இசங்களும் இதில் அடிபட்டுப்போகும்.  சரி போகட்டும். வேறு வழி இல்லை. உணவு வேண்டும். உயிர் வாழ்தல் முக்கியம் என்ன செய்யலாம் என்று யோசித்தது ஆறறிவு. தன் இரை வரும் வழியில் காத்திருந்து அடித்துப் பசியாறும் விலங்குகளைப் போல பாவங்கள் சுமந்து வரும் மனிதர்களை, இரக்கங்கள் சுமந்து வரும் மனிதர்களைக் குறி வைத்துக் காத்திருந்தது.

ஒப்பீடும் ஆறறிவின் நீட்சியல்லவா? சும்மா வருமா இரக்கமும்? பரிவும்?
அங்கஹீனமும், அருவருப்புகளும், கதறல்களும் மனித இரக்கத்தின் ஊற்றல்லவா?

குறிபார்த்து அடித்தது. யார் கோவிலுக்கு வருவார்கள்? கடவுளுக்கு நன்றி சொல்பவர்களா? கோரிக்கை வைப்பவர்களா? எது முதலில் நன்றியா? கோரிக்கையா? கோரிக்கைகளுக்கு விலை உண்டு. பயத்திற்கு விலை உண்டு.

தர்மம் என்று அதற்குப் பெயர்.

அம்மா சாமி தர்மம் போடுங்கம்மா!

--

இந்த உலகில் பிச்சை எடுக்காதவர் என்று எவரேனும் உண்டா? பிச்சை போடுங்கம்மா. தர்மம் போடுங்கம்மா என்றழைப்பவரை நாம்
பிச்சைக்காரர்களாக்கிவிட்டோம் மற்றவர்களை வேறு பெயர்களில் அழைக்க ஆரம்பித்து விட்டோம். நாமே இயற்கையிடம் கையேந்தும் பிச்சைகள் என்பதனை சுலபமாய் மறந்தோமே அதுபோல.

இந்த நாவல் அது போல பிச்சை எடுக்கும் மனிதர்களின் வாழ்க்கையை அதன் குரூரத்தை, வேதனையை, அவர்களை கவனமாய் பாதுகாக்கும் மனிதர்களை, அவர்களுக்கு நம்மை விட்டா யார் இருக்கா? என்ற இரு பக்கத் தத்துவ சூட்சுமத்தை பக்கம் பக்கமாய் அலசுகிறது.

எழுத்துக்களின் வலிமை என்பது இதுதான். அதுவே ஆச்சர்யமும். கொக்கோகம் கிளர்ச்சி செய்யும். குறி நிமிர்த்தும், வெறி ஏற்றும். காதலெனில் போதை வரும், மோனம் வரும் ஆனால் அவைகளில் விஸ்தரிப்பு முக்கியம் நீட்டி முழக்கிச் சொல்லும்போது, நகாசு வேலைகள் முக்கியம் அப்பொழுதுதான் அது வாசிப்பவரைக் கவரும். ஆனால் இந்தப் புத்தகத்தில் அது இல்லை. உள்ளது உள்ளவாரே சொல்லப் பட்டிருக்கிறது. இல்லை கேட்கப்பட்டிருக்கிறது. எந்த மெனக்கெடலும் இல்லாமல் நீ இதில் யார்? பிச்சை எடுப்பவனா? எடுக்க வைப்பவனா? கூட உதவி செய்பவனா? என்னும் சுய தேடல் உள்ளுக்குள் நம்மை அறியாமலேயே விதைக்கப் படுகிறது. படிக்கும்பொழுது இல்லாவிட்டாலும் என்றேனும் ஒரு நாள் அது முளைவிடும் எண்ணங்கள் தின்று கேள்விப் பூக்கள் சொறியும். அதுவே இதன் வெற்றி.

இதில் வரும் போத்திவேலுப் பண்டாரத்தைப் பார்த்து கோவப் பட முடியுமா? உடலின் குறைகளுக்கேற்றவாறு விலை பேசி மனிதர்களை விற்று, வாங்கி தொழில் நடத்தி வருமானம் பார்க்கும் அவனுக்கும் மூளையின் நிறை/குறைகளுக்கேற்ப எண்களில் மதிப்பிடப்படும் மார்க்ஷீட்டினடிப்படையில்/ அனுபவத்தின் அடிப்படையில் வேலை தரும்.பெறும் நமக்கும் வித்தியாசம் இருக்கிறதா என்ன? மொத்த உயிரினங்களின் சாட்சியாய் சொல்லவேண்டுமெனில் ஒரு மரத்தை அறுத்து மேசை நாற்காலி செய்த என்னைவிட போத்திவேலு ஒன்றும் மோசமில்லை.


--

எல்லையில்லாத ஆகாசப் பெருவெளியும், அதையொத்த நிலமும் நமக்குச் சொல்வதெல்லாம் நாமெல்லாம் தூசிலும் தூசு என்பதையே! ஆனாலும் நான் எனது என்ற சுய மோகம் பிடித்த மனது ஏறி மிதித்து காணாமல் போகும் பலவற்றில் இவர்களின் வாழ்க்கையும் ஒன்று. கடவுளை கல்லால் வடித்தவன் நிச்சயம் புத்திசாலிதான் இல்லையென்றால் மிதிப்பதுவும் வணங்குவதும் ஒரே கல்லென்ற உணர்வு என்றோ வந்திருக்குமே?

இதெல்லாம் படிக்கவேண்டுமா என்றால். ஆம் நிச்சயம் படிக்கவேண்டும். யோசிக்கத் தெரிந்த உயிர்களின் கசடுகள் கிளறப் படவேண்டும். அப்பொழுதுதான் யோசிக்கப் படாதவைகள் வெளிவரும் கூடவே தெளிவும். தெரியும்தானே உலகப் பேரழகிக்கும் உதிரப் போக்கும், மல ஜலமும் உண்டு. வாசனை திரவியங்களுக்கோ அற்பாயுசு!

--



மிதிப்பதுவும் அதுவே
வணங்குவதும் அதுவே
என்றறியாத மனிதக்கூட்டம்
கோவில் சுற்றி
காசு கொடுத்து
சிறுநீர் கழித்து
கவனமாய் குதிகால் கழுவியது
சனி பிடிக்காமலிருக்க..

கடவுளை முதலில்
கல்லால் வடித்தவன்
சிரித்துக் கொண்டிருந்தான்..!



--

ஒரு நன்றி: இந்தப் புத்தகம் நண்பர் ரோமியோ அவர்களால் எனக்குப் பரிசளிக்கப் பட்டது!! :))

விலை: ரூ.150/- கிழக்கு பதிப்பகம்.
புத்தகத்தை ஆன்லைனில் வாங்க விரும்புவர்கள் இங்கே சொடுக்கவும்



.