நினைவிருக்கட்டும்
வைக்கும் பாதங்களடியில்
ஏதோ ஒரு உயிர்க்குடும்பம்
வீணாய் விஷமாய் தூக்கிப்போடும்
ஏதோ ஒன்றும் எவற்றிற்கோ அமுதமாய்
சாப்பிட்டு மூடிய இலையினுள்
பல உயிரிகளுக்கான உணவுகள்
பந்தி முடிந்து வீசிய எச்சில் இலை தொட்டியில்
பந்தி ஆரம்பிக்க காத்திருந்தது காகம், நாயுடன்
சில மனிதர்களும்...
விதியை மதியால் வெல்ல
துடித்தவனின் வானம் பார்த்து
மல்லாந்த வாகனத்திலொரு வாசகம்
'சாலை விதிகளை மதிக்கவும்.'.
நிற்காமல் நான் போனால்தான் என்ன
உன் வீட்டு முற்றத்தில் தான்
அடம்பிடித்து உட்கார்ந்திருக்கிறதே
என் மனம்
முகம் கழுவும்போது கூட சரியாய்
கவனிப்பதில்லை நான்
ஆனால் உன்னால் தான் முடிகிறது
உள்ளங்கைகளை
பச்சையத்தில் அலங்கரித்து காயவைத்து
சிவப்பாக்கும் மருதாணி கோலமிட...
நான்
சிறகுகள் வெட்டப்பட்ட
தந்தை பறவை
கொஞ்சம் பொறு
என் பொன் குஞ்சே
உன் சிறகுகள் உதிர்த்த பிறகு
கேள்விகள் கேள்..
எப்படி பறக்கலாம் என்று
நானும் அப்படித்தான்
தெரிந்துகொண்டேன்..




35 comments:
Post a Comment