பலா பட்டறை: ஜில்லு....

ஜில்லு....



”ர்ர்ர்ர்ர்ர்ர்ர்”



”ஹலோ.”.

”அப்பா நாந்தான் ..”

”ஜில்லு குட்டி, நீ எப்படிம்மா போன்ல, எங்க இருக்க.. அம்மா எங்க..”

”ஹையோ என்னப்பா நீங்க, மறந்துட்டீங்களா..? உங்க கூடதானே அம்மா. எப்படி இருக்காங்க?..”

”ஜில்லு நீ.. நீ.. தானேம்மா அங்க யாரெல்லாம் கூட இருக்காங்க, பயமா இருக்கா? அப்பாவும், அம்மாவும் கிளம்பி வந்துடறோம்மா, எங்களுக்கும் போர் அடிக்குது நீ இல்லாம..”

”வேண்டாம்ப்பா.. இங்க நான் நல்லா இருக்கேன்... கூட என்ன மாதிரி குட்டி, குட்டி குழந்தைகள் தான் எல்லாரும், செம ஜாலி, நீங்க இங்க வந்தா இடம் கிடைக்காது.. ஹாஹ்ஹா...”

”ஏன் கண்ணு. நான் ஜில்லுவோட அப்பாதானே.. நீ எங்க குட்டிதானே, இல்லத்தில சொன்னா சேர்த்துக்க மாட்டாங்களா??”

”முடியாதுப்பா.. இங்க எல்லாரும் குழந்தைகள் தான், எதிர்க்க ஒரு இல்லம் இருக்கு, உங்கள மாதிரி பெரியவங்க எல்லாரும் அங்கதான் தங்கறாங்க, நான் மேப்ல காட்டின எல்லா நாட்டிலேர்ந்தும் வந்த குழந்தைகளும் என்னோடதாம்ப்பா இருக்காங்க, ஆனா பெரியவங்க எல்லாரும் அங்கதான்..”

”ஜில்லு”

”சொல்லுங்கப்பா,”



“உன்னோட குட்டி ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் இங்கதானே இருக்காங்க நீ மட்டும் ஏன்..?”



”அத நான் இப்ப சொல்லமுடியாதுப்பா.. சரி அம்மாவ கேட்டதா சொல்லுங்க.. என்னோட மேப் பத்திரம் என்ன..வெச்சிடறேன்... பை.”


ரணங்களால் ஆனதா வாழ்வு? எனக்கான வாழ்வு தீர்மானிக்க வெளி காரணிகள் தேவையெனில் நான் எப்படி சுதந்திரமானவனாக இருக்க முடியும்? அடிமைகளும் ஆண்டானின் அதே காற்றை சுவாசிக்கட்டும் என்ற சுதந்திரம் தவிர வேறென்ன சுதந்திரம் இங்கே எல்லாருக்குமானதாய் இருக்கிறது?
அடிமைகளாய் இருக்கவும், சார்ந்து வாழவும், சகிப்புகளும் எவர் திணித்தனர்..


”தீனா... தீனா.. ஹாங் என்னாச்சு? போன் அடிச்சுகிட்டே இருந்துதேன்னு வந்தேன்.. புரூஃப் பார்த்தது போதும். வீட்டுக்கு கிளம்புங்க, குழந்தை போனது போனதுதான் விடுங்க, மனசு லேசாகறவரைக்கும் வேலைக்கு வர வேண்டாம். ”

”இல்ல குணா...என் குழந்தை.. என் ஜில்லு இப்ப போன்ல பேசினா..என் கிட்ட..”

”தீனா.. புரியுதுங்க.. ப்ளீஸ் சொல்றது சுலபம்தான் ஆனா, நிதர்சனம் அது இல்ல. இதெல்லாம் வெறும் பிம்பம். ”

”இல்லைங்க வைப்ரேட்டர் மோட்ல வெச்சிருந்த போன் ஃப்ரூப் ரீடிங்ல இருக்கும்போது அடிச்சு, என் ஜில்லு என்கிட்ட பேசினா..சத்தியமா..பிம்பம் இல்லை குணா.. அவ ஒரு இல்லத்துல இருக்கா, குழந்தைகள் இல்லம், பெரியவங்களுக்கு அனுமதி இல்லையாம், அவங்க எதிர் இல்லத்துலதான் தங்கணமாம்..”

