பலா பட்டறை: நந்தலாலா
Showing posts with label நந்தலாலா. Show all posts
Showing posts with label நந்தலாலா. Show all posts

நந்தலாலா - ない問題

.


நடிப்பு என்பதென்ன கன்னக்கதுப்புகள் ஆடவேண்டுமா? கண்கள் பேசவேண்டுமா? இரண்டு கைகளையும் எங்கே என்ன மாதிரி வைத்துக்கொள்வதென்று ஹோம் வொர்க் செய்வதா? புருவங்கள்? உதடுகள், குரல்? சிரிப்பின் அளவு, ப்ச்.. உடல்மொழி என்ற ஒன்று போதும் என்று நிரூபிக்கிறது படம். க்ளோசப்பில் நம்மைக் கொன்று குவித்த திரைப்படங்களில் கால்களில் முகம் காட்டும் ஃப்ரேம்கள் ஒரு குழந்தைக்கும் குழந்தையாய் இருப்பவனுக்கும் என்ன அளவில் உலகம் தெரியுமோ அதே அளவில் நகர்கிறது காட்சிகள்.

தாய்ப்பாசத்தை வைத்து பிழியப் பிழிய பொன்மனச்செம்மல் முதல் துவைத்துக்காயப்போட்டவர்கள் அதிகம். அவர்கள் எல்லாமே இலக்கணம் மீறாத அம்மாக்கள். குந்திதேவி மார்பிலடித்து அழும் கர்ணன் வதை காட்சி முதல் பாசத்தினாலும் சோகத்தினாலும் காதைக்கிழியவைத்து கண்களை பதம் பார்க்க வைத்த அதே வெள்ளைத்திரையில் முதுகு மட்டும் காண்பித்து பித்துப்பிடிக்க வைக்கிறார் மிஷ்கின். இத்தனைக்கும் கடைசியில் எந்த சூப்பர் தாய்களையும் காட்டாமலேயே!   

வெறும் சம்பவக் கோர்வைகள்தான். ஒரு பயணத்தில், தின வாழ்வில், தினமும் நாம் காணும் ஆனால் நெகிழத்தவறவிடும் தருணங்கள் ஒவ்வொரு நொடியின் கட்டங்களிலும் நகர்ந்துகொண்டே இருக்கிறது. 

படிமானம் குறியீடு என்றெல்லாம் ஆயிரம் இருக்கலாம். அதெல்லாம் சாமானியனுக்குத் தேவையா? புரியுமா? ஒரு கைப்பிடிச் சோறின் ரிஷிமூலம் நதிமூலம் தெரிந்துதான் உண்பேன் என்றால் வயிறு நிறையுமா? அதெல்லாம் விவாதிப்பவர்களுக்கும், திரைப்படத்தை டெக்னிக்கலாக அணுகுபவர்களுக்கும் தேவையானவை. நமக்கு படத்தில் தூரத்தே தெரியும் மதில் ஏறி குதித்த ஒருவன் உடை மாற்றும் நிர்வாணக் காட்சி ஊர் ஒதுக்கிவிட்டதென்று தனியனாய் இருக்கும் ஒரு மாற்றுத்திறனாளிக்கு சிகிச்சை செய்யும் பெண்டாக்டரும் தன்னைப்போன்றவர் என்று தெரியும் காட்சிகள் பிரமிப்பை ஏற்படுத்தினால் போதாதா? பெற்ற தாயால் புரிந்துகொள்ளாத குழந்தைகளை முகமறியாதவர்கள் அன்பு செய்கிறார்கள். 

ஒரு படத்தில் இசை என்பதின் எல்லை என்ன என்பதை இசைஞானி சரியாகச் செய்திருக்கிறார். மெளனத்தைப் போன்றதொரு சிறந்த இசை இல்லை என்பதை அவர் சொல்லக்கேட்டிருக்கிறேன்.  காமிராவின் கோணங்களும், நிறங்களும் அபரிமிதமான உணர்வுகளைத் தருகிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் நான் என்னை அறியாமல் அழுத படம் இது. தன் முத்தத்தை யாருக்கும் தராமல் சேர்த்து வைத்த அந்த சிறுவன் முதல் முறை முகம் முழுக்க முத்தம் தந்தபோது நான் ஏன் அழுதேன்? சிறுக்கி முண்டை என்று தன் தாயை எட்டி உதைக்க வந்தவன் எங்கம்மா எங்கம்மா என்று அழுதபோது நானும் ஏன் அழுதேன்? எது அழுகையை வரவைத்தது? இசையா? காட்சி அமைப்பா? காமெராவா? முக பாவனையா? எது அழுகையைத் தூண்டியது? தமிழ் படத்தில் பார்க்காத அம்மா சென்டிமென்ட்டா? எது அழத் தூண்டியது? 

எந்தவித எதிர்பார்ப்புகளுமற்று ரசித்துப் பார்க்கவேண்டிய மன்னிக்க உணர வேண்டிய படம் இது. காட்சிகள் தீர்மானிக்கும் கதையில் நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று உட்கார்ந்தபடியே ஒன்றிப்போய் படத்தினூடே ஒரு பயணம்.


குறிப்பு: இந்தப்படம் கிகுஜிரோவின் அட்டக்காப்பி அல்லது தழுவல் என்று சொல்லப்படுகிறது. நிச்சயம் இந்தப் படம் ஒரு ரஜினி படம்போலவோ, கமல் படம் போலவோ அல்லது மற்ற மாஸ் ஹீரோ படங்கள் போலவோ வசூலை அள்ளிக்குவிக்கும் என்று நினைத்து அதற்கான முகாந்திரமாக  எடுக்கப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே? இருப்பினும் ஒரு உன்னதமான படத்தை இப்படி எடுப்பதற்கும் அதில் தானே நடிப்பதற்கும், மெனக்கெடலுக்கும் ஒரு தைரியம் வேண்டும். கரண்ட் ட்ரெண்டில் ஒரு படத்தை எடுத்து காசை அள்ளி இருந்திருக்கலாம். (நான் தியேட்டரில் கண்ட பல இளைஞசர்கள் அந்த எதிர்பார்ப்பிலேயே வந்து என்னய்யா கடுப்பா இருக்கு என கமென்ட் அடித்ததையும் கண்டேன்) அந்த விஷயத்தில் மிஷ்கின் பாராட்டப்படவேண்டியவர். மற்றதெல்லாம் அவரவர் மனசாட்சியின் வேதங்கள்தான் கற்பிக்கவேண்டும். 

ஏனய்யா நூறுகோடி மக்கள் இருக்கும் இந்தியாவில் ஒரே ஒரு முகம் கூடவா காந்திபோலில்லை? அட்டன்பரோவைக் கேட்ட கேள்வி ஏனோ நினைவிற்கு வந்து தொலைக்கிறது!


நன்றி!


.