”அழுதுடுங்க தீனா.. அன்னிக்கே சொல்லனம்னு நெனச்சேன்.. நீங்க மனசுல பூட்டி வெச்சுகிட்டு ஜில்லுவ அப்படியே பொதச்சப்பகூட நீங்க அழல.. சரி விடுங்க..என்ன சொன்னா ஜில்லு, குழந்தைங்க மட்டும்தானே அங்க இருக்காங்க.. அப்படின்னா அது கடவுளின் இல்லம்தான்,  நம்மளமாதிரி கற்பிதத்தால் சுயநலமும் அதனால் தவறும் செய்தவர்களுக்கு அங்கே இடமிருக்காது. எதிர் வீடுன்றது நரகமா இருக்கலாம்.. ஜில்லு சரியாதான் சொல்லி இருக்கா. புத்திசாலி குழந்த ரெண்டரை வயசுலயே எல்லா நாட்டையும் பேர் சொன்ன உடனே மேப்ல காட்டின அறிவு கொழுந்தில்லையா..”

”குணா அப்ப ஜில்லு போன்ல பேசுனது..”

”ப்ச் என்ன தீனா, அழுதுடுங்க, கரைச்சிடுங்க, இல்லன்னா மனச அரிக்க ஆரம்பிச்சிடும்.., இப்ப என்ன கடவுளின் இல்லத்துக்கு போகனும் அவ்ளதானே.. வாங்க, நிறைய இல்லங்கள் அப்படி இருக்கு, குழந்தைகள் மட்டும்தான் ஆனா, நம்மள மாதிரி யாராவது கடவுள் வந்து காப்பாத்த  மாட்டாங்களான்னு ஏங்கிட்டு இருக்கு, நமக்கு நிறைவா புள்ளைங்க இருக்கறதால கோவிலோட கடவுள தேடிட்டு வந்திடறோம். ஆனா உண்மையில் கடவுள நீங்க தத்தெடுத்து வீட்டுக்கே கொண்டுவரலாம் தேவை மனசு மட்டும்தாம், பக்தி இல்லை..”

”புரியுதுங்க.. என் ஜில்லு போன்ல என்ன சொன்னான்னு இப்ப புரியிது..”  
  

ஒரு குழந்தை இழந்த தந்தை என்னிடம் செல்லில் பேசியபோது சொன்ன அமைதியான ஒரு சோகத்தின் வெளிப்பாடுதான் மேலே இருப்பது. கடைசி மூன்று வரிகள் என் சேர்க்கை. எல்லாம் வல்ல மகிழ்ச்சி எப்போதும் அவர்களுக்கும் கிடைக்கட்டும்.



காலம் எழுதிய
என்னின் பக்கங்களில்
எல்லா தாள்களும்
கையிலிருந்து விழுந்து
கொண்டே இருக்கிறது..

சோகங்களை மட்டும்
பிரதி எடுத்து ஆச்சரியமாய்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
எத்துனை கண்ணீரிலும்
அது அழியவுமில்லை,
கிழியவுமில்லை..

மகிழ்ச்சி பக்கங்கள்
கேட்பாரற்று என் காலடியிலேயே..



.
அந்த குழந்தை..












.               :(

38 comments:

Paleo God said...

வீடியோ இப்பதான் எனக்கு கிடைத்தது..

குழந்தையை பார்த்து நான் அழுதுவிட்டேன்...

இது எனக்காக நான் இட்ட பதிவில்லை.

எறும்பு said...

:((

எறும்பு said...

குழந்தையை இழந்த அந்த பெற்றோருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

நர்சிம் said...

;( ஹு..ம்

vasu balaji said...

:(. கொடுமை.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மனசு கஷ்டமாயிருச்சு சார்...

ரிஷபன் said...

முடியலிங்க.. அதுவும் வீடியோ பார்த்தா இன்னும் மனசு கனக்குது.. கடவுளே உனக்கு இன்னுமா இந்த விளையாட்டு பிடிக்குதுன்னு கதறத் தோணுது.. குழந்தகளை நேசிக்கற யாருமே கண்கலங்கிப் போயிருவாங்க..காலம்தான் அவங்க மனச தேத்தணும்

ராமலக்ஷ்மி said...

வருத்தங்கள் :( !

நிலாமதி said...

கொடுமை சார்....என்ன வலி ..அந்தக்குழந்தைக்கு நோய் காரணமாகவா?இறப்பு ..விரைவில் எடுக்க தான் இறைவன் இந்த திறமையை கொடுத்தானா? முடியலை சார் அழுதே விடேன்...விரைவில் இன்னொன்றை பெற்றுக் கொள்ள சொல்லுங் கள் .தாங்காது சார்...எவ்வளவு எதிர்பார்ப்பு. மனசு உடைந்து விடாமல் பார்த்துக்கொள்ளுங்க சார் உங்கக் நண்பனை,மனைவியை.

S.A. நவாஸுதீன் said...

சாரி சங்கர். எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை.

பாலா said...

காலைல வேலை பார்க்க விடுங்க ஷங்கர். இப்படி கண்ணு கலங்க விட்டுட்டீங்களே! :(

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஏன் இப்படியெல்லாம் நடக்குது , ரொம்ப வருத்தமா இருக்கு ..

குழந்தையை இழந்த அந்த பெற்றோருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Jaleela Kamal said...

போட்டோ வேற போட்டுட்டீங்க படிக்கும் போதே ரொம்ப மனசு ரண மா இருக்கு.
அந்த குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதல் எல்லாம் என்றும் ஆறாது.
நிற்கும், நடக்கும் இடம் எல்லாம் குழந்தையின் முகம் தான் தெரியும்,
படிச்சிட்டு ரொம்பவே மனசு கழ்டமா இருக்கு.

சைவகொத்துப்பரோட்டா said...

ஈடு கட்ட முடியாத இந்த இழப்பிற்கு, என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

அண்ணாமலையான் said...

என் ஆறுதல்கள்...

சந்தனமுல்லை said...

ஒண்ணும் சொல்ல முடியலைங்க...:-(((

Chitra said...

மகிழ்ச்சி பக்கங்கள்
கேட்பாரற்று என் காலடியிலேயே..


............மனது கலங்கி விட்டது.

ஜீவன்சிவம் said...

மீண்டு வர பிரார்த்திப்போம்.

தமிழ் உதயம் said...

மீள முடியாத சோகம் புத்திர சோகம். அவர்களுக்கு வலியை தாங்கும் வல்லமை கொடு இறைவா.

Unknown said...

பிறக்காத குழந்தை இறந்தபோதே கலங்கிப் போனேன்...

பிறந்து இரண்டரை ஆண்டுகள் மகிழ்ச்சிப்படுத்தி அதன் பிறகு பிரிந்தால்.. ஐயோ நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை.

துபாய் ராஜா said...

கலங்க வைத்த பகிர்வு. இறைவன் சில நேரங்களில் இரக்கமில்லாதவன். :((

செ.சரவணக்குமார் said...

காலையில் பைத்தியக்காரன் பதிவைப் பார்த்து கலங்கிப் போயிருந்தேன். உங்கள் இடுகை அழவைத்துவிட்டது. என்ன சொல்வதென்று தெரியவில்லை ஷங்கர்.

மீன்துள்ளியான் said...

அந்த குழந்தைய பார்த்தாலே மனசு கனக்குது ..பெத்தவங்களுக்கு அந்த ஆண்டவன் தான் துணை நிக்கணும்

PPattian said...

மனது கனக்கிறது.. இதே போல் அதிஷா முன்னர் "ராஜிக்குட்டி" என்று ஒரு கதை எழுதியிருந்தார்.

அந்த பெற்றோருக்கு என் ஆறுதல்கள்.. பிரார்த்தனைகள்

PPattian said...

மனது கனக்கிறது.. இதே போல் அதிஷா முன்னர் ராஜிக்குட்டி என்று ஒரு கதை எழுதியிருந்தார்.

அந்த பெற்றோருக்கு என் ஆறுதல்கள்.. பிரார்த்தனைகள்

ஈரோடு கதிர் said...

அய்ய்யோ

கலகலப்ரியா said...

varthaigal vara mattenguthu...

நாடோடி said...

எவ்வளவோ விசயங்கள் வாழ்க்கையில் வரும் போகும் ..ஆனால் இது போல் சில விசயங்கள் மனதில் ஆறா தழும்பாய் மாறிவிடுகிறது..

திவ்யாஹரி said...

kanneerudan..

ஹேமா said...

கடவுளும் சிலநேரங்களில் அசந்து தூங்கிவிடுகிறாரோ !

ராம்குமார் - அமுதன் said...

அழுதுட்டேன்... கண்ல இருந்து தண்ணி வந்துகிட்டே இருக்கு... கட்டுப்படுத்தவே முடியல.... அந்த வீடியோ இன்னும் இன்னும் அழ வைக்கைறது...
அதுலையும் அந்த அப்பாவோட குரல் 'வருங்கால ஐ.ஏ.எஸ்'ன்னு சொல்லும் போது கதறிட்டேன்....

என்ன மயி_ _ப் புடுங்குன கடவுள்னு மனசு அறையுது... ஆனாலும் கடவுள கொற சொல்லாதன்னு கை கன்னத்துல போடுது... போங்க சார்... என்ன வாழ்க்கை...

புலவன் புலிகேசி said...

//மக்கு நிறைவா புள்ளைங்க இருக்கறதால கோவிலோட கடவுள தேடிட்டு வந்திடறோம். ஆனா உண்மையில் கடவுள நீங்க தத்தெடுத்து வீட்டுக்கே கொண்டுவரலாம் தேவை மனசு மட்டும்தாம், பக்தி இல்லை..”//

உண்மையாவே நல்ல முடிவு ஷங்கர்...


//என்ன மயி_ _ப் புடுங்குன கடவுள்னு மனசு அறையுது... ஆனாலும் கடவுள கொற சொல்லாதன்னு கை கன்னத்துல போடுது... போங்க சார்... என்ன வாழ்க்கை...//

அப்புடில்லாம் ஒருத்தன் கிடையாதுங்க...கடவுளாம் கடவுள்

Vidhoosh said...

சாரி சங்கர். எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

:((((

CS. Mohan Kumar said...

ரொம்ப வருத்தமா இருக்கு ஷங்கர். நம் ஒவ்வொருத்தருக்கும் இருக்கும் பயம் "நம் குழந்தைக்கு ஏதாவது ஆகி நம்மை விட்டு போய்ட்டா" என்பது தான்; பெரும்பாலும் அப்படி நடபதில்லை. அப்படி நடந்த ஒரு நிகழ்வு பார்க்கும் போது மனம் கனத்து போகிறது

கண்ணகி said...

சோகங்களை மட்டும்
பிரதி எடுத்து ஆச்சரியமாய்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
எத்துனை கண்ணீரிலும்
அது அழியவுமில்லை,
கிழியவுமில்லை..


கடவுளுக்குக் கண்ணில்லை. சொல்ல வார்த்தக்ள் இல்லை.

ஸ்ரீராம். said...

ரொம்பவும் கொடுமை. படம் பார்த்தது மனதை இன்னும் பாதிக்கிறது.

Anonymous said...

என் மனத்தின் தழும்புகளை நினைத்துப்பார்க்கிறேன். என் ப்ரார்த்தனைகள